அவதிகளைக் கொண்டாடு!

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 14 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

நீ, அவதிகளின் தோற்றமாயிருக்கிறாய். உனக்குள் ஆயிரம் அவதிகள், அவதாரம் கேட்டுச் சண்டை போடுகின்றன. நீ அவற்றில் எதைக் கவனிப்பது என்று தெரியாமல், அவதிகள் தரும் அவதிக்குள் தொலைந்து போகிறாய்.

மகிழ்ச்சியைக் கண்ட மாத்திரத்தில், கவலை பற்றிய தேவைகள் உனக்குள் குடிகொள்வதும் அதுவே அவதியாய் ஆகிவிடுவதும் நடந்து கொண்டிருக்கிறது.

நல்லதை நேசிக்க வேண்டுமென்ற உன் மனத்தின் ஒப்பாரி, தீயதைப் பற்றி யோசிக்க வைக்கின்ற தேவையையும் உண்டு பண்ணி, உனக்குள் அவதிகளை பிரசவிக்கிறது.

அதைத் தேர்ந்தெடுப்பதா? இதைத் தேர்ந்தெடுப்பதா? என்று ஒவ்வொரு பொழுதும் உனக்குள் நடக்கின்ற போராட்டங்ள், கொண்டு தருவதெல்லாம், அவதிகள் தாம்.

உன் வாழ்வின் ஒவ்வொரு கணத்தின் நீட்சியிலும், அவதிகள் பற்றிய உன் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இதுதான் வாழ்க்கை என்பதா? மனத்திற்குள் அவதிகளைத் தருவதுதான் ஆயுளின் அடையாளமா?

3527154618_b29765a1ed_o

கவலையைப் பற்றிக் கவலைப்படாமல், நீ மகிழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கலாம். ஆசைகள் பற்றி அலட்டிக் கொள்ளாமல், நீ கொண்டதே நிறைவெனப் போற்றி வாழலாம். விழித்தாலே விடியலைக் காணலாம் என உணர்ந்து, தூக்கத்தை துரத்தி வைக்கலாம்.

இப்படி நீ செய்யக்கூடிய பல விடயங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொன்றும் நீ படும், அவதியின் மிச்சமாய், உன் தெரிவின் ஏற்பாடாய் தோன்றியிருப்பது மட்டுந்தான்.

கோபத்தையும் வெறுப்பையும் பயத்தையும் உன்னால் ஊட்டி வளர்க்க முடியும். உன் உணவிற்காய் இவை யாவும், போட்டி போட்டுக் கொண்டு, நாளாந்தம் உனக்குள் அவதிகளைத் தருகின்றன.

கனவுகளையும் விருப்பத்தையும் வேட்கையையும் நீ உன்னோடு கூட்டாளியாக்கிவிட முடியும். இவையும் உன் நட்பிற்காய் நாளும் போட்டி போடுகின்றன — அவையே அவதிகளாயுமாகி விடுகின்றன.

உனக்குள்ளே உன் தெரிவுக்காய் போட்டி போட்டுக் கொண்டு, இருப்பவை பற்றிக் கொஞ்சம் நீ புரிந்து கொள்ளக்கூட, நீ கொண்ட அவதிகள் அவகாசம் தராது.

ஆனாலும், நீ புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றேயொன்று தான். உனக்குள் எழும் போராட்டங்களுக்குத் தருகின்ற விடை என்பது, உனக்கு யாராலும் வழங்கப்படுவதல்ல. உன் தெரிவுகள் தான், உனக்குள்ளான போராட்டத்தின் திசையை நிர்ணயிக்கப் போகின்றன. நீதான் அதற்கான விடையை தேர்ந்தெடுக்கிறாய்.

அவதிகளை ஆராதிக்கப் பழக்க வேண்டியது, உன் தெரிவின் உட்சபட்ச இலக்காகும். உனக்குள் போராட்டத்தையும், அவதிகளையும் தருகின்ற விடயங்களில், வெற்றி பெறப் போவது, நீ ஊட்டி வளர்க்கும் தெரிவுகளே.

அவதிகளை கொண்டாட வேண்டுமென்ற அவாவோடு, தெரிவுகளைத் தீர்மானமாக்கு. உன்னை வெல்வாய் நீ; உலகை வெல்வாய்.

— தாரிக் அஸீஸ்

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

நீ தோற்றுப் போவாய்!

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 23 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

அதைச் செய்தால், பிழையாகிவிடும் என்ற கற்பனைக்கு விடுப்புக் கொடுத்து, அது சரியாக நடந்தேறும் என்ற உவகையான எண்ணத்திற்கு சுவாசம் கொடு. அது உன் மனவானில் வாசம் வீசட்டும்.

அந்த அற்புதமான விடயத்தை முயற்சி செய்வதால், அதில் தோற்றுப் போய்விடுவோம் என்பதை, அதை ஒரு சொட்டும் முயற்சிக்காமல், அதனைப் பற்றி வியாக்கினம் கூறுகின்ற பழக்கம் என்பது சாதாரண வழக்கமாகியுள்ளது.

அந்த விடயம் அற்புதமானது என்பதை அறிந்து கொண்ட, உன்னுடைய அதே மூளைதான், அதை முயற்சிப்பதால் தோற்றுப் போவாய் என்று உனக்குள் சொல்லவும் தன்னை இயல்பாக்கியிருக்கிறது. இது இயல்பான நிலைதான்.

இப்படியான மூளையின் இயல்புநிலையை அறிந்து கொள்வதன் வாயிலாக, தோற்றுப் போவது பற்றிய மாயை மனப்பாங்கு உன்னுள் குடிகொள்வதை நீ, தவிர்க்கலாம்.

மூளை, நீ முயன்றால் தோற்றுப் போவாய் என்று முந்திக் கொண்டு சொல்வதை, புறக்கணிப்பது எவ்வாறு? என்று நீ கேட்கலாம். முயற்சி பற்றிய எந்த அமைப்பும் இல்லாது, செய்யாத ஒன்று பற்றிய அனுமானத்தின் விளைவை, மூளை சொன்னால், அதை மூளையாலும் ஏற்றுக் கொள்ளமுடியாமல் இருக்கமல்லவா?

ஆனால், நாம் மூளை சொல்ல நினைப்பதை முந்திக் கொண்டு நம்பி, பல எண்ணங்களின் ஆக்கநிலைகள், வெறும் “தோற்றுப் போவோம் என்ற மாயையான பயத்தினால்” விலாசமிழந்து போக வழி செய்கிறோம்.

tumblr_nfps65VLWa1sfie3io1_1280

ஆக, இந்த தோற்றுவிடுவோம் என்கின்ற பயத்தை தோற்கடிப்பது எப்படி? மிக இலகுவானது. நதிபோல, ஓடிக் கொண்டேயிரு. காரியங்களைச் செய்து கொண்டேயிரு.

ஒரு அற்புதமான விடயத்தை எண்ணி, அதனைச் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் தோன்றியதும், அந்தக் காரியங்களைச் செய்யத் தொடங்க வேண்டியிருக்கிறது. கொஞ்சம் தாமதித்தாலும், மூளை உடனடியாக வந்து, அதன் தொழிலைச் செய்யத் தொடங்கும்; தோற்றுப் போவாய் என்று பயம் காட்டத் தொடங்கும்.

எந்த அற்புதமான விடயத்தை ஆற்றவேண்டுமென நீ எண்ணினாலும், அதனை அறிந்துள்ள அந்தக் கணத்திலேயே அதன் ஒரு சிறு படியையாவது, செய்து, அந்த அற்புதமான விடயத்திற்கு உயிர் கொடுக்க நீ முனைய வேண்டும்.

எப்படியெல்லாம் நீ தோற்றுப் போகலாம் என்று எண்ணி, எண்ணி — எதையுமே செய்யாமல், ஒவ்வொரு கணமும் உன்னை நீயே தோற்கடிப்பது எப்படியான குரூர நிலை என்பதை எண்ணிப்பார்.

உன் எண்ணங்கள், உன்னைச் சுற்றியுள்ளவர்களின் அறிவுரை என்ற பெயர் கொண்ட எண்ணங்கள் என எல்லாமுமே, தோற்றுப் போவது பற்றியதான பயத்தை உனக்குள் பல மடங்காக்கப் போட்டி போட்டுக் கொண்டிருக்கும்.

அதனாலேயே, நனவாகாத கனவுகளையும் தொடங்கப்படாத வணி நிலைகளையும் பயிரிடப்படாத காணிகளையும் எழுதப்படாத புத்தகங்களையும் பற்றி நீ தொடர்ச்சியாக கேள்விப் பட்டுக் கொண்டிருக்கிறாய்.

“கனவுகளை நனவாக்க, தொடர்ச்சியாய் தொழிற்பட்டுக் கொண்டேயிரு.” — கோபாலு சொல்லச் சொன்னான்.

