(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 17 செக்கன்களும் தேவைப்படும்.) [?]
வரலாறு சொல்கின்ற பல விடயங்கள் ஆச்சரியத்தின் ஆதாரங்களாக இருப்பதுண்டு. கண்டுபிடிப்புகள் பல எண்ணங்களின் வித்தியாசமான அணுகுகையால் உண்மையான விடயங்களாகப் பரிவர்த்தனை செய்யப்பட்டதும் வரலாற்றின் அத்தியாயங்கள்.
அப்படியான வரலாற்றின் அத்தியாயமொன்றை பகிர்ந்து கொள்கிறேன்.
ஆதர் ப்ரை — 3M என்ற நிறுவனத்தின் கடதாசிப் பிரிவில் பொறியியலாளராக பணி செய்தார். 1974 இன் குளிர்காலத்தில் பசைகளைப் பற்றிய உருவாக்கத்தில் ஈடுபட்ட செல்டன் சில்வர் என்ற பொறியிலாளர் வழங்கிய உரையைக் கேட்பதற்காகச் சென்றிருந்தார். சில்வர், மிகவும் வலிமையற்ற பசையொன்றை உருவாக்கி அது பற்றி உரையைக் கேட்க வந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
அவரால் உருவாக்கப்பட்ட பசையால், இரண்டு கடதாசிகளைக் கூட இறுக்கமாக ஒட்டிக் கொண்டிருக்கும் வகையில் செய்ய முடியவில்லை. அறையில் இருந்த அனைவர் போலவும், ப்ரையும் பொறுமையாக சில்வரின் உரையைச் செவிசாய்த்துக் கொண்டிருந்தார்.
யாராலும், குறித்த வலிமையில்லாப் பசையை உபயோகப்படுத்திக் கொள்வதற்கான பிரயோக நிலை அவதானிப்புகளை எண்ணிக்கூட பார்க்க முடியவில்லை.
“ஒட்டாத பசையால் அப்படி என்னதான் பண்ணிவிட முடியும்?” — கேட்கப்படாமலே அனைவரினதும் மனதில் தோன்றிய வினா.

ஆனால், ஒரு ஞாயிற்றுக் கிழமை, ப்ரையின் எண்ணங்களுக்குள் இந்த ஒட்டாத பசை வித்தியாசமான வகையில் ஒட்டிக் கொண்டது.
தேவாலயத்தில் ஆராதனைப் பாடல்களைப் பாடிய ப்ரை — தான் பாடவேண்டிய பாடல் காணப்படுகின்ற பக்கத்தை அடையாளப்படுத்தி வைக்க சின்னதொரு கடதாசியை புத்தகக் குறியாகப் பயன்படுத்தினார். ஆனால், துரதிஷ்டவசமாக அந்தக் கடதாசி இருந்த இடத்தை விட்டு அடிக்கடி விழுந்து கொண்டேயிருந்தது.
ஆராதனைப் பாடல்களுள்ள பக்கத்தை குறித்து வைத்துக் கொள்கின்ற வேலையை அது செய்ய மறுத்தது போல் தோன்றியதால், புத்தகம் பூராக ப்ரை பாடலை தொடர்ச்சியாகத் தேடிப் பாடிக் கொள்ள வேண்டியதாகியது.
அதுவொரு கட்டாயமாகத் திணிக்கப்பட்ட தீர்க்கப்படமுடியாத பிரச்சனையாகவே ப்ரைக்குத் தோன்றியது.
இப்படி ஆராதனைகளில் ஈடுபட்டிருந்த ப்ரைக்கு அட்டாகாசமான எண்ணமொன்று உதித்தது. ஒட்டாத பசையைக் கொண்டு, மீளப்பயன்படுத்தக்கூடிய புத்தகக் குறிகளை உண்டாக்கலாம் என எண்ணலானார்.
அந்தப் பசையின் ஒட்டுகின்ற வலிமை குறைந்து காணப்படுவதால், புத்தகத்தின் பக்கத்தில் அதனைக் கொண்டு சின்னக்கடதாசியொன்றை ஒட்டலாம். ஒட்டிய கடதாசியை அகற்றுகையில், அது ஒட்டிய பக்கத்தையும் கிழிக்காது.
இதுவே இன்று உலகளவில் அலுவலகங்களில் ஏன் வீடுகளிலும் தான் அதிகமாகப் பயன்படும் போஸ்ட்-இட் நோட்டாக (Post-it Note) உருவாகியது.
ஒட்டாத பசையோடு ஒட்டிக்கொண்ட ப்ரையின் யோசனை — அனைத்தையும் மாற்றி போட்டுவிட்டது.
“நம்மைச் சூழவுள்ள உலகத்தில் ஆயிரம் விடயங்கள் எமது புலன்களின் அவதானத்தின் கோணத்திற்குள் அகப்படாமல், வெளியாகிக் கிடக்கிறது. புலன்களுக்கு புலன் கொடுத்தல், பலன்கள் பலவற்றைப் பெற்றுத் தரலாம். உருவாக்கும் நேரம் இதுதான். நீங்கள் தயாரா?” — கோபாலு கேட்கிறான்.
போனஸ் தகவல்: போஸ்ட்-இட் நோட்ஸ் பலவற்றைப் பயன்படுத்தி 2009 ஆம் ஆண்டு, அற்புதமாக அசைவூட்ட குறுந்திரைப்படமொன்றை பேங்க்-யஓ லியோ உருவாக்கி வெளியிட்டிருந்தார் — வித்தியாசமாகவிருந்தது. அந்தக் காணொளிக்கான இணைப்பு இது.
- உதய தாரகை
மறுமொழி சொல்லியனுப்பி ட்விட்டரில் தொடர.. Follow @enathu
பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.
Filed under: அதிசயம், அனுபவம், இயற்கை, உணர்வு, உலகம், எண்ணம், கட்டுரை, சுவாரஸ்யம், தொழில்நுட்பம், மேற்கோள், வாழ்க்கை, விஞ்ஞானம்








உங்களின் இந்த பதிவின் சில பகுதிகளை எனது வானொலி நிகழ்ச்சியில் பயன்படுத்தி இருக்கிறேன். பயனுள்ள பதிவுக்கு நன்றி…
நன்றி தகவலுக்கு. பதிவின் உள்ளடக்கம் தங்களுக்கு பயனுள்ளதாய் அமைந்தது பற்றி மகிழ்ச்சி. தொடர்ந்தும் நிறத்தோடு நிறைந்திருங்கள்.