நிறைய விடயங்கள் பற்றிச் சொல்ல வேண்டுமென நினைத்தாலும், நமக்கான நம்முடைய தணிக்கைக் குணம் சிலவேளைகளில் பிடிவாதம் பிடித்துக் கொண்டுவிடுவது உண்மையே. தணிக்கை, பிடிவாதம் என்ற சொற்கள் போட்டு காமடி கீமடி பண்றேன் என்று மட்டும் யோசிக்காதீர்கள்.
நான்கு விடயங்களைப் பற்றி நமது வலைப்பதிவுலக நண்பர்கள் தமது கருத்துக்களை பதிந்து கொண்டு வருகிறார்கள். இன்று நிறத்தில் புதிய பதிவு எழுத வேண்டுமென ஆவலில் இருந்த எனக்கு இந்த விடயங்கள் பற்றி யாரும் அழைக்காமலேயே எழுதலாம் என்ற ஆர்வம் கிட்டியது.
நான்கு விடயங்கள் என்னவென்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். அழகு, காதல், கடவுள் மற்றும் பணம் என்பதாகும். எனது பார்வையில் இந்தவொவ்வொன்றும் எப்படியிருக்கிறது எனச் சொல்லப் போகிறேன். கொஞ்சம் கேளுங்களேன். (கொஞ்சம் நீங்க கேளுங்களேன். மச்சான் கொஞ்சம் நீ கேளேன்!!).
அழகு – எல்லாமே அழகுதான்

வானம் அழகானது. பூமி அழகானது என்றெல்லாம் கதையளக்க நான் தயாரில்லை. உலகின் ஒவ்வொரு கணத்தின் சுவாசத்திற்குள்ளும் அழகு தன்னை எப்போதும் உயிர்ப்பித்துக் கொள்ள மறப்பதில்லை. அழகின் நிலைகளால்தான் பூமியின் பூக்களுக்கு மதிப்புக் கிடைக்கிறது. சூரியனின் சுட்டெறிப்புக்கு அர்த்தம் பிறக்கிறது.
வெள்ளை நிறத்தாலான எல்லாமே எனக்குப் பிடிக்கும். ஆனால், வெள்ளையில் சில நிறங்கள் சேர்ந்து உருவாகும் நிலை அதைவிடவும் ரொம்பப் பிடிக்கும். வெள்ளைத் தாள்களில் எப்போதும் கரிய நிறப் பேனாக்கள் கொண்டு கீறி, தாளைக் காயப்படுத்தி அழகு செய்ய இன்னும் பிடிக்கும். (உதய தாரகை!! இதெல்லாம் ஓவராப்படல…)
நேர்த்திதான் எனக்கு அழகு. எப்படியோ, எனக்கு அழகாகத் தோன்றும் விடயங்கள் இன்னொருவருக்கு அசிங்கமாகத் தோன்றும் நிலையுள்ளதே அதுவே உச்ச அழகு. ஏனையதெல்லாம் மிச்ச அழகு!! (பாட்டு ஒன்று இப்போ ஞாபகத்திற்கு வந்திருக்குமே!! பெண்ணழகு உச்ச அழகு!! – பூமியில உள்ளதெல்லாம் மிச்ச அழகு.!! — எட்டில் அழகு, பதினெட்டில் அழகு.. என்று பாடல் தொடர்ந்து செல்லும்..)
குறித்த பாடலில் எனக்கு பிடித்த பல வரிகள் இருந்தாலும்,
வானொலியோடு பாடும் அழகு
பாடிக் கொண்டு சமைப்பதழகு
தாமரை இலையில் நீரழகு
அட தாவணி பெண்போல் யாரழகு!!??ஒவ்வொரு பெண்ணும் ஓரழகு!!
அந்த ஒன்றுக்குள்ளே நூறழகு!!
என்ற வரிகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும் (இருக்கோட்டும். இருக்கோட்டும்.)
அழகு எப்போதுமே அழகுதான்!!!
காதல் – வாசிக்கப் பட வேண்டியது

காதல் என்ற வார்த்தையைக் கூட நான் தணிக்கை செய்தே பல ஆண்டுகள் கழித்திருக்கிறேன். காதலர் தினம், காதல் கோட்டை என திரைப்படங்கள் கூட வெளிவந்த காலத்திலும் காதல் என்ற சொல்லுக்கு எனது நாக்கு கூட மொழி கொடுக்கவில்லை. காதலில் அவ்வளவு எனக்குக் கோபமா? என்று கேட்காதீர்கள். அது அவ்வாறே நடந்தது!!!
எனக்குத் தெரிந்த காதல் எல்லாமே கணினியோடு தான்!! இன்றும் அது தொடர்வது அழகிய ஆனந்தம்!! (நம்புங்க சார்..)
மொழி திரைப்படத்தில் வரும் காதல் காட்சிகள், அவை கொண்டுள்ள உணர்வுகளின் மொத்த ஆழம் என எல்லாவற்றையும் இன்னும் என்னால் ரசித்து வியந்து கொள்ள முடிகிறது. சிலவேளைகளில் திரைப்படங்கள் காதலிக்கச் சொல்லும்! மொழியும் அப்படித்தான்.
கடவுள் – உணரப்பட வேண்டிய உச்சம்