  • உதய தாரகை (தாரிக் அஸீஸ்)

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

பதிவில் இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

வாழத் தெரிதல்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 14 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

நீ வாழ்க்கையை ஒரு பிரசினமாகவும், அதனைத் தீர்ப்பதில்தான் வாழ்க்கை உயிர்ப்புக் கொள்கிறது எனவும் எண்ணிக் கொண்டு, காரியங்கள் செய்கிறாய். வாழ்க்கை உண்மையில், பிரசினங்களைத் தீர்க்கும் அமைப்பா? கொஞ்சம் யோசி.

பிரசினங்களைத் தீர்ப்பதான வாழ்வின் ஏற்பாடு எல்லாம், நீ, உன் மனத்தை தொலைத்து நடந்து கொள்கின்றதான விடயமாகும். நீ பிரசினம் என நம்பி, அதனைத் தீர்க்க நினைக்கின்ற போது, வாழ்க்கை கடந்து போயிருக்கும்.

வாழ்க்கை ரம்மியமானது. அனுபவங்களின் மூலம் ஆக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையின் பாதையில் தோன்றும் அனுபவங்களை அரவணைத்துக் கொண்டு, அதன் மூலம் வாழ்க்கைக்கு அர்த்தம் சேர்ப்பதுதான், உன் பணியாக இருக்க வேண்டும்.

ஊடகங்கள், சமூக ஊடகங்கள் எல்லாமே, உனக்குக் காட்டுவது, வாழ்க்கையின் நெறியாள்கை செய்யப்பட்ட, ஒரு பகுதியை மாத்திரம்தான். அந்த ஊடக ஏற்பாட்டின் மூச்சு, வணிகத்தின் வாசமாகும்.

நீ, அவற்றைக் கண்டு, வாழ்க்கையை இலகுவானதென்றோ, கடினமானதென்றோ நம்பிவிடக்கூடாது. செளகரியம் தரும் விடயங்கள், சௌகரியம் தரும் தருணங்கள், குழப்பம் தரும் மனநிலை, சந்தோசம் மிகும் உள்ளத்தின் எல்லை என வாழ்க்கைக்கு முகங்கள், பல.

tumblr_nfps6yStNE1sfie3io1_1280

அந்த வாழ்க்கையை அப்படியே, அனுபவிப்பதுதான், உன் வாழ்க்கையின் முகவரி. நீ காண்கின்ற, உனக்கு காண்பிக்கப்படுகின்ற வாழ்க்கை பற்றியதான படங்கள் யாவும் வெறும் படங்களே, அதில் எந்த மெய்யுமில்லை.

நீ கண்ட உலகம் பற்றிய விடயங்களுக்காக, ஏங்கி நிகழ்கால நிம்மதிகளை நீ ஒருபோதும் தொலைத்துவிடக் கூடாது.

இந்தத் தருணம் வரையும், நீ வாழ்க்கையில் பிழைத்திருக்கிறாய், அந்த உச்சபட்ட சாதனை பற்றி நீ உணர வேண்டும். வெறும் போலியான, வாழ்க்கை பற்றிய கற்பிதங்களை நீ, உன் மனவானில் தோற்கடிக்க வேண்டும்.

உன் தோற்றத்திலிருந்து, இன்று வரை தொடர்கின்ற உன் பிழைத்தல் என்பது, நாளையும் சாத்தியமாகும், வாழ்க்கை தருகின்ற அனுபவங்களை அப்படியே ஏற்று, அதன் மூலம் பாடங்கள் கற்று, வாழ்வை ரசிக்கத் தெரிவதுதான், உன் மூச்சாய் தொடர வேண்டும்.

வாழ்க்கை என்பது, நீ உருவாக்கும் அனுபவங்களின் கோர்வை. உன்னால் மட்டுந்தான், உன் வாழ்க்கையை உருவாக்கிட முடியும். உன்னைப் போல், நீ மட்டுந்தான் இருக்க முடியும். அதேபோல், உன்னால், இன்னொன்றாக இருக்கவும் முடியாது. அப்படியிருக்க முயல்கின்ற தருணத்தில், உன் முகவரி தொலைந்து போகும்.

ஆக, வாழ்க்கை பற்றியும், அது தருகின்ற சந்தர்ப்பங்கள் பற்றியும் முறைப்பாடு செய்வதை இப்போதே, நிறுத்திவிடு. உன் மனத்தில் மகிழ்ச்சி தோன்ற வைக்கும், எதுவோ அதனைத் இப்போதே, செய்திடு.

உன் வாழ்க்கையில், மகிழ்ச்சி என்பது உனது தெரிவு மட்டுந்தான். எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறாய்?

  • உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –