எமது வாழ்வின் ஒவ்வொரு புதிய நாளும் புதிய ஆரம்பத்தை ஏற்படுத்த வழிவகுக்கும் நிலைகளைச் சாத்தியமாக்கும் தன்மை கொண்டது. வாழ்தலின் ஒவ்வொரு கணத்தையும் மிகவும் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள வேண்டியது தொடர்பில் நாமே நடவடிக்கை எடுக்க வேண்டும். எமது கையில் தான் எமது இன்றைய நாளின் இனிமையில் சதவீதம் தங்கியுள்ளதென்றால் மறுக்கத்தான் முடியுமா?
எமது வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு நாளும் எமது நீண்ட கால இலக்குகளை அடைந்து கொள்ள வழிசமைக்கும் களமாகும். நாம் ஒவ்வொரு நாளையும் ஒரு ஏணியில் காணப்படும் படியாகவே கணிப்பிட வேண்டும். அதுதான் வாழ்க்கையின் வாழ்தலின் வழி என்று கூடச் சொல்லிவிடலாம். ஆனால், என்ன செய்ய? நாம் ஏணியிலே பல படிகளைக் கடந்து ஏறிவிட்ட போதிலும் அடைந்து விட்ட இடம் பொருத்தமற்றதாக அமைகின்றது என்றால் என்ன செய்வது?
வெற்றியும் மகிழ்ச்சியும் பயணங்கள்தாம். அவை ஒருபோதும் குறிப்பிட்ட முற்றுப்புள்ளிகள் ஆகாது. எம்மால் ஒருபோதும் வாழ்வின் எந்தக் கட்டத்தினதும் இறுதி முடிவாக மகிழ்ச்சியையோ அல்லது வெற்றியையோ கண்டு கொள்ள முடியாது. மாறாக நாம் தாம் வெற்றி மற்றும் மகிழ்ச்சி என்பன காணப்படுகின்ற பாதைகளைத் தெரிவு செய்து எமது பயணங்களைத் தொடர வேண்டும். இவ்வாறு பயணப்படுகையில் வெற்றியையும் மகிழ்ச்சியையும் எம்மால் கண்டு கொள்ள முடியாவிட்டால் அவற்றை எம்மால் ஒருபோதும் கண்டு கொள்ள முடியாது.
மகிழ்ச்சியைக் கண்டடைந்தவர்கள், இலக்குகளை எவ்வாறு அடைவது என்பது பற்றி தெளிவான அறிவைக் கொண்டு காணப்படுவார்கள். அவர்கள், ஒவ்வொரு நாளும் வாழ்க்கையின் மகிழ்ச்சி மற்றும் வெற்றி ஆகியவற்றைக் கண்டு கொள்ள அனுதினமும் உழைப்பார்கள். ஈற்றில் அதில் வெற்றியும் காண்பார்கள்.
செல்வச் செழிப்பு, பௌதீக வளம் என்பனவற்றை பெற்றுக் கொண்டால் வாழ்வில் நாம் மகிழ்ச்சியாகத் திகழ்ந்து விடலாமென நாம் நினைக்கிறோம். வெறும் செல்வம் எமக்கு நீடித்த மகிழ்ச்சியைத் தந்திடுமா? வாழ்வில் எப்போதும் வெற்றியாளர்களாகத் திகழ உதவி செய்து விடுமா? இல்லையே….
எவரும் அவர்கள் செய்கின்ற உழைப்பிற்கு ஏற்ற வகையில் வெற்றி காண்பார்கள். மகிழ்ச்சியே உருவாய் அமையும் வாழ்க்கையை தம்வசம் கொண்டிருப்பார்கள்.
வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கண்டடைய நாம் எம்மிடமே தேட வேண்டும். எம்முள்ளேயே மகிழ்ச்சியை வைத்துக் கொண்டு அவற்றை தொலைத்துவிட்டவர்களாக, வெளியுலகில் தேடித் திரிவது எந்தவகையில் பொருந்தும்.
நான் முன்னொரு பதிவில் குறிப்பிட்டது போன்று, வாழ்வில் சின்னச் சின்ன விடயங்களிலேயே மகிழ்ச்சி பொதிந்து காணப்படும். இன்னொருவருக்கு நாம் செய்யும் உதவியால் நாமடையக்கூடிய மகிழ்ச்சியைப் பற்றி வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அதுதான் வாழ்க்கை! அங்கேதான் மகிழ்ச்சிப் பிரவாகம் ஓயாமல் நிகழ்கிறது. எமக்கு பிரியமானவர்களை இழந்த போது நாமடையும் கவலையை மற்றவர்களுக்கு நாம் செய்யும் உதவிகளால் மகிழ்ச்சியாக பரிவர்த்தனை கூட செய்து கொள்ள முடியும்.
- உதய தாரகை
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அதிசயம், அனுபவம், இயற்கை, உலகம், எண்ணம், கட்டுரை, மேற்கோள், வாழ்க்கை




