“நீ அமெரிக்காவுக்கே திரும்பிப் போயிடு சிவாஜி” என்ற ஒற்றை வசனத்தில் அரசியல் பேசியவர்.
“நீங்க நம்பர் பிளேட் என்ன கலரென்று முடிவு பண்ணுங்க. அப்புறம் நான் மாட்டுறன்” என்ற வசனம் மூலம், தான் வாழும் சூழலின் ஆட்சி மாற்றத்தின் அலப்பறைகளை அப்படியே கண்முன் கொண்டு வந்தவர்.
சினிமாக் கலையில், தான் பயணிக்கும் காலத்தைப் பிரதிபலிப்பதாய் அவரின் வசனங்களை அமைத்தவர்.
“எப்படி இருந்த நான் இப்படியாயிட்டேன்” என்ற வசனத்தை நீங்கள் பாவிக்காமல் இருக்க வாய்ப்பில்லை.
சமூகத்தின் அறியாமையை கண்டு, “ஆயிரம் பெரியார் வந்தாலும் உங்களயெல்லாம் திருத்தவே முடியாது” என்று தனது கோபத்தை வெளிக்காட்டியவர்.
“உள்ளுக்குள்ள ஆயிரத்தெட்டு ஸ்பேர் பார்ட்ஸ் இருக்கு அதுல ஓடாத வண்டியாடா இந்த ஒத்த எலுமிச்சம் பழத்துல ஓடப்போகுது?” என்று மூடநம்பிக்கைகளை கேலி செய்தவர்.
அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் மனிதர்கள், கேள்விப் படும் சம்பவங்களை தன் பாணியில் காட்சியில் கொண்டு வரும் அவரின் சமயோசிதம் உச்சமானது.
“எனக்கு ஐஜி எ நல்லாத் தெரியும். ஆனா அவருக்கு என்னத் தெரியாது” என்ற வசனத்தில் மனிதர்களின் போலியான விம்பத்தை கிழித்தவர்.
“யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்குறா நீ டீ ஆத்துற? உன் கடமை உணர்ச்சிக்கு அளவேயில்லையடா?” என்று மனிதர்களின் சமூகம் பற்றிய புறக்கணிப்பை எள்ளி நகையாடிவர்.
“வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் உலகடா இது. உயிரோடு இருக்கும் போது, ஒரு வாய் தண்ணி தரமாட்டான். ஆனா, செத்து போயிட்டா வாயில பால ஊத்துற உலகம் டா இது” என்று வாழ்வின் நவீன முரணை பேசியவர்.
“எங்க மக்கள் பாவம் சார். பீஎம்பீ – Poor Memory People. எதையும் சீக்கிரம் மறந்துடுவாங்க” என்று மக்களின் மீதான ஆதங்கத்தைப் பதிவு செய்தவர்.
நவீன சினிமாவில் வசனங்களால் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர்.
“அவா.. அவா என்டு சொல்லிறியலே.. யாரு அந்த அவா அரிசி கோதுமை எல்லாம் ரவா. அதை வெளைய வெக்கிறது அவா. மொத்தத்தில அவா இல்லன்னா நமக்கு ஏதுகாணும் புவா?” என்று முடியும் நீண்ட காட்சியில் தோன்றி, சாதி, வர்ணம் என்பதைப் பற்றிய தீய பார்வையையும் எண்ணத்தையும் சாடியவர்.
பத்மஶ்ரீ விவேக் அவர்களின் சினிமா மூலமான வசனங்களின் வாசிப்பை இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
சமூகப் பொறுப்பு, கல்வி, சமூக நீதி என்பன பற்றி கருத்துக்கள் சொல்வதோடு நிற்காமல், செயல்வடிவம் கொடுத்தவர்.
“பசுமை கலாம்” செயற்றிட்டம் மிகப்பெரிய எடுத்துக்காட்டு.
ஒரு கோடி மரங்களை நடும் இலக்கோடு, அவர் மரணிக்கும் வரையில் 33 இலட்சம் மரங்களை நட்டவர்.
காலம், அவரை பல தலைமுறைகளுக்கு காவிக் கொண்டு வலம் வந்து கொண்டேயிருக்கும்.
விவேக் அவர்கள் தா. பா அவர்களின் மறைவின் போது, ட்வீட் செய்தது, அவருக்கும் பொருந்திப் போகிறது.
“எளிய தன்னலமற்ற தூய வாழ்வும் ஓர் நாள் முடிந்துதான் போகிறது! எனினும் பலர் இறப்பர்; சிலரே, இறப்பிற்குப் பின்னும் இருப்பர்!!”
விவேக் அவர்களின் நீங்கள் விரும்புகின்ற இங்கு நான் குறிப்பிட மறந்த அல்லது விடுபட்ட வசனங்கள் இருந்தால் மறுமொழியில் சொல்லுங்கள்.
தாரிக் அஸீஸ்
17.04.2021
