அறிவில்லாத மொழி

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  2 நிமிடமும் 23 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

அறிவென்பதை நீ ஒரு மொழி என நினைத்துக் கொண்டால், என்னை மன்னிக்க வேண்டுகிறேன். அறிவைப் பெறுகின்ற ஒரு ஊடகமாகவே மொழியை நான் காண்கிறேன். வெறுமனே மொழிப்புலமை கொண்ட ஒருவரை அறிவுடையார் என்று நீ இனங்காட்ட முடியாது.

ஆங்கிலமென்பது, ஆங்கிலக்காரனுக்கு தாய் மொழி. தமிழ் என்பது தமிழனுக்கு தாய் மொழி. ஆங்கிலக்காரனால் சரளமாகக் ஆங்கிலம் கதைக்க முடிவது இயல்பான விடயம். அதேபோல், தமிழனால் தமிழைச் சரளமாகக் கதைக்க முடிவதும் இயல்பான விடயம். இந்த நிலைகளை அறிவின் உச்சமென்று யாரும் கணக்கிட்டுவிடக்கூடாது.

ஆங்கிலம் சரளமாகப் பேசத் தெரிந்த சில ஆங்கிலக்காரனால், Beautiful என்ற சொல்லிற்குண்டான, எழுத்துக்களைக் கூட்டிவிடத் தெரியாமலிருக்கிறது. அது போலத்தான் தமிழைச் சரளமாகப் பேசத் தெரிந்த சில தமிழருக்கு, “அழகு” என்ற சொல்லிற்கு எந்த “ழ” வரும் என்ற குழப்பம் இருக்கிறது.

அதேபோல் தான், ஒரு ஆங்கிலக்காரன் தமிழைச் சரளமாகக் கதைப்பதால், அறிவுடையவனாக ஆகிவிட முடியாது. ஆனால், அவனால், தமிழிலுள்ள அறிவுகளை அறிந்து தன்னகம் எடுத்துக் கொள்ள முடியுமாயிருக்கும். இது ஆங்கிலத்தை சரளமாகக் கதைக்கின்ற தமிழனுக்கும் பொருந்தும். ஆக, மொழி என்பது ஊடகம் என்பதை மனத்தில் நிலைக்கச் செய்வோம்.

language-knowledge

நான் மேற்சொன்ன இரண்டு மொழிகளுமே தெரியாமலேயே, அறிவில் உயர்வாய் நிலைத்து நிற்கும் மனிதர்களும் உள்ளனர். அறிவென்பது, பாடசாலையில் கற்று வருகின்ற விடயமல்ல. அல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒரு தடவை சொல்லியிருப்பார், “நீ பாடசாலையை விட்டு வெளியேறி, அங்கு நீ கற்றவற்றை எல்லாம் மறந்ததன் பின்னும் உன் ஞாபகத்தில் எஞ்சி நிற்கும் விடயங்கள்தான், கல்வியாகும்”.

வெறுமனே அறிவைப் பெற்றுக் கொள்வதால் அல்லது பட்டத்தைப் பெற்றுக் கொள்வதால் யாரும் அறிவுடையவர்களாய் ஆகிவிட முடியாது. அறிவோடு சேர்ந்த அனுபவம் தான் ஒருவனின் அறிவுடைமையை தீர்மானிக்கிறது. அனுபவம் என்பது, அறிவை தகுந்த வகையில் பிரயோகிப்பதால் தோற்றம் காண்பது என்பதை நீ புரிந்து கொள்ள வேண்டும். அனுபவம் மூலம்தான், அறிவைப் பெறுதல் சாத்தியமாகிறது.

மொழியை, அறிவாகக் காண்கின்ற ஒரு சமூகம் தொடர்ச்சியாக தன் பக்க நியாயங்களை முன்வைத்து, தன் தலைக்கணத்தை காட்சிப்படுத்த ஆர்வம் காட்டிக் கொண்டிருக்கிறது. மொழிப்புலமை கொண்டவனால், அறிவைப் பெற்றுக் கொள்தல் இலகுவாக்கப்படலாம் என்ற உண்மை மறுக்க முடியாவிட்டாலும், வெறுமனே மொழிப்புலமை கொண்டதன் காரணமாக, அறிவு நிலையில் உயர்ச்சி அடைந்து விட்டார் என எண்ணுவது முட்டாள்தனமாகும்.

