திசைச் சொற்கள் தந்த மகிழ்ச்சி

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  2 நிமிடங்களும் 19 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

பிரேசில்: எனது பயண அனுபவங்கள் [#1]

TEDGlobal 2014 மாநாட்டில் பங்கேற்கும் பொருட்டு, பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவுக்கு பயணமானேன். இதுவே, தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஒரு நாட்டில் TEDGlobal இடம்பெறும் முதற் தடவையாகும். கடந்த ஆண்டு, ஸ்கொட்லாந்தின் எடின்ப்ரா நகரில் இடம்பெற்ற TEDGlobal மாநாட்டிலும், நான் கலந்து கொண்டிருந்தேன், அப்போது, ஐக்கிய ராச்சியத்திலேயே நான் வசித்திருந்ததால், அந்த இடம் பற்றிய அனுபவங்கள் அவ்வளவு புதிதாக இருக்கவில்லை.

பிரேசிலிற்கான பயணம், தென் அமெரிக்கக் கண்டத்தில் நான் பயணிக்கும் முதல் நாடாகும். அதனாலோ என்னவோ, இந்தப் பயணம் பற்றி நான் பரவசப்பட்டிருந்தேன்.

niram-brazil-journey

இந்த பரவசமடைதலுக்கு, பல காரணங்கள் துணையாகி நின்றன. அதில் பிரேசிலின் மொழியே பிரதானமாகும். உலகளவில், சுமார் 190 மில்லியன் மக்கள் போர்த்துகேய மொழியை தங்கள் அன்றாட விடயங்களில் பயன்படுத்துகிறார்கள். அவர்களில், 89 சதவீதமானவர்கள் வசிப்பது பிரேசிலில் ஆகும். இதிலிருந்து, அங்கு பிரேசிலியன் போர்த்துகீஸ் (பிரேசிலின் போர்த்துக்கேய மொழி) மொழியே பிரதானமாக இருக்கிறது. ஆங்கிலம் உட்பட, ஏனைய எந்த மொழிக்கும் இடமில்லை என்பதை நான் அங்கு சென்றதும் அறிந்து கொள்வதற்கு அதிக நேரமெடுக்கவில்லை.

ஆங்கிலம் ஒரு பொது மொழி, சர்வதேச மொழி என்றெல்லாம் அந்த மொழிக்கு கொடுக்கப்படும் விளம்பரங்கள் யாவும், அங்கே எடுபட்டதாகச் சொல்ல முடியாது.

போர்த்துக்கேய மொழியிலிருந்து பிரேசிலின் போர்த்துக்கேய மொழி மாற்றங்கள் கொண்டது. அந்த மாற்றங்கள், சின்னதாய் இருந்தாலும், அவை பிரேசிலியன் போர்த்துகேய மொழியை தனித்துவமாகக் காட்ட துணை நிற்கிறது, என போர்த்துக்கல் நாட்டிலிருந்து வந்த என் நண்பன், மிகல் கப்ரால் சொன்னான்.

பிரேசிலின், சான் பவுலோ (Sao Paulo) விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன். அங்கிருந்து, ஒரு மணிநேர விமானப் பயணத்தின் மூலம், ரியோ டி ஜெனிரோ செல்வதாகவிருந்தது. அந்த விமான நிலையத்திலிருந்து, ரியோவிற்கு செல்வதற்கான செல்வதற்காக, நான் உள்ளூர் விமானச் சேவை நிலைகள் அமையப் பெற்றிருக்கும் இடத்திற்கு செல்ல வேண்டும்.

உள்ளூர் விமானச் சேவை (Domestic Flights) பற்றிய அறிவித்தல்கள் அங்கு எதுவுமே என் கண்ணுக்குத் தென்படவில்லை. அங்கு விமான நிலையக் காவல்துறை அதிகாரிகள் நின்றிருந்தனர். அவர்களிடம், சென்று, உள்ளூர் விமானச் சேவை Terminal ஐ அடைய எந்த வழியால் செல்ல வேண்டுமென ஆங்கிலத்தில் கேட்க, அவர்களோ, போர்த்துக்கேய மொழியில் தொடர்ச்சியாக விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தனர்.

எதுவுமே, புரியவில்லை. ஆக, அவர்களிடம் எனது கேள்வியை மெதுவாக மீண்டும் கேட்டேன்.

