இரண்டு வருடங்களும் பத்து நாட்களும்

ஏதோ புதிர் கணக்கொன்றுக்கு விடை சொல்லுமாப் போல், நான் தலைப்பொன்றை எழுதியுள்ளேனே என்றல்லவா நீங்கள் பார்க்கிறீர்கள். ஒரு புதிரும் இல்லைங்க.. கடந்த 18 ஆம் திகதி ஒரு பதிவை நான் நிறத்தில் இட்டிருக்க வேண்டும். சில பல வேலைப்பளுக்களால் அது முடியாமல் போனது. இன்றுதான் அதற்கு நேரமான அவகாசம் கிடைத்தது.

அப்படி என்னதான் ஒரு திகதியில முக்கியமா பதிவு போட வேண்டிக்கிடக்கு என்று நீங்கள் கேட்டிறக்கூடாது என்று நினைப்பதால், என்ன விடயம் என்பதையும் சொல்லியே விடுகிறேன். நிறம் வலைப்பதிவு ஆரம்பித்து இன்றோடு, இரண்டு வருடங்களும் பத்து நாட்களும் ஆகின்றன. மூன்றாவது வருடத்தில் நிறம் வெற்றிகரமாகக் காலடி எடுத்து வைக்கிறது என வைத்துக் கொள்வோம்.

கடந்த இரண்டு வருடங்களில் நிறம் நிறைய பெருமைகளைக் தன்னகம் பெற்றுக் கொண்டது (இதெல்லாம் ரொம்ப ஓவர்.. உதய தாரகை!). நிறம் வலைப்பதிவின் முதலாவது ஆண்டின் “சாதனைகள்” பற்றி நான் பதிப்பித்த பதிவை நீங்கள் வாசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

கடைசி ஓராண்டில் நிறத்தில் பதிப்பிக்கப்பட்ட பதிவுகள் பலவும் உங்களின் அபிமானத்தைப் பெற்றுக் கொண்டதை உங்கள் பின்னூட்டங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் எனக்கு பறைசாற்றின. தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்து தமது கருத்துக்களையும் மறுமொழிகளையும் வழங்கும் நிறத்தின் வலையுலக நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கின்றேன். உங்கள் ஆதரவு தொடர்ந்தும் நிறத்தின் பயணத்தில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றேன். “யாரும் பார்க்காத உதய தாரகையின் வானம்” என்ற சொல்வாக்குடன் கடந்த வருடம் நவம்பர் மாதமளவில் “இன்னொரு பிரபஞ்சம்” என்ற அனுபவத் தொடர் ஒன்றை நிறத்தில் ஆரம்பித்தது உங்களுக்கு ஞாபகமிருக்கும். இத்தொடரில் நான் எழுதிய “எனது முதலாவது காதலி” என்ற தலைப்பிலான பதிவு மிகப்பெரிய வரவேற்பை உங்கள் மத்தியில் பெற்றுக் கொண்டதையிட்டு அக மகிழ்கிறேன். தொடர்ந்தும் எனது வாழ்வின் மறக்க முடியாத அனுபவங்களையும் பாத்திரங்களையும் பற்றி இன்னொரு பிரபஞ்சம் மூலமாக பகிர்ந்து கொள்ளவிருக்கின்றேன். தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

உங்களின் ஆதரவால் புள்ளிவிபரங்களும், நிறத்தை குறிப்பிட்டு சொல்லும் இணையப்பக்கங்களும் நண்பர்களும் பெருகியிருக்கிறார்கள். நான் அறிந்தவற்றை சுவைபடச் சொல்வதே நிறத்தின் மூலம் செய்து வந்தேன். தொடர்ந்தும் அவ்வாறு எனது பதிவுகளை நிறத்தில் வலம் வரச் செய்வேன் என்ற நம்பிக்கையுடன், உங்களது தொடர்ச்சியான ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

இரண்டாம் ஆண்டினை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டிற்குள் நிறம் பயணிக்கும் இத்தருணம் நான் அண்மையில் கேட்ட ஒரு பாடலின் சில வரிகளை இங்கு தரலாம் என நினைக்கிறேன். என்னவோ தெரியவில்லை.. இந்த வரிகள் என்னை அவ்வளவு கவர்ந்து கொண்டது…

கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட
பிம்பங்கள் காட்டும் பார்க்கின்றேன்
புயல் போன பின்னும் புது பூக்கள் பூக்கும்
இளவேனில் வரை நான் இருக்கின்றேன்
முக மூடி அணிகின்ற உலகிது
உன் முகம் என்று ஒன்றிங்கு என்னது
நதி நீரில் அட விழுந்தாலுமே
அந்த நிலவென்றும் நனையாது வா நண்பா

அந்தப் பாடலில் தொடர்ந்து இப்படியும் வரிகள் வரும். எத்துணை அழகு அந்த வரிகளில்…

காலங்கள் ஓடும் இது கதையாகி போகும்
கண்ணீர் துளியின் ஈரம் வாழும்
தாயாக நீதான் தலை கோத வந்தாலும்
உன் மடிமீது மீண்டும் ஜனனம் வேண்டும்
என் வாழ்க்கை நீ இங்கு தந்தது
அடி உன் நாட்கள் தானே இங்கு வாழ்வது
காதல் இல்லை இது காமம் இல்லை
இந்த உறவுக்கு உலகத்தில் பெயரில்லை

இந்தப்பாடல் என்னவாக இருக்குமென்றா நீங்கள் யோசிக்கிறீர்கள்.. ஆம்.. இது “காதல் கொண்டேன்” திரைப்படத்தில் “நெஞ்சோடு கலந்திடு உறவாலே…” என்று தொடங்கும் பாடல் தான் அது.

சரி. மூன்றாவது வருடத்தில் புதிய பதிவுகளோடு சந்திக்கும் எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் இந்தப் பதிவை நிறைவு செய்கிறேன்.

- உதய தாரகை

9 பதில்கள்

  1. வாழ்த்துகள் உதய தாரகை ….!!!

    மூன்றாவது வருடத்தில் இன்னும் சிறப்பான பதிவுகளை எதிர்பார்க்கிறேன்…

  2. நன்றி நிமல்.

    தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் வாழ்த்துக்கும்…

    தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

    இனிய புன்னகையுடன்,
    உதய தாரகை

  3. இனிய வாழ்த்துக்களுடன் வணக்கம்!
    இரண்டாண்டுகளைக் கடந்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் நிறத்திற்கு எனது அன்பு கலந்த வாழ்த்துக்கள். இதுவரையில் பலவிதமான உணர்வுகளை எம்மோடு பகிர்ந்து எம்மை பரவசப்படுத்தியமை மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம். இதேபோல்… இன்னும் இன்னும்…. பல மனப்பகிர்வுகளை எதிர்பார்த்து, உதயதாரகை மேலும் பல தசாப்தங்களை கடக்கவேண்டும் என மனப்ப+ர்வமாக வாழ்த்திக்கொண்டு என்றும் நட்புடன் நிறப்பிரியை.

  4. நன்றி நிறப்பிரியை தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்.

    தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

    இனிய புன்னகையுடன்,
    உதய தாரகை

  5. gud one

  6. இன்றுதான் முதற்தடவையாக இங்கு வந்தேன். எனது பார்வையில படாமல் நிறைய பேர்.. அல்லது நான் தான் தேடாமல் இருக்கிறேனோ தெரியாது. சரி. ஒரு அட்டன்சன் போட்டுட்டு பதிவுகளை படிக்கிறன்.

    நிமலின் நண்பரா?

  7. நன்றி சயந்தன் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்.

    நிமலுடன் வலையுலகத்தினூடகவே அறிமுகம் கிடைத்தது.

    தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள். உங்கள் கருத்துக்களையும் சொல்லியனுப்புங்கள்.

    இனிய புன்னகையுடன்,
    உதய தாரகை

  8. கண்ணாடி என்றும் உடைந்தாலும் கூட
    பிம்பங்கள் காட்டும்_____________பார்க்கின்றேன்

    எங்கோ உதைக்குதே!!!!

  9. எங்கேயும் உதைக்கவில்லை. நீங்க ரொம்ப குழம்பி இருக்கீங்களோ! :-)

    தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.

    இனிய புன்னகையுடன்,
    உதய தாரகை

மறுமொழி இடுக