“கடவுள் ஏன் கல்லானான் மனம் கல்லாய்ப் போன மனிதர்களாலே” என்று எம். ஜி. ஆர் படப் பாடலொன்று உண்டு. “ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் அன்பே சிவமாகும். நாத்தீகம் பேசும் நல்லவர்களெல்லாம் சிவமே அன்பாகும்” என்று கமலின் படத்தில் வரும்.
எது எப்படியானபோதும், மனிதனின் குணங்களோடு கலந்த இறைவனின் குணங்கள் தான் மகிழ்ச்சியைத் தரக்கூடியது. இறைவனின் அன்பான குணங்களை அகத்தில் கொள்ளும் நிலையே அகம் முழுக்க ஒளி தரும்.
கொஞ்சம் அனுபவிக்க இந்தக் காணொளி:
பணம் – பத்தும் தருமாம்!!

சிறுவயதில் தந்தையிடம் பணம் கேட்டு வாங்கி, கடையில் ஐஸ்கிறீம் வாங்கித் தின்னும் போதெல்லாம் பணத்தின் மகிமை எனக்குப் புரியவேயில்லை.
பின்னர், கல்லூரி சென்று படிக்கத் தொடங்கியதும் பணத்தின் ‘பவர்’ விளங்கியதெனலாம். இப்போதெல்லாம் எனது நண்பர்கள் பலரும் தொலைபேசியில் அழைப்பெடுத்துக்கூட பணம் பற்றித்தான் கதைக்க முனைகிறார்கள். ஏனென்று கேட்டால், காசு தான் கடவுள் என்று வேறு பில்ட்அப் கொடுக்கிறார்கள். என்ன கொடுமை சார் இது!!??
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று யாரும் சும்மா சொல்லியிருக்கவே மாட்டாங்க என்பதில் நான் ரொம்பத் தெளிவாய் இருக்கேன்.
போதும். போதும்.. (எனக்குச் சொன்னேன்!!)
- உதய தாரகை
பணம் என்ற தலைப்பின் கீழ் நான் பதித்துள்ள நிழற்படம் கடந்த வருடம் எனது கையடக்கத் தொலைபேசி மூலம் எடுக்கப்பெற்றதாகும். சில்லறைக்காசுகளை சேர்த்து வைத்த எனக்கு இந்த மகிழ்ச்சி எஞ்சியது அழகு!
:இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது அதிசயம், அனுபவம், அழகு, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, சுவாரஸ்யம், புதியவை, மேற்கோள், வாழ்க்கை




//கொஞ்சம் அனுபவிக்க இந்தக் காணொளி://
காணொளி எதனையும் காணவில்லையே…
காசேதான் கடவுளப்பா – அண்மைக்காலமாக என்னையும் உடன்பாட்டுக்கு இழுக்கிறது.
கடவுள் பற்றிக் கூறியிருப்பது போதவில்லை போலிருக்கிறது. இருதாலும் அதன் கீழ் போடப்பட்டிருக்கும் படம் கடவுள் பற்றிய உங்கள் எண்ணம் பற்றி ஓரளவுக்கு ஊகிக்க உதவியது.
உங்களைக் காதலிக்கச் சொன்ன இன்னும் சில் திரைப்படங்களை பட்டியலிடுக. (வேற்றுமொழிப் படங்கள் உட்பட)
எனக்கும் நேர்த்திதான் அழகாகப் படுகிறது.
றம்ஸி வாங்கோ.. மன்னிக்கவும் காணொளியைச் சேர்க்க மறந்துவிட்டேன். இப்போது சேர்த்துவிட்டேன்.
காணொளி சேர்த்த பின்னர், கடவுள் பற்றிய விடயங்கள் பல பதிவில் சேர்ந்திருக்கும் என எண்ணுகிறேன்.
என்னைக் காதலிக்கச் சொன்ன படங்கள் பற்றி பதிவொன்றிடலாம் எனத் தோன்றுகிறது. கொஞ்சம் பொறுத்தருள வேண்டும் றம்ஸி.
நன்றிகள் பல..
தொடர்ந்தும் நிறத்துடன் இணைந்திருங்கள்.
இனிய புன்னகையுடன்,
உதய தாரகை
பல விடயங்களில் நானும் உங்கள் கட்சிதான்..
நன்றி யோகா தங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.
இனிய புன்னகையுடன்,
உதய தாரகை