பங்குச் சந்தையை புரட்டிப் போட்ட திருப்புமுனை: அறிவோம் தெளிவோம்

என்னதான் நடக்கிறது?

வீடியோ விளையாட்டுக்களை டீவீடீயாக விற்பனை செய்து வந்த நிறுவனம்தான் GameStop.

இணையத்தின் ஆதிக்கம் இருக்கும் இக்காலத்தில் டீவீடீகளை விற்பனை செய்தால் இலாபம் கிடைக்குமா என்ன?

பெருந்தொற்றுக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி GameStop மிகப்பெரும் நட்டத்தில் இயங்கியது.

ஆனால், இந்த வாரம் இந்த நிறுவனத்தின் பங்குகளின் அதீத விலையுயர்ச்சியால் நியுயோர்க்கின் வோல் ஸ்ட்ரீட் பங்குசந்தை கதிகலங்கியுள்ளது.

நட்டத்தில் இயங்கிய இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை அதியுச்சமானது எப்படிச் சாத்தியமாகியது?

இந்தச் சம்பவம், உலக வரலாற்றின் திருப்புமுனை என்றுகூடச் சொல்லிவிடலாம்.

இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது என்பதை அறிந்து கொள்ள, பங்குச் சந்தையின் நடவடிக்கைகளில் “Short” என்ற நிலை பற்றி அறிந்து கொள்வது முக்கியமாகும்.

பங்குச் சந்தையில் Short எனப்படுவது, ஒரு பங்கை நீங்கள் தரகரிடம் இரவல் வாங்கி, அதன் விலை குறையும் என்ற நம்பிக்கையில் உடனடியாக அதனை விற்கிறீர்கள். இதன் முக்கிய நோக்கம், பங்கின் விலை குறைந்ததும் விற்ற பங்கை குறைந்த விலைக்கு வாங்கி, இரவல் வாங்கிய பங்கை தரகருக்கு கொடுத்துவிட்டு மீதமுள்ளதை இலாபமாக எடுத்தக் கொள்வதாகும்.

உதாரணமாக, A என்ற நிறுவனத்தின் ஒரு பங்கின் தற்போதைய விலை 10 ரூபா என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பங்கை தரகரிடமிருந்து இரவல் எடுத்து, உடனடியான 10 ரூபாய்க்கு விற்றுவிடுகிறீர்கள்.

இப்போது உங்களிடம் 10 ரூபாய் பணம் இருக்கிறது. அத்தோடு நீங்கள் தரகரிடமிருந்து வாங்கிய ஒரு பங்கு அவருக்கு மீண்டும் கொடுக்க வேண்டும் என்ற தேவையும் இருக்கிறது.

இப்போது, A என்ற நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 6 ரூபாவாக குறைந்துள்ளது என வைத்துக் கொள்வோம். இப்போது, நீங்கள் ஏற்கனவே விற்ற பங்கை 6 ரூபாய்க்கு வாங்குகிறீர்கள். தரகரிடம் இரவலாக வாங்கிய பங்கையும் திருப்பி கொடுத்தும்விடுகிறீர்கள்.

இங்கு, நீங்கள் 10ரூபாய்க்கு விற்ற பங்கை, மீண்டும் வாங்க உங்களுக்குச் செலவானது 6 ரூபாய் தான். ஆக, 4 ரூபாய் இலாபமாக உங்களுக்கு இதன் மூலம் கிடைத்துள்ளது.

இது இப்படியிருக்க, இங்கு பங்கின் விலை குறைந்தது போல், பங்கின் விலை கூடினால் என்ன நடக்கும்?

நீங்கள் இரவலாக வாங்கிய பங்கை தரகருக்கு வழங்கத்தான் வேண்டும். 10ரூபாய்க்கு விற்ற பங்கின் தற்போதைய விலை 15 ரூபாய் என்றால், நீங்கள் மேலதிகமாக 5ரூபாய் சேர்த்துத்தான் 15ரூபாய்க்கு அந்தப் பங்கை மீண்டும் வாங்க வேண்டும். அப்போதுதான் இரவல் வாங்கிய பங்கை தரகருக்கு திரும்பித் தர முடியும். இங்க உங்களுக்கு 5 ரூபாய் நட்டம் ஏற்படும்.