எழுத்து வடிவாக இருந்தாலும், ஒலி வடிவாக இருந்தாலும் மொழி என்பது, குறியீடுகளின் தொகுப்பு. ஒரு குறியீடு என்கின்ற விடயம், இன்னொரு விடயத்தை குறிக்கின்ற குறியீடாகவே இருக்கிறது. உலகிலுள்ள மொழிகள் யாவும், இதனையே செய்கின்றன.

அறிவை, மொழிகள் கடந்த ஒரு விடயமாகவே நான் காண்கின்றேன். சில நேரங்களில், மொழியின் ஆதிக்கம், பரந்துபட்ட அறிவை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புக்களை இழிவளவாக்கிவிடும் தன்மை கொண்டதையும் இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். தன் மொழியிலல்லாத குறிப்புகளை, இன்னொரு மொழியில் இருந்து பெற்றுக் கொள்ளத் தேவையில்லை என்ற “வித்துவக்காய்ச்சல்” கொண்ட பலரையும் நான் கண்டிருக்கிறேன்.

எந்த மொழியை தாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற சிந்தனையே இல்லாது, தமது அனுபவங்கள் மூலமாகத் திரட்டிய அறிவை, புரிகின்ற ஒரு பொதுவான மொழியில், கேட்பவர் விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் பகிர எத்தணிக்கும் மனிதர்களை நான் சந்தித்திருக்கிறேன். அவர்களின் ஆர்வமெல்லாம், தாம் அறிந்து கொண்ட விடயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பது தான். அவர்கள் அறிந்த மொழி என்பது அவர்களின் அறிவுப் பெறுகைக்கு ஆதாரமாய் இருந்தது என்பது மட்டுந்தான் மொழிக்கு அவர்களால் வழங்கக்கூடிய தகுதியாகும்.

பகிர்தலின் பலம் பற்றி அறிந்தவர்கள் அவர்கள். எனக்குப் படைத்தலிலும் பகிர்தலிலும் உள்ள ஆர்வம் பற்றி உங்களிடம் ஏற்கனவே, படைத்தலும் பகிர்தலும் என்ற பதிவின் மூலம் சொல்லியிருக்கிறேன்.

அறிவைப் பகிர்தல் என்பது மொழிகள் கடந்தது. பகிர்தலின் போதுதான் புதிய அனுபவங்கள் வாயிலாக அடையக்கூடிய அறிவுடைமை பற்றிய தெளிவு கிடைக்கிறது. புறச்சூழலில் காணப்படுகின்ற விடயங்கள் எமது புலன்களுக்கு தருகின்ற அடைவுகளின் மூலம், அறிவு தோற்றம் காண்கிறது. இந்த நிலையில், மொழி எந்த நிலையிலும் பங்கு கொள்ளவில்லை. அதைப் பகிர்ந்து கொள்ள, அதை ஒழுங்கமைத்துச் சொல்ல ஆதாரமான ஊடகமாக, மொழி ஈற்றில் உதவுகிறது.

அறிவின் பகிர்தலின் அவசியம் பற்றி இன்னொரு பதிவில் விரிவாகச் சொல்ல எண்ணியுள்ளேன்.

“மொழியினதும் அறிவினதும் அடையாளங்கள் பற்றிய தெளிவை நீ பெற வேண்டியிருக்கிறது. அறிவைக் கூட்டிக் கொள்ள, நீ அனுபவத்தை பெருக்கிக் கொள்ள வேண்டும். நீ கேட்பதெல்லாம், கதைப்பதெல்லாம் அறிவன்று, அவை தகவல்கள்.

உலகத்தை ஆட்சி செய்கின்ற ஒரு பெறுமதிமிக்க நாணயமாக அண்மைக்காலமாக தகவல்கள் மாறிவருகின்றன. தகவல்கள் எம்மைச் சூழ நிறைந்து கிடக்கின்ற நிலை அற்புதமானதுதான். அவை உன் அறிவுத்தாகத்திற்கு துணையாக வரலாம். ஆனால், தகவல்களை நீ ஒருபோதும் அனுபவங்கள் என்றோ உண்மைகள் என்றோ நம்பிவிடக்கூடாது. அவற்றை அனுபவங்கள் மூலமாக ஆய்ந்தறிதலே உன் அறிவின் விருத்திக்கு ஆதாரமாய் அமையும்” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

எழுத்தழகியல் அனுபவம் – பாகம் ஒன்று

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  2 நிமிடமும் 49 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

ஒவ்வொரு மொழியின் எழுத்துக்களின் வடிவங்கள் தனித்துவமான தன்மைகளைக் கொண்டுள்ளன. மொழிகளின் தனித்துவத்தின் அடையாளமாக எழுத்துக்களின் வடிவங்கள் காணப்படுகின்ற நிலை முதன்மையானது.

தமிழ் மொழியின் எழுத்துக்களின் வடிவங்கள், காலங்காலமாக சின்னச் சின்ன மாறுதல்களுக்கு உட்பட்டு, மாற்றங்கள் மூலமாக வளர்ந்து வந்திருக்கிறது. பண்டைய காலத்தில் ஒரு குறிப்பிட்ட எழுத்தொன்றை எழுதும் முறை என்பது பின்னாளில் மாற்றங்கள் பலதையும் கொண்டு அக்குறித்த எழுத்து இன்னொரு வடிவமாக உருப்பெற்ற வரலாறுகளும் உண்டு.

lettering-01

மாற்றங்கள் என்பதை யாராலும் தவிர்க்க முடியாது. அதுபோலவே, மாற்றம் ஒன்று மட்டுந்தான் மாறாதது என்பதையும் நீ அறிவாய்.

எழுத்துக்கலையில் எனக்கு அதீத ஆர்வமென்பது எனது சிறுவயதிலேயே தோன்றியது என்பேன். அப்பியாசப் புத்தகங்களில் எழுதுகின்ற எழுத்துக்களைக் கூட, ஒரு வித்தியாசமான நிலையில் எழுத வேண்டுமென்கின்ற ஆர்வம் தரம் ஆறு, ஏழு கற்கின்ற நிலையின் போதே தோன்றியது.

தரம் ஆறு கற்பதற்கு முந்திய காலப்பகுதியில், எழுத்துக்களை அழகாக உருப்பமைய எழுத வேண்டுமென்ற ஆர்வம் அதீதமாய் இருந்தது. இதற்கு எனக்கு ஆசானாய் இருந்த, ஷெரீப் சேர் அவர்களின் அற்புதமான அழகிய எழுத்துக்கள் உத்வேகமாய் இருந்தன என்பதை இங்கு பதிவு செய்ய வேண்டும்.

பின்னாளில், தரம் நான்கு கற்கின்ற போது, ஆசரா டீச்சர் (எங்கள் பாடசாலையில், ஆசிரியை ஒருவரை நாங்கள் டீச்சர் என்றே அழைப்போம்), எழுத்துக்களை அழகாக எழுதுவதை எப்படிச் சாத்தியமாக்கலாம் என்பதை அவர் கோப்பு உறைகளில் மாணவர்களின் பெயர்களை, சமாந்தரமான மெல்லிய கோடுகள் வரைந்து அற்புதமாக எழுதிய விடயம் சொல்லித்தந்தது.

இவ்வாறு எழுத்துக்களை எவ்வாறு அழகாக எழுதலாம் என்கின்ற தெளிவை, நான் அடைந்த போது, என் எழுத்துக்களிலும், அழகு ஒட்டிக் கொள்ளக் கண்டேன். அது மிகவும் அற்புதமான அனுபவம்.

அழகிய எழுத்துக்களைக் எழுதுகின்ற தகவைப் பெற்றிருந்த நான் இந்நிலையில், எங்கெல்லாம் நான் எழுத வேண்டுமோ, அங்கெல்லாம் என் எழுத்துக்கள் அழகாய் இருக்க வேண்டுமென்பதில் கரிசணை காட்டினேன். எனது நண்பர்களுக்கு நான் எழுதிய “ஆட்டோகிராஃப்” பற்றி இன்றும் அவர்கள் பூரிப்படைந்து பேசுவதைக் காணும் போது, நினைவுகளின் சுகமான பக்கங்கள் சுவைக்கத் தொடங்கும்.

தமிழ் எழுத்துக்களைப் போன்றே, ஆங்கில எழுத்துக்களையும் அழகாய் எழுத வேண்டுமென்கின்ற ஆர்வமும் என்னோடு எப்போதும் இருந்தது. அது றோயல் கல்லூரியில் கல்வி கற்ற காலம், ஆங்கில பத்திரிகைகளில் அச்சாகி வருகின்ற பல எழுத்துருக்களின் வடிவங்களையும் அதுபோன்றே எழுத முயற்சிப்பேன். அந்த முயற்சியின் பெறுதிகள், என் அப்பியாசப் புத்தகத்தின் பின் பக்கங்களை அழகு செய்து கொண்டிருக்கும்.

எழுத்துக்களை அழகாக எழுத வேண்டுமென்கின்ற ஆர்வத்தின் விளைவு, எழுதுவதை தொடர்ச்சியாக பயிற்சி செய்ய வேண்டுமென்பதை இலகுவாக்கியது. ஆர்வங்கள் தான், ஒரு வெற்றியின் முக்கிய ஆயுதமாக இருக்க முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.

இதற்கிடையில், 1997இல் கணினிகளில் காணப்படுகின்ற ஆங்கில எழுத்துருக்கள் பற்றிய வியப்பு என்னிடம் இருந்தது. கணினித்திரையில் அழகிய எழுத்துருக்களைக் காணும் போதெல்லாம், இது எப்படிச் சாத்தியமாகிறது? இதனை இவர்கள் எப்படி உருவாக்கின்றார்கள்? என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருப்பேன்.

இவை பற்றியும் அறிய வேண்டுமென்ற ஆர்வம் தோன்றியது. தேடினேன். அந்நாளில், Macromedia என்ற மென்பொருள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட Macromedia Fontographer என்ற மென்பொருளின் மூலமாகவே எழுத்துருக்கள் உருவாக்கப்படுகின்றன என்பதை அறிந்து கொண்டேன். பின்னாளில், Macromedia நிறுவனத்தை Adobe நிறுவனம் கொள்வனவு செய்ததும், ஆனாலும், Fontographer ஐ இப்போது, FontLab நிறுவனம் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

அந்த மென்பொருள் கொண்டு, மௌஸின் உதவியால் ஆங்கில எழுத்து வடிவங்களைச் செய்து, அதனை எழுத்துருவாக மாற்றி, உயர் மகிழ்ச்சி அடைந்து கொண்டேன். படைத்தலின் பின்னரான, வெற்றியின் மகிழ்ச்சியை வர்ணிக்க முடியாது என்பதையும் இங்கு சொல்லியே ஆக வேண்டும்.

அப்போதைய காலத்தில் மௌஸின் தயவால் உருவாக்கப்பட்ட அந்த எழுத்துருக்கள் அவ்வளவு அழகானதான இருக்கவில்லை. இருந்தாலும், ஈற்றில் எழுத்துருவொன்றை என்னால் உருவாக்கி அதற்கு நான் விரும்பிய பெயரை வைக்க முடியுமானது பற்றிய பூரிப்பு என் மனதில் தொடர்ச்சியாக இருந்தது.

பின்னாளில், 2002இல் எனது நண்பன் ஆமில் ஜெளஸி மூலமாக, Calligraphy பற்றிய அறிமுகம் கிடைத்தது. அதன் வாயிலாக, அவனின் அற்புதமான அழகிய ஆங்கில எழுத்துக்களைப் போன்றே நானும் எழுத வேண்டுமென்ற ஆர்வம் தோன்றியது. முயற்சித்தேன். முடிந்தது.

ஆனாலும், Calligraphy பற்றி, இன்னும் நிறைய அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் தோன்றியது, Hand lettering பற்றிய அறிவை விருத்தி செய்வதன் மீதான காதல் அதிகமாகியது. அது பற்றி நான் சில நூல்களைப் படித்தேன். இன்னும் பல இணையத்தளங்களில் காணப்படுகின்ற அது பற்றியதான விடயங்களை அறிந்து கொண்டு குறிப்பெடுத்துக் கொண்டேன். அவற்றை என் எழுத்துக்களிற்கு பிரயோகித்தேன். எழுத்தின் வடிவம் இன்னும் அழகாக மெருகேறியது.

நான் உயர் தரம் கற்கின்ற போது, ஆசிரியர்கள் எவ்வளவு வேகமாகக் குறிப்புகளைச் சொன்னாலும், அந்த வேகத்திற்கு ஈடு கொடுத்து, எழுத்துக்களை அழகாக எழுதக் கூடிய தகவை, எழுத்துக்களை அழகாக எழுத வேண்டும் என்கின்ற ஆர்வமும் பயிற்சியும் எனக்கு வழங்கியது.

இவ்வாறாக எழுத்தழகியல் பற்றிய எனது ஆர்வம் தொடர்ச்சியாக வளர்ந்து கொண்டேயிருந்தது. அண்மையில், அந்த ஆர்வத்தின் வெளிப்பாடாய், பல ஆங்கில எழுத்துருக்களை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறேன். இன்னும் பல வடிவமைப்புகளிற்காக பிரத்தியேகமான எழுத்துக்களை வடிவமைத்திருக்கின்றேன். தமிழில் Unicode நிலையிலமைந்த எழுத்துருவொன்றை இந்நாளில், வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன்.

இன்னும் சொல்வேன்…

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

“அழகு” என்ற சொல் என்றும் அழகானதன்று

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 7 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

முகத்தை அழகென்றும் முடியை அழகென்றும் தமிழை அழகென்றும் தன்னை அழகென்றும் சொல்கின்ற உலகப்போக்கு என்பது இன்று நேற்று தோன்றியதல்ல. அழகை ஆராதிக்கும் பழக்கம் ஒவ்வொரு மொழியிலும் ஆளப்பட்டிருக்கும் விதமே தனியழகானதுதான்.

ஆனால், அழகு என்பது வதனத்தின் முகவரிக்குக் கொடுக்கும் முத்திரைதான் என்றால் இல்லையென்றே சொல்வேன். நகரும் மலைகள், மனதோடு பேசும் சிரசுகள், மரங்களை வெட்டிச்செல்லும் காற்றின் சீற்றம் எல்லாமும்தான் அழகு நிறைந்தவை.

வாழ்க்கை என்பதுகூட ஒருசொல்லாக இனங்கண்டுவிடப்படக் கூடாதது. அது அழகான வாழ்க்கை என்ற அடைமொழிக்குள்ளும் அடக்கப்படக்கூடாதது. பசி கொண்ட வாழ்க்கையின் பெறுதிக்கு கிடைக்கின்ற பரிசு — அழகு. வியர்வை சிந்தி உழைக்கின்ற வாழ்விற்கு கொடுக்கின்ற வலிகள் — அழகு. பொய் கொண்டு சேர்க்கும் மொழியின் விந்தையான நடனம் — அழகு.

“அழகு” என்பது ஒரு பொருளா என்றால் இல்லை என்றுதான் பதில். பொருளின் அழகைக்கூட்டும் அடைமொழிதான் அழகு என்பது வெளிப்படையானது. வான நட்சத்திரங்களின் பெறுதியான நீயும், அழகின் அடைமொழிதான்.

beauty-azhagu

சூரியன் கக்கும் சூட்டிற்கு புதிதாக யாரும் பெயர் வைப்பதில்லை. அதுவொரு அழகிய சூடு என்று யாரும் சொல்லிவிட்டதாகத் தகவலில்லை. எரிமலைகளின் பெறுதிகளாய் வருகின்ற தீக்குழம்பின் அளவைக் கண்டு யாரும் அதற்கு பெயர் வைத்ததாய் வரலாறு இல்லை. அழகிய எரிமலை என்று எரிமலையை ஆராதிப்பதாய் கேள்விப்பட்டதில்லை.

உன் உணர்வுத்தீயில் வெந்து ஆவியாகும் உணர்ச்சிகளின் பெறுதிகளுக்கு யாரும் அழகு என்று அர்த்தம் சொல்வதில்லை. அழகான உணர்வுகளுக்கு அழகு என்ற அடைமொழி இல்லாமலேயே அழகாய்த் தோன்றிவிட முடிகிறது.

அழகு என்பது எப்போதும் பாராட்டப்படும் வார்த்தையாக நீ எண்ணிக் கொள்ளக் கூடாது. நீ “அழகு” என்ற அடைமொழிக்குள் காண்கின்ற எழிலை, இன்னொருவன், “அசிங்கம்” என்பதாய் உணர்வதும் மனித இயல்பின் அழகிய நிலை.

அழகு என்பதை உச்சரிக்கும் மொழியின் கனத்தில்தான் அதன் அர்த்தம் மிளிர்கிறது. வாயும் மனதும் எண்ணிச் சொல்கின்ற வார்த்தையில் கலந்து நிற்கும் அழகு என்ற மொழியின் பாவனைதான் உண்மையானது.

நீ, அழகு என்ற அடைமொழியை ஒரு பொருளோடு பொருத்திக் கொள்ள முனையாதே! அழகு என்பது உன்னோடு பொருந்திக் கொள்ளட்டும்.

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

மனத்திற்கு ஒரு மடல்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 23 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

நீ பேசுவதையோ, எழுதுவதையோ இன்னொருவன் புரிந்து கொள்கின்ற விதம் என்பதை உன்னால் தீர்மானிக்க முடியாது. அதைத் தீர்மானிக்க முனையவும் கூடாது.

பொதுத்தளத்தில் எழுதப்படுகின்ற எழுத்துக்களாகட்டும், பொதுக்கூட்டங்களில் ஆற்றப்படும் உரைகளாகட்டும் — ஒவ்வொரு தனிநபரையும் வெவ்வேறு வகையில் சந்திக்கின்றன.

உன் எழுத்துக்கள், ஒருவனின் ஏற்படுத்தும் பாதிப்பு என்பதன் மடங்குகள் தான், நீ ஆயிரம் பேர்களில் ஏற்படுத்தும் பாதிப்பின் அளவாக இருக்க முடியாது. அது அப்படி ஒருபோதும் நடப்பதுவுமில்லை.

ஒருவனுக்கு உன் உரை மூலம் நீ சொல்ல வந்த விடயம் கொண்டுவரும் தாக்கத்தை கூட்டத்திலுள்ள மொத்த சனத்தொகையால் பெருக்கி, உன் உரையின் நிலையில் கூட்டத்திலுள்ளோர்கள் பெற்ற அனுபவ உயர்நிலையை நீ எண்ணி மகிழ்ச்சி கொள்ளக்கூடாது. அது அவ்வாறு பெருக்கி வருகின்ற கணிதமல்ல.

speak-from-your-heart

ஒருவனிடம் காட்டுகின்ற அன்பின் வடிவத்தை, ஒரு கூட்டத்திடம் உன்னால் காட்ட முடியாது. அதேபோலத்தான், உன்னிடம் ஒரு தனிநபர் காட்டும் அன்பைப் போல், ஒரு கூட்டத்தால் உன்னோடு அன்பு பாராட்ட முடியாது. இரண்டும் முரண்கள் கொண்ட முனைகள்.

உன் உறவுகளின் வலுவும் உன் உரையின் தெளிவும் ஒருநபருக்கு ஒரு நபராய் மட்டும் சுவாசம் கொள்கிறது. கூட்டமாய் இருந்தாலும் நீ சொல்ல வரும் விடயம் ஒரு மனத்தை மட்டுந்தான் அடைய வேண்டும்.

ஆயிரம் மனங்கள் இருக்கட்டுமே, உன் உரை ஒவ்வொரு மனத்தையும் அன்போடு அரவணைக்க வேண்டிய கலையைக் கொண்டிருக்க வேண்டும்.

இந்தக் கலை விசித்திரமான கலையன்று. மனதோடு பேசுகின்ற கலை, ஒரு விஞ்ஞானமாயிருந்தாலும் — அதுவொரு மிக எளிய விஞ்ஞானம்.

இன்னொரு மனதோடு பேச, நீ செய்ய வேண்டியதெல்லாம், உன் மனதாலே பேச வேண்டும். உன் மனதாலே எழுத வேண்டும்.

மனதாலே பேசுகின்ற கலை வாய்க்க என்னவெல்லாம் செய்யலாம் என்று கோபாலிடம் கேட்டேன். ஒரு பட்டியல் சொன்னான். உபயோகம் கருதி தருகிறேன்.

அதிகமாக நீ ஓட வேண்டும். சாப்பாட்டை அதிகமானோருக்கும் சேர்த்து சமைத்தருள வேண்டும். அதிகமான சூரிய உதயங்களை நீ காண வேண்டும். அதிகமாய் நீ வாசிக்க வேண்டும். அதிகமாய் நீ படைக்க வேண்டும். நீ மன்னிக்க வேண்டும். எது அவசியமோ அதில் உன்னை திளைத்திருக்கச் செய்ய வேண்டும். இத்தனையும் உன் வழக்கமாக ஆகிவிடுகின்ற நிலையில், உன் மனமே பேசத் தொடங்கும். அந்தப் பேச்சில் கர்வம் இருக்காது, கவர்ச்சி இருக்கும். அதில் ஈர்ப்பு அற்புதமாய் ஒட்டிக்கொண்டிருக்கும்.

மனதோடு பேசுவோம் வா!

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.