என் கருத்துகளோடு எல்லோரும் உடன்படுகிறார்கள். யாரும் என்னோடு விவாதிக்க எண்ணவில்லை. ஏன், என் கருத்துக்களையே ஊடகங்களில் வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.
இப்படி யாருக்கும் தோன்றமுடியுமா? முடியும்.
இன்று இணையத்தில் இணைந்து இருக்கின்ற அனைவரினதும் எண்ணவோட்டமும் இதுதான்.
இது எப்படிச் சாத்தியமாகிறது?
சமூக ஊடகங்களில் நாம் சொல்கின்ற கருத்துகள், போடுகின்ற லைக்குகள், பகிர்கின்ற பதிவுகள் ஆகியன நாம் யார் என்பதை இயந்திரங்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றன.
இதனைக் கொண்டு இயந்திரமோ, நீங்கள் யாரென்பதை உணர்ந்து நீங்கள் விரும்பி நம்புகின்ற எல்லைக்குள் உங்களைக் கட்டி வைக்கிறது.
அல்கோரிதத்தின் முக்கிய வேலையே இதுதான்.
நீங்கள் விரும்பியோ விரும்பாமலோ அறிந்தோ அறியாமலோ ஒரு வட்டத்துக்குள்ளேதான் சமூக ஊடகங்களில் நீங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளீர்கள்.
இதற்குப் பெயர்தான் ஃபில்டர் பபல் (Filter Bubble). நீங்கள் நம்புகின்ற விடயங்களை அப்படியே உங்களுக்குக் காட்டி, உங்களை ஒரு வட்டத்திற்குள்ளேயே தேக்கி வைத்துவிடும் ஏற்பாடு.
Filter bubble எந்த வகையில் Confirmation biasஇலிருந்து வேறுபடுகிறது?
Confirmation bias இல் நீங்கள் நம்பியதை உறுதிப்படுத்த, தரவுகளைத் தேட வேண்டும். Filter bubbleஇல், நம்பியதை உறுதிப்படுத்த தரவுகள் தானாகவும் தொடர்ச்சியாகவும் உங்களுக்குக் காட்டப்படும். இங்குதான் அபாயம் ஆளத் தொடங்குகிறது.
உங்கள் சமூக ஊடகத்தின் காலக்கோடு என்பது, நீங்கள் நம்பி வாழ்கின்ற மாயையான வட்டம்.இணையத்தில் நீங்கள் எல்லாவற்றையும் தேடுகிறீர்கள். சுடச்சுட செய்திகள் என்பவை பேஸ்புக் பதிவுகளாக வருகின்றன. வட்ஸ்அப் செய்திகளாக வருகின்றன.
நீங்கள் தேடியதை எல்லாம் தேக்கி வைத்துள்ள சமூக ஊடகங்கள், நீங்கள் தேடாமலேயே, உங்களுக்குக் கட்டாயம் பிடிக்கும் என்ற உறுதியான நம்பிக்கையில் ஓர் உலகத்தை உங்களுக்கு காட்டிக் கொண்டிருக்கிறது.
அந்த உலகம் உண்மையென நம்பச் செய்வதில் உங்களிடம் வெற்றியும் காண்கிறது.
ஒவ்வொரு நாளும் இது தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
உங்களின் அரசியல் தெரிவு, வாழ்க்கையின் கோலம், செய்திகளின் பரிந்துரை என அனைத்தும் இயந்திரங்களால் ஆளப்படுகிறது.
நீங்கள் பேஸ்புக்கில் பிடிக்கும் சண்டைகள், காணும் சச்சரவுகள் என எல்லாம் உங்கள் உலகத்தில் மட்டுமே நிகழ்கிறது. அவை இன்னொருவரின் உலகத்தில் நிகழ்ந்தால், நீங்கள் ஒரு குழுவாக ஒரு Filter bubble க்குள் வாழ்கிறீர்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும்.
இந்த Filter bubble இலிருந்து பாய்ந்தோட வழியேதும் உள்ளதா?
நீங்கள் யார் என்பதை, அறிந்து கொள்ள முயற்சியுங்கள். அதிகமானோர் நம்புகின்ற கருத்து எப்போதும் உண்மையானது என்கின்ற பொய்யிலிருந்து விடுபடுங்கள்.
நீங்கள் அறிந்து கொள்கின்ற செய்திகளையும் தகவல்களை வெவ்வேறு மூலங்களில் உறுதிப்படுத்த முனைப்புக் காட்டுங்கள்.
ஒரு கதையின் அத்தனை பக்கங்களையும் அறிந்து கொள்ள ஆர்வங்காட்டுங்கள்.
நண்பர் பரிந்துரை செய்தாலோ, சமூக ஊடகம் பரிந்துரை செய்தாலோ, அது பொருத்தமானதா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
உங்களின் அனுமதியில்லாமல் யாரும் உங்களின் மனதில் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்ற உண்மையை நீங்கள் உணருங்கள்
இவைகளை நீங்கள் செய்கின்ற போது, நீங்கள் Filter bubbleஇற்கு வெளியே வந்து, அது மற்றவர்களை ஆட்டிப் படைப்பதைக் கண்டு திகைப்பீர்கள். உங்கள் வாழ்வு நிம்மதியாகத் தொடரும்.
தெரிவு உங்களிடம்.

தாரிக் அஸீஸ்
6.1.2021