ஆனால், இதிலிருக்கின்ற சுவாரஸ்யம், 15ரூபாயாகத்தான் பங்கின் விலை இருக்குமென்பதில்லை. அது எவ்வளவு வேண்டுமானாலும் கூடிக் கொண்டே செல்லலாம். அப்படியானால், பங்கின் விலையுயர உயர, நட்டமும் கூடிக் கொண்டே செல்லும். அதனால், விற்ற பங்குகளை வேகமாக வாங்கி தரகரிடம் மீண்டும் தரவேண்டிய நிர்ப்பந்தம் உங்களுக்கு ஏற்படும்.

இனி GameStop இல் இது எப்படி நடந்தது எனப் பார்ப்போம்.

GameStop இன் பங்குகளை Short முறையில் கையகப்படுத்தி அதிக இலாபமீட்டுவதையும் அதன் மூலம் GameStop ஐ கடன்தீர்க்க முடியாத நிலைக்குத் தள்ளுவதற்கும் Hedge Fund முனைப்புக் காட்டியதை, Reddit இணையத்தளத்திலுள்ள ஒரு பிரிவான WallStreetBets என்ற தன்னார்வலர்கள் கடந்த சில வாரங்களாக அவதானித்தனர். இதற்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டுமென முடிவு செய்தனர்.

WallStreetBets என்கின்ற Reddit இணையக் குழுமத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் செயல்நிலையில் இருக்கிறார்கள்.

அங்குள்ள உரையாடல்களில், GameStop இன் பங்குகளை அதிகமதிமாக வாங்குமாறு செய்திகள் பரிமாறப்பட்டன. தங்களால் முடியுமான அளவுக்கு GameStop இன் பங்குகளை வாங்குமாறு குழுமத்திலுள்ளவர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

GameStop பங்குகள் வேகமாக வாங்கப்பட்டன. பங்குகளின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், Short முறையில் இலாபமீட்டிய Hedge Fund பில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களை இழக்கத் தொடங்கியது. Hedge Fundஇன் மொத்தப் பெறுமதியான 13.1 பில்லியன் டொலர்களைத் தாண்டி அவர்கள் அடைந்த நட்டம் உயர்ந்தது.

தமது Short நிலையிலிருந்து மீள்வதற்கு, Hedge Fund வேகமாக GameStopஇன் பங்குகளை அதிகமான விலையில் திரும்ப வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால் பங்குகளின் விலை இன்னமும் கூடியது. இந்த நிலைதான் பங்குச் சந்தை நடவடிக்கையில் ‘Short Squeeze’ எனப்படுகிறது.

இப்போது, Hedge Fund தாம், கடன் தீர்க்க முடியாத நிலையை (Bankruptcy) அடைந்துவிட்டதாக அறிவித்துள்ளது. ஏனைய Hedge Fund நிலைகளும் இந்த இணையப் பயனர்களின் ஏற்பாட்டால் கதிகலங்கலாம் என்ற பயத்தில் Short நிலையின் எதிர்ச் சம்பவங்கள் பங்குச் சந்தையில் வெவ்வேறு வகையில் இடம்பெறத் தொடங்கியுள்ளன.

பொதுமக்கள் இணைந்து பங்குச் சந்தையில் இப்படி மாற்றத்தைக் கொண்டுவருவது சட்டவிரோதமானது என வோல் ஸ்ட்ரீட் அழத் தொடங்கியுள்ளது. எப்படியாயினும், சாதாரண மக்களின் சக்தியின் முன்னால், வோல் ஸ்ட்ரீட்டின் செல்வந்த ஜாம்பவான்கள் தோற்றுப் போயுள்ளதே இங்கு நடந்தேறியுள்ளது.

இதையொரு நவீன தாவீது கோலியாத் கதையென்றே சொல்ல வேண்டும்.

தாரிக் அஸீஸ்
30.01.2021

கோலியாத்தை வீழ்த்தி தாவீது.

கவனத்தை ஆளுவது எப்படி?

நீங்கள் புதிய மொழியொன்றில் பிழையில்லாமல் எழுதுவதற்கு பயிற்சி எடுக்க முடிவுசெய்துள்ளீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.

எழுதுவதற்கு ஒரு குறிப்புப் புத்தகம் தேவைப்படுகிறது. புத்தகக் கடைக்கு செல்கிறீர்கள்.

புது வகையான அழகழகான குறிப்பபுப் புத்தகங்களைக் காண்கிறீர்கள்.

அவற்றில் சிவப்பு மற்றும் நீலம் ஆகிய நிறக் குறிப்புப் புத்தகங்கள் உங்களைக் கவர்ந்துள்ளன. இதில் எதைத் தெரிவு செய்வது என்று உங்களுக்குள்ளேயே விவாவதம் செய்கிறீர்கள்.

