வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களை நாம் பட்டியலிடப் போனால், அதற்கு முடிவேதும் இருக்கவே முடியாது. அனுபவங்களின் முடிவில் கிடைக்கும் இன்பமோ துன்பமோ எப்போதும் அது இறந்த காலமாய் இருக்கும் நிலையில், பசுமையான நினைவுகளை வழங்கி நிற்கும்.
பொதுமைப்பாடான விடயங்கள் நடந்தேறும் பொழுதும் நாம் கொள்ளும் அழகிய நினைவு ஆனந்தமானது. வாழ்வின் ஒவ்வொரு கணமும் இரசிக்கப்பட வேண்டியதே!
அறியாத விடயத்தை அறிதல்
எனது நண்பர்கள் பலரும் காளான் சவர்க்காரம், காளான் கோப்பி மற்றும் காளான் சாம்பு என்றெல்லாம் பலவிதமான உற்பத்திகள் பற்றி கதைக்கக் கேட்டிருக்கிறேன். அதன் முக்கியத்துவத்தையும் அதனைப் பாவிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றியெல்லாம் “மார்க்கட்டிங் எக்ஸெகடிவ்” போலவே, என்னிடம் கதைக்கக் கேட்டிருக்கிறேன். விசாரித்த போதுதான் தெரிந்தது அவர்கள் உண்மையாகவே அந்தப் பொருட்களின் மார்க்கட்டிங் எக்ஸெகடிவ்ஸ் என்று.. அது இருக்கோட்டும்… இருக்கோட்டும்.
அண்மையில் காளானைக் கலந்த நிலையில் சமைக்கப்பட்ட சோறைச் சாப்பிடும் சந்தர்ப்பம் வாய்த்தது. காளான் கலந்த சோறு என்றவுடனேயே எனது காளான் தொடர்பான விருப்பமின்மை, அந்தச் சோற்றை சாப்பிடுவதா? என்ற கேள்வியை என் மனதுக்குள் தோற்றுவித்தது.
ஆனாலும், கேள்விக்கு பதில் காளான் சோற்றை சுவைக்க வேண்டுமென்பதாய் அமைந்ததால், விருப்பமாய் காளான் சோற்றை புஷிக்கத் தொடங்கினேன். ஆஹா.. அந்தச் சோறு காளான் கலந்த நிலையில் சமைத்திருக்க முடியாது என்ற எண்ணத்தை என்னுள் தோற்றுவித்தது. இதில் என்ன கொடுமை என்றால், காளானின் சுவை எப்படியிருக்குமெனக் கூட அறியாத நான் அச்சோறு காளான் கலக்கப்படாத சோறாக இருக்கலாம் என ஐயம் கொண்டதுதான்.
வாழ்க்கையில் நாம் பல சந்தர்ப்பங்களில் எமக்கு எந்தத் தொடர்புமில்லாத விடயங்களில் கூட, மூக்கை நுழைத்துக் கொண்டு, அதில் தீர்மானங்களை எடுப்பதும், அதுவே சரியென நியாயப்படுவதிலும் பல பெறுமதியான நிமிடங்களை இழந்துவிடுகிறோம் என்றே நான் எண்ணுகிறேன். அறியாத விடயங்களை அறிவதுதான் உயர்வு.
அனுபவம் தரும் கலை
ரவை உப்புமா என்று நான் தமிழ் சினிமாக்களிலேயே அதிகளவு கேட்டிருக்கிறேன். அண்மையில் முதற் தடைவையாக உப்புமாவை சாப்பிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதன் சுவை நான் எண்ணிய சுவையிலும் மிகப் பிரமாதமாய் இருந்தது.

உப்புமா என்பது மிக இலகுவாகச் செய்யும் சமையல் என்றே நான் நினைத்திருந்தேன். உப்புமாவைச் சாப்பிட்ட மறுகணமே எனது நண்பனொருவனுக்கு தொலைபேசி அழைப்பெடுத்து நான் முதற் தடைவையாக உப்புமா சாப்பிட்ட கதையைச் சொன்னேன். அதற்கு அவனோ உப்புமா பற்றிய அதிர்ச்சியான தகவலொன்றைச் சொன்னான்.
உப்புமாவைச் செய்யும் போது, நீரை அளவாக இடவேண்டுமாம். நீரின் அளவு கூடினாலும் பிரச்சினையாம். குறைந்தாலும் பிரச்சினையாம். இந்தத் தகவல் உண்மையானதா அல்லது பொய்யானதா என உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், கொஞ்சம் லொஜிக் இருந்தது. நீரை அளவுக்கு இடுவதென்பது அவ்வளவு கடினமான வேலையா என்று நீங்கள் கேட்டால், நான் ஆம் என்று தான் சொல்லுவேன். ஏன் தெரியுமா?
சோறு சமைக்கும் போதே நான் பல தடைவை சரியான அளவில் நீரை இடாமல், சோறு, களியான கதைகள் பலவுள்ளன (அப்போ, உதய தாரகை உங்களுக்குக் சமைக்கக்கூட தெரியுமா?.. ஆமா நாங்க சமைப்போம்ல்ல. நாங்க கிச்சன் கில்லாடியாச்சே… உஷ்… இது ரகசியம்..)
நான் ஒருமுறை ஒரு கட்டுரைக்காக கிரிக்கெட் விளையாட்டுப் பயிற்றுனர் ஒருவரை பேட்டி காண வேண்டியிருந்தது. அப்பேட்டியின் போது, “Maturity comes with experience” என்று அவர் கூறிய வரிகள் என் காதிற்குள் இன்னும் ரிங்காரம் இடுகின்றன. உண்மையில் அனுபவம் தான் ஆளுமைக்கான தகவை உண்டாக்கின்றது. சமையலுக்கும் இது பொருந்தும்.
மேகமில்லாத தூறல்
வானம் அழகானேதே, பூமி அழகானதே, காதல் மழை தூற செடியெல்லாம் தலையாட்டுதே! என்ற வரிகள் இடம்பெற்ற பாடலை நீங்கள் கேட்டிருக்கக்கூடும். அண்மையில் என்னைக் கவர்ந்த பாடலுல் இதுவும் ஒன்று இதன் காட்சி வடிவமைப்புக்கூட மிக நேர்த்தியாகச் செய்யப்பட்டிருந்தது மெச்சத் தக்கதே!
“குரு என் ஆளு” திரைப்படத்தில் இடம்பெற்ற ஆரம்பப்பாடல் தான் இது. காதல் கண்ணாடியில் எனத் தொடரும் பாடலது. அந்தப் பாடல் முழுக்க அழகிய வரிகள் பொதிந்ததாய் இருந்தது. ஆர்ப்பாட்டமில்லாத மெல்லிய இசை, பாடல் வரிகளின் அர்த்தத்திற்கு அர்த்தம் சேர்க்கின்றன.
மூன்று விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்ததால் உண்டானதே இப்பதிவு.
- உதய தாரகை
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அனுபவம், ஆங்கிலம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, சினிமா, சுவாரஸ்யம்




நல்லதொரு மொழிநடை உங்களுடையது..
தொடர்ந்து எழுதுங்கள்.