அதற்கு, தனது இடப்பக்கமாக கையைக் காட்டி, “சயீதா” என்று ஒரு காவல் துறை அதிகாரி சொல்ல, அதனை வழிமொழிவதாய், “சயீதா” என்று இன்னொரு காவல் துறை அதிகாரியும் அதனைத் தொடர்ந்து சொன்னார்.

அவர்கள், காட்டிய பக்கம் தான் உள்ளூர் விமான நிலைய அமைவு இருக்க வேண்டுமென்ற நம்பிக்கையோடு, நகரலானேன். “சயீதா” என்ற சொல், “Exit” என்ற சொல்லின் போர்த்துக்கேய வடிவம் என்பதைச் சொல்லியாக வேண்டும்.

வெளியே சென்றால், உள்ளூர் விமானச் சேவைகள் நிலை இருக்குமென்ற நம்பிக்கை வீண் போகவில்லை. அங்கே அது இருந்தது. மகிழ்ச்சி நிறைந்தது.

அங்கு உள்ளூர் விமானச் சேவைகளின் நிலையத்திற்குள் செல்கின்ற வழியில் பொதிகளின் கணினி கதிரியக்கப் பரிசோதனை இடம்பெற்றது. அங்கும், ஒரு விமான நிலைய காவல்துறை அதிகாரி நின்று கொண்டு, பொருள்களையும் பொதிகளையும் பரிசோதனைக்காக தட்டில் இடுமாறு போர்த்துக்கேய மொழியில் கேட்டுக் கொண்டிருந்தார்.

அங்குதான், ஆனந்தாச்சரியம் தோன்றியது. எனது பொதிகளை பரிசோதனைக்காக வழங்கும் தருணம் வந்தது. அந்தக் காவல்துறை அதிகாரி, வழமை போன்றே போர்த்துக்கேய மொழியில் அறிவுறுத்தல்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் சொன்ன அறிவுறுத்தல்களின் இடையே, இரண்டு தமிழ்ச் சொற்களும் இருந்தது தான் அந்த ஆச்சரியத்திற்குக் காரணம்.

அதனை தமிழ்ச் சொற்கள் என்பதை விட, தமிழில் சேர்ந்த திசைச் சொற்கள் என்று வழங்கலாம். பரிசோதனைக்கான தட்டில், சப்பாத்து, சாவி ஆகியவற்றைப் போடுமாறு சொல்லிக் கொண்டிருந்தார். காலணியை சப்பாத்து என்றும் திறப்பை சாவி என்றும், வழங்கும் பழக்கம் இன்றும் தமிழ்ச்சூழலில் காணப்படுகிறது. போர்த்துக்கேயர்களின் ஆட்சியால் தொற்றிக் கொண்ட, சொற்கள் வழக்கத்தில் உள்ள நிலை அப்படியிருக்க, போர்த்துக்கேயர்களின் ஆதிக்கத்தின் ஒரு சொச்சத்தை சான் போலோவில் கண்டு, அறிமுகமுள்ள விடயங்கள், அந்நியமான நிலைகளில் வாய்க்கின்ற போது தோன்றுகின்ற மகிழ்ச்சி, மனத்தில் தொற்றிக் கொண்டதை சொல்லியாக வேண்டும்.

அந்த அனுபவத்தோடு, ஒரு மணிநேர விமானப் பயணத்தின் நிறைவாக, ரியோ டி ஜெனிரோ வந்தடைந்தேன். அங்கிருந்து, எனது தங்குமிடமான Copacabana பகுதியிலுள்ள Windsor Atlantica Hotel இற்கு செல்ல, எனக்காக வந்திருந்த Taxi இல் ஏறிக்கொண்டேன்.

விமான நிலையத்திலிருந்து அந்த Taxi, விரைந்தது — விரைந்த பயணத்தின் வழியே சுவாரஸ்யங்கள் ஏராளம்.

அடுத்த பாகத்தில் இன்னும் சொல்கிறேன்.

தாரிக் அஸீஸ் (உதய தாரகை)

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

தெரிவு செய்வது யார்?

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 59 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

உங்களின் தெரிவுகளில் ஆதிக்கம் செய்ய எவற்றையெல்லாம் அனுமதிக்கிறீர்கள்?

இன்று காலை நண்பனொருவன், பகிர்ந்த காணொளியொன்றைக் காண நேர்ந்தது. அதைப் பார்த்த முடித்த மாத்திரத்தில் ஒரு சில விடயங்கள் எனது மனத்தில் தோன்றியது. அந்த விடயங்கள் தொடர்பாக நிறத்தில் பல தடவை சொல்லி இருக்கிறேன். இருந்தாலும், அதை இன்னுமின்னும் பதிவு செய்ய வேண்டுமென்கின்ற ஆர்வத்தின் விளைவுதான் இந்தப் பதிவு.

பொதுவாக, வயது வந்தவர்கள் உலகைக் காண்பதும் அதேவேளை சிறுவர்கள் காணும் உலகமும் முற்றிலும் மாறுபட்டதாகும். இதுதான், உண்மை என்று தெரிந்த நிலையிலும், வயது வந்தவர்கள், தமது உலகமெனக் கற்பனை செய்து கொள்கின்ற விடயங்கள் பலவேளைகளில் அபத்தமாகவே இருக்கின்றன.

இதற்கு, இவ்வாறு உலகத்தைக் காண வேண்டுமென்ற தெரிவை அவர்கள் செய்தாலும், இந்தத் தெரிவை தேர்ந்தெடுப்பதில் பல புறச்சூழலின் நிலைகள் காரணமாக அமைகின்றன. அதில் முக்கியமானது, ஊடகமாகும்.

ஊடகம் என்பது, வானொலி, தொலைக்காட்சி, சினிமா என்பதோடு நின்றுவிடாது, சமூக ஊடகம் என்பதாகவும் இணையம் வாயிலாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி இருப்பது வெளிப்படையானதே!

ஒரு சமூக அமைப்பின் மொத்த சிந்தனையை மாற்றியமைக்கின்ற ஆற்றலை ஊடகம் எப்போதும் கொண்டிருக்கிறது. இந்த ஊடகத்தின் சக்தியின் வலையில் சிக்கியே, சாமான்யன்களின் பல வாழ்க்கை பற்றியதான முடிவுகள் சாத்தியமாகிறது.

உண்ணும் உடையிலிருந்து, உடுக்கும் உடையிலிருந்து, வாழ்கின்ற வீடுவரை அனைத்திலும், ஊடகம் கொண்டுதருகின்ற சித்தரிப்பின் விளைவுகளே, உயர்வென பலரும் இங்கு நம்பிவிடுகின்றனர்.

தனது தோற்றத்தின் மொத்த தெரிவும் மெருகூட்டலும், ஊடகம் உபதேசிக்கின்ற விடயங்களை “அப்பி” விடுவதால் கிடைக்குமென்கின்ற அறிவு கற்பிதம் செய்யப்பட்டு, அவை பலரையும் தொடர்ச்சியாக ஆட்கொண்டும் வருகிறது.

ஆக, ஊடகங்கள் நெறியாள்கை செய்து, வணிகத்தின் தேவை கருதி உருவாக்கப்படும் அத்தனை விடயங்களும் ஔடதங்களாகப் பார்க்கப்பட்டு, தேனென நுகரப்படுகின்றன.

இந்த நுகர்தல் என்பது, வெறும் நுகர்தல் என்ற நிலையையும் தாண்டி, மாயை என்ற உலகங்களையும் உண்மையென நம்புகின்றதான நிலையை தோற்றிவிக்கிறது.

அது அப்படியும் நின்றுவிடுவதில்லை, ஊடகம் பற்றிய ஆதிக்கமேயில்லாத, தன் வாழ்வைக் ‘களித்துக்’ கொண்டிருக்கும் சகமனிதனுக்கும், இன்னொரு ஊடக ஆதிக்கம் கொண்ட சகமனிதனால், ஊடகம் தனக்குக் சொல்லித்தந்த விடயங்கள் பற்றி சொல்லிக் கொடுக்கப்படுகிறது. நம்பச் செய்யப்படுகிறது.

இங்கு ஊடகங்களையோ, அதன் வணிக நிலைச் செயற்பாடுகளையோ குறை சொல்ல முடியாது, அவைதான் அவற்றின் பணியாகவிருக்கின்றன. மாற்று ஊடகம் என்ற தேவை இருக்கிறது என்பதெல்லாம் இன்னொரு கட்ட விவாத நிலைப் பொருள்,

ஆனால், ஒவ்வொரு தனிமனிதனும் ஆழச் சிந்தித்து, தனது ஆய்தலின் அடிப்படையில் அவன் பற்றிய, அவன் வாழ்கின்ற சூழல் பற்றிய, ஏன் அவனின் மொத்த வாழ்வு பற்றிய தீர்மானங்களை எடுக்கத் துணிகின்ற — முயல்கின்ற தருணமே, மாற்று ஊடகத்தின் தொடக்கப்புள்ளி.