அப்போது, எதிரே கண்ணுக்கு அழகான பேனாவொன்று தெரிகிறது. இறுதியில் பேனாவை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்துவிடுகிறீர்கள்.

இனி, அந்த வாரம் முழுக்க எந்த நிறக் குறிப்புப் புத்தகத்தை வாங்கலாம் என்ற தெரிவின் சமர், உங்கள் தலைக்குள்ளே ஓடிக் கொண்டிருக்கிறது. இனியென்ன, ஒரு வாரத்திற்குப் பிறகு சென்று ஏதோவொரு குறிப்புப் புத்தகத்தை வாங்கி வருகிறீர்கள்.

இந்த நிலைக்கு பெயர்தான் Bike Shed Effect. சைக்கிள் பந்தல் விளைவு என்று தமிழில் சொல்லலாம்.

அணுத் தொழிற்சாலையை நிர்மாணிப்பதற்கான ஏதுக்களை ஆராயச் சென்ற வேளை, அங்கு கூடி நின்று சைக்கிள்களை தரித்து வைக்க வேண்டிய பந்தலுக்கு என்ன நிறப்பூச்சு கொடுக்கலாம் என்று நிபுணர் குழுவைச் சேர்ந்தவர்கள் மணிக்கணக்கில் வாதிட்டுக் கொண்டிருந்தார்களாம்.

நமது இலக்கும் குறிக்கோளும் பெரியதாக இருக்கின்ற போது, அதனை நோக்கிப் பயணிக்காது சின்னச் சின்ன விடயங்களை நோக்கி நம் கவனத்தைத் தருவதுதான் இந்த நிலை.

இந்தச் சந்தர்ப்பங்கள் ஒவ்வொரு நாளும் நமக்குள்ளும் நாம் வாழும் சூழலிலும் நடந்து கொண்டேயிருக்கின்றன.

நீங்கள் வணிகம் ஒன்றைத் தொடங்கப் முனைந்தாலோ, புதிய உணவுப் பழக்க வழக்கத்தை தொடங்கினாலோ அது எதற்காகச் செய்கிறோம் என்ற எதுவுமே தெரியாது, அது பற்றிய எந்த அறிவுமில்லாமல், சின்னச் சின்ன விடயங்களை தூக்கிக் கொண்டு விவாதிக்க வரிசையில் ஆட்கள் வருவார்கள்.

இது வணிகத்தோடோ, உணவுப் பழக்க வழக்கத்தோடோ நின்றுவிடுவதில்லை.

அரசியல் புலம், ஆட்சியாளர்களின் செயல், கற்றலின் நிலை என எதை எடுத்தாலும், நாம் கவனிக்கப்பட வேண்டியதைத் தாண்டியும் வேறு பக்கத்திற்கு நமது அவதானம் குவிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

சைக்கிள் பந்தல் விளைவுக்குள் சிக்கித் தவிக்காமலிருக்க என்ன செய்யலாம்?

ஒன்றை செய்யத் தொடங்கினால், அதன் முக்கிய நோக்கத்தை அறிந்து அதனை நோக்கிச் செல்லுங்கள்.

எல்லோரும் அறிவுரை சொல்லுவார்கள். அதனைக் கேட்டு ஆய்ந்தறிந்து நடக்கின்ற தெரிவு உங்களிடம் மட்டுமே உள்ளது என்பதை உணருங்கள்.

எதையாவது தெரிவு செய்ய வேண்டிய கட்டாயம் வந்தால், நமது நோக்கத்தில் இந்தத் தெரிவு எவ்வளவு தாக்கத்தை செலுத்தும் என்பதை கண்டறியுங்கள். அப்போது தெரிவுகள் இலகுவாகும்.

நீங்கள் சைக்கிள் பந்தல் விளைவுக்குள் செல்லாவிட்டாலும், உங்களைச் சூழ இருப்பவர்கள் அதில் சிக்கிக் கொண்டு, சின்னச் சின்ன விடயங்கள் என எல்லாவற்றுக்குள் கருத்துச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். கலகம் செய்து கொண்டிருப்பார்கள். முட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள். அவற்றை நீங்கள் கடந்து செல்ல பக்குவமடையுங்கள்.

வருங்காலத்தில் ஒரு தெரிவால், உங்கள் நோக்கத்திற்கு எதுவும் பாதிப்பில்லை என்று தோன்றினால், எதையும் தெரிவு செய்து, முன்னோக்கி செல்லுங்கள்.

எப்போதும் போல், தெரிவு உங்களிடம் மட்டுந்தான் இருக்கிறது.

தாரிக் அஸீஸ்
08.01.2021

உன்னை ஒன்று கேட்பேன்

உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளில், உலக சனத்தொகையில், தீவிர வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களின் தொகையின் விகிதம் எந்தளவு மாறியுள்ளது?

உங்களுக்கான தெரிவுகள் இவைதாம்.

  1. மாறவில்லை.
  2. அரைவாசியாகக் குறைந்துள்ளது
  3. இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

இவற்றுள், உங்கள் தெரிவு என்ன?

இலகுவானதுதான். இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்பதை தெரிவு செய்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.

இந்தக் கேள்வி, உலகின் பல இடங்களிலும் பல்வேறுபட்ட மக்கள் குழுக்களிடமும் கேட்ட போது, இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதையே அவர்களும் உறுதிப்படுத்தினர்.

இது உண்மைதானா?

இல்லை. உண்மை முற்றிலும் மாற்றமானது, ஆச்சரியம் மிகுந்தது.
அதீத வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களின் தொகையின் விகிதம் கடந்த 20 வருடங்களில் அரைவாசியாகக் குறைந்துள்ளது. இதுதான் உண்மையான தரவுகளின் முடிவு.

அப்படியானால், நீங்களோ மற்றயவர்களோ, இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று முடிவு செய்ய என்ன காரணமாகியது?

நீங்கள் காண்கின்ற உலகம் தான் இந்த முடிவுக்கு உங்களை இட்டுச் சென்றுள்ளது.

நீங்கள் காணும் உலகம் என்பது, நீங்கள் வாசிக்கும் செய்திகள், காணும் செய்திக் காணொளிகள் ஏன் நண்பர்கள் பேஸ்புக், வட்ஸ்அப்பில் பகிரும் உருக்கமான கதைகள் என பலவற்றாலும் உருவாகிறது.

பத்திரிகையில் வறுமையால் வாடும் குடும்பங்கள் பற்றிய செய்தி மனதை பத பதைக்கிறது.

தொலைக்காட்சியில் தோன்றும் வறுமைக் காட்சிகள் நெஞ்சுக்கு வலியைத் தருகிறது. உலகமே வறுமையில்தான் வாடுகிறது என்ற முடிவுக்கு வர உங்களால் முடிகிறது.

ஊடகங்கள், உலகிலுள்ள எல்லா பிரச்சினைகளும் உங்களின் பிரச்சினையாகக் காட்டுவது போல், சமூக ஊடகங்களும் நீங்கள் காண்பதை உறுதிப்படுத்தியும் விடுகிறது.

நீங்கள் உலகத்தைப் பார்க்கும் விதம் பிழையானால், உலகத்தைப் பற்றி பிழையான அனுமானங்களை வெற்றிகரமாகச் செய்வீர்கள்.

மில்லியன் கணக்கில் நாளாந்தம் பகிரப்படும் போலிச் செய்திகளின் தோற்றுவாய் நீங்கள் காணும் உலகின் வெளிப்பாடாகும்.

ஸ்டீபன் கௌவ்கிங்ஸ், “அறிவின் மிகப்பெரிய எதிரி அறிமையாமை அல்ல. மாறாக அறிவைக் கொண்டிருப்பது போன்ற மாயையாகும்” என்கிறார்.

ஊடகங்களின் மூளைச்சலவைக்குள் சிக்கித் தவிக்காமலிருக்க என்ன செய்யலாம்?

எந்தத் தகவலையோ செய்தியைக் கண்டாலும் அது எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். தரவுகளைத் திரட்டுங்கள்.

நீங்கள் காண்பது பற்றி, கேட்பது பற்றி உங்களுக்கு பயம் தொற்றிக் கொண்டால், தரவுகளுக்கு அங்கே இடமிருக்காது.

அதனால் அவசரப்பட வேண்டியதில்லை. உங்களுக்கு யாரும் வேகமாகப் ஒன்றைப் பகிர்ந்துள்ளீர்கள் என்று வெற்றிக் கிண்ணம் தரப்போவதுமில்லை.

நீங்கள் பிழையான தகவலை வேகமாகப் பரப்புவதால் வரும் பாதிப்பு பல மடங்கானது என்பதை உணருங்கள். உங்களை ஓர் நெறியாள்கை செய்கின்ற ஊடகமாக்க, தேடித் தெரிந்து ஆய்ந்தறிந்து தகவல்களை பகிருங்கள். உங்களை உலகமே பின்தொடரும்.

ஆய்தத்தை ஆயுதமாகக் கொள்ளுங்கள்.

தாரிக் அஸீஸ்
07.01.2021

வட்டத்திற்குள் வாழ்வதா?

என் கருத்துகளோடு எல்லோரும் உடன்படுகிறார்கள். யாரும் என்னோடு விவாதிக்க எண்ணவில்லை. ஏன், என் கருத்துக்களையே ஊடகங்களில் வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

இப்படி யாருக்கும் தோன்றமுடியுமா? முடியும்.

இன்று இணையத்தில் இணைந்து இருக்கின்ற அனைவரினதும் எண்ணவோட்டமும் இதுதான்.

இது எப்படிச் சாத்தியமாகிறது?

சமூக ஊடகங்களில் நாம் சொல்கின்ற கருத்துகள், போடுகின்ற லைக்குகள், பகிர்கின்ற பதிவுகள் ஆகியன நாம் யார் என்பதை இயந்திரங்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றன.

இதனைக் கொண்டு இயந்திரமோ, நீங்கள் யாரென்பதை உணர்ந்து நீங்கள் விரும்பி நம்புகின்ற எல்லைக்குள் உங்களைக் கட்டி வைக்கிறது.

அல்கோரிதத்தின் முக்கிய வேலையே இதுதான்.

நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ அறிந்தோ அறியாமலோ ஒரு வட்டத்துக்குள்ளேதான் சமூக ஊடகங்களில் நீங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளீர்கள்.

இதற்குப் பெயர்தான் ஃபில்டர் பபல் (Filter Bubble). நீங்கள் நம்புகின்ற விடயங்களை அப்படியே உங்களுக்குக் காட்டி, உங்களை ஒரு வட்டத்திற்குள்ளேயே தேக்கி வைத்துவிடும் ஏற்பாடு.

Filter bubble எந்த வகையில் Confirmation biasஇலிருந்து வேறுபடுகிறது?

Confirmation bias இல் நீங்கள் நம்பியதை உறுதிப்படுத்த, தரவுகளைத் தேட வேண்டும். Filter bubbleஇல், நம்பியதை உறுதிப்படுத்த தரவுகள் தானாகவும் தொடர்ச்சியாகவும் உங்களுக்குக் காட்டப்படும். இங்குதான் அபாயம் ஆளத் தொடங்குகிறது.

உங்கள் சமூக ஊடகத்தின் காலக்கோடு என்பது, நீங்கள் நம்பி வாழ்கின்ற மாயையான வட்டம்.இணையத்தில் நீங்கள் எல்லாவற்றையும் தேடுகிறீர்கள். சுடச்சுட செய்திகள் என்பவை பேஸ்புக் பதிவுகளாக வருகின்றன. வட்ஸ்அப் செய்திகளாக வருகின்றன.

நீங்கள் தேடியதை எல்லாம் தேக்கி வைத்துள்ள சமூக ஊடகங்கள், நீங்கள் தேடாமலேயே, உங்களுக்குக் கட்டாயம் பிடிக்கும் என்ற உறுதியான நம்பிக்கையில் ஓர் உலகத்தை உங்களுக்கு காட்டிக் கொண்டிருக்கிறது.

அந்த உலகம் உண்மையென நம்பச் செய்வதில் உங்களிடம் வெற்றியும் காண்கிறது.

ஒவ்வொரு நாளும் இது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

உங்களின் அரசியல் தெரிவு, வாழ்க்கையின் கோலம், செய்திகளின் பரிந்துரை என அனைத்தும் இயந்திரங்களால் ஆளப்படுகிறது.

நீங்கள் பேஸ்புக்கில் பிடிக்கும் சண்டைகள், காணும் சச்சரவுகள் என எல்லாம் உங்கள் உலகத்தில் மட்டுமே நிகழ்கிறது. அவை இன்னொருவரின் உலகத்தில் நிகழ்ந்தால், நீங்கள் ஒரு குழுவாக ஒரு Filter bubble க்குள் வாழ்கிறீர்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும்.

இந்த Filter bubble இலிருந்து பாய்ந்தோட வழியேதும் உள்ளதா?

நீங்கள் யார் என்பதை, அறிந்து கொள்ள முயற்சியுங்கள். அதிகமானோர் நம்புகின்ற கருத்து எப்போதும் உண்மையானது என்கின்ற பொய்யிலிருந்து விடுபடுங்கள்.

நீங்கள் அறிந்து கொள்கின்ற செய்திகளையும் தகவல்களை வெவ்வேறு மூலங்களில் உறுதிப்படுத்த முனைப்புக் காட்டுங்கள்.

ஒரு கதையின் அத்தனை பக்கங்களையும் அறிந்து கொள்ள ஆர்வங்காட்டுங்கள்.

நண்பர் பரிந்துரை செய்தாலோ, சமூக ஊடகம் பரிந்துரை செய்தாலோ, அது பொருத்தமானதா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

உங்களின் அனுமதியில்லாமல் யாரும் உங்களின் மனதில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்ற உண்மையை நீங்கள் உணருங்கள்

இவைகளை நீங்கள் செய்கின்ற போது, நீங்கள் Filter bubbleஇற்கு வெளியே வந்து, அது மற்றவர்களை ஆட்டிப் படைப்பதைக் கண்டு திகைப்பீர்கள். உங்கள் வாழ்வு நிம்மதியாகத் தொடரும்.

தெரிவு உங்களிடம்.

தாரிக் அஸீஸ்
6.1.2021

ஒப்பிடும் கலை

உங்கள் நண்பர்கள் பகிரும் நிழற்படங்கள், செய்திகள், மகிழ்ச்சிகள் என பலதையும் சமூக ஊடகங்களில் நாளாந்தம் காண்கிறீர்கள்.

அவர்களோடு, உங்களை ஒப்பிடத் தொடங்கும் போது, உங்கள் மகிழ்ச்சியை நீங்களே தொலைக்க தொடங்குகிறீர்கள்.

நீங்கள் காண்பதெல்லாம், அவர்களின் ஒரு கணத்தின் வெளிப்பாடு மட்டுந்தான். அந்த இடத்தை அவர்கள் அடையச் செய்த விடாமுயற்சி, உழைப்பு என எதுவுமே பார்வைக்கு வராது.

உங்களின் ஆரம்பத்தை இன்னொருவரின் நிறைவான சாதனையில் நின்று ஒப்பிடுவது எந்த வகையில் முறையாகும்?

அப்படி நீங்கள் ஒப்பிட்டுத்தான் ஆக வேண்டுமென்றால், நேற்றைய உங்களோடு இன்றைய உங்களை ஒப்பிடுங்கள்.

நாளை விடியும். வாய்ப்புகள் வளரும். பாதை தெளிவாகும்.

உங்களோடு, உங்களை ஒப்பிட்டுக் கொண்டேயிருங்கள்.

செயல் என்பது பெயரல்ல. அது வினை.

தாரிக் அஸீஸ்
3.1.2021

இலக்குகள் வேண்டாம்

இலக்குகள் என்பவை மாயைகள் என்றே எண்ணுகிறேன்.

நீங்கள் இலக்கை நோக்கி பயணிக்கின்ற பாதைதான் இலக்குக்கு முகவரி கொடுக்கிறது.

இலக்கை அடைந்தேனா, அதை நோக்கி நகர்ந்தேனா, அதை விலக்கி நடந்தேனா என்பதை உங்கள் பயணமே தீர்மானிக்கிறது.

ஒவ்வொரு நாளும் இலக்கை நோக்கிச் செய்கின்ற சின்னச் சின்ன செயல்கள், நாளடைவில் பிரமாண்டமாய் உருவாவதே உண்மை.

இலக்குகளை நீங்கள் உருவாக்கத் தேவையில்லை. இலக்குகளை அடைந்து கொள்வதற்கான முறைமையே உங்களுக்கு தேவைப்படுகிறது.

நீங்கள் ஒவ்வொரு நாளும் செய்பவைதான் உங்களுக்கு முகவரி தருகிறது. செல்வத்தைத் தருகிறது. வாழ்வைத் தருகிறது. வசதியைத் தருகிறது. மனஅமைதியைத் தருகிறது.

எழுத வேண்டுமென நினைக்கிறீர்களா? நீங்கள் எழுதுவதை மற்றவர்கள் வாசிக்க வேண்டுமென துடிக்கிறீர்களா? நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எழுதுவது மட்டுந்தான்.

இங்கு செயல் தான் உங்களைச் செதுக்கும்.

ஒவ்வொரு நாளாய் உங்களைச் செதுக்குங்கள். சிற்பி செதுக்கிய சிற்பமாவீர்கள்.

ஜேம்ஸ் கிளியரின் “Atomic Habits” இலிருந்து.