ஒவ்வொரு தனிநபரின் ஆய்ந்தறிந்த எண்ணத்தின் சேர்க்கை என்பது, வணிகம் பற்றிய குறிக்கோளோடு திகழுகின்ற ஊடகச் சிந்தனைக்கான மாற்றுநிலை.

ஆக, இங்கு சொல்லப்பட வேண்டியதெல்லாம், ஊடகங்கள் தருகின்ற விடயங்களை நுகரக் கூடாது என்பது அல்ல. நுகரப்படுகின்ற அத்தனை விடயங்கள் பற்றியதான தனிநபர் ஆழ்நிலை விமரிசனங்களும் அதன் உண்மைத் தன்மை பற்றியதான ஆய்தலும், அந்த விடயங்கள் பற்றியதான தேடல்களும் இங்கு அதிகரிக்க வேண்டும் என்பதாகும்.

வயது வந்தவர்கள், சிறுவர்கள் என 50 பேர்களை அழைத்து, அவர்களிடம் ஒரேயொரு கேள்வி கேட்கப்பட்டது. “உங்களின் உடலின் ஒரு விடயத்தை நீங்கள் மாற்ற வேண்டுமென நினைத்தால், அது என்னவாகவிருக்கும்?” என்பதுதான் கேட்கப்பட்ட கேள்வி.

நான் மேலே சொன்னது போலவே, வயது வந்தவர்கள் அத்தனை பேர் வழங்கிய பதில்களும், அவர்கள் நாளாந்தம் வாசிக்கின்ற, பார்க்கின்ற, கேட்கின்ற ஊடகங்களால் உண்மையென கற்பிதம் செய்யப்பட்ட மாயையான விடயங்களால், ஆதிக்கம் செய்யப்பட்டிருந்தன. ஆனால், சிறுவர்களின் பதில்களோ, ஊடக ஆதிக்கம் அற்றதாய் வெளிப்படையாயிருந்தது.

இதுதான் அந்தக் காணொளி.

ஒவ்வொருவராலும், சிந்திக்க முடியுமென்ற உண்மை தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டு வருகின்றது. சிந்தனை என்ற குணம்தான் எமது, முக்கிய மனித பண்பாகவும் சித்தரிக்கப்படுகிறது. ஆனால், சிந்தனையை மழுங்கடித்து, சிந்தனை பற்றிய சூன்ய நிலைகளை வழங்கும் ஊடக வணிகம் அதனைச் சார்ந்த அரசியல் பற்றியெல்லாம் இன்னமும் கவனிக்கப்படாமல், அவை வேதங்களாக, “சிந்திக்கத் தெரிந்த மனிதர்களால்”, பார்க்கப்படுவது வேதனையளிக்கிறது.

மாற்று ஊடகம், மாற்று சினிமா, மாற்று எழுத்து, மாற்று சங்கீதம் என விரியும் அத்தனை இயல்புகளினதும், தொடக்கமென்பது தனிமனிதனின் ஆழ்ந்த சிந்தனையும் மனப்பாங்கு மாற்றமும் தான்.

சிந்தனையை மாற்றி ஆதிக்கம் செலுத்த வணிக நிலைச் சாதனங்கள் — ஊடகங்கள் , ஒவ்வொரு தனிநபரையும் இலக்கு வைத்து, அதில் வெற்றியும் காணும் போது, அந்த முனைப்புகள் பற்றிய பொதுவான அறிவைக் கூட தனிமனிதன் தவறவிட்டுக்கிடப்பது பொருந்தாது.

உங்கள் சிந்தனையில் மாற்றங்கள் தோன்ற, வழி செய்வது உங்கள் தெரிவுகள். நீங்கள் தெரிவுசெய்யப் போகிறீர்களா? அல்லது உங்களுக்காக ஊடகங்களை, தெரிந்து தர சொல்லப்போகிறீர்களா?

— தாரிக் அஸீஸ் (உதய தாரகை)

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –