எண்ணம். வசந்தம். மாற்றம்.

உத்வேகம் பெறுவதற்கான ஒரு வழி

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  2 நிமிடங்களும் 1 செக்கனும் தேவைப்படும்.) [?]

படைப்பாக்கம் பற்றிய புரிதல் என்பதும் அதன் தளத்தில் எம்மைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமென்பதுவும் வேறுபட்ட இரு விடயங்கள்.

இங்கு — அதைச் செய்வேன், அல்லது அதை இப்படி அவன் செய்திருக்கலாம், அல்லது அவர்கள் ஏன் இப்படி இதைச் செய்யவில்லை, அல்லது அவளுக்கு இதைக்கூடச் செய்யத் தெரியாதா? என்றவாறான மொழியாடல்களுக்குப் பஞ்சமில்லை.

ஆனால், உண்மையில், செயல் என்பது வேறு. பேச்சு என்பது வேறு. இந்த இரண்டும் பற்றிய விடயங்களை நாம் வெவ்வேறு தளங்களிலிருந்தே அறிய முனைய வேண்டும்.

படைப்பாக்கம் பற்றிய புரிதல் உண்டாக வேண்டுமென்றால், அது தொடர்பாக புத்தகங்களை தொடர்ச்சியாக வாசிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டால் அதில் எனக்கு உடன்பாடில்லை. இங்கு வாசிப்பு என்பது முக்கியமானதுதான். ஆனால், வெறும் வாசிப்பு பயனில்லாதது.

படைப்பாக்கம் என்பதே ஒரு வினை. அதுபற்றி அறிந்து கொண்டு, எதையும் படைக்காமல் எங்கே வினையிருக்கிறது? விளைவிருக்கிறது?

கற்பனைக் கட்டுரைகள் — நான் வைத்தியனானால்.. நான் பறவையானால்.. என்று தொடங்கி, எழுதுகின்ற வித்தையை பாலர் வகுப்பு பிள்ளைகளும்தான் சொல்லிப் பழகுகின்றார். ஆக, பேச்சு என்பது இங்கு மலிவானது. அது தொடர்பான வினைதான் இங்கு விலை அதிகமாய் இருக்கிறது.

ஒரு விடயத்தை என்னால் செய்ய முடியும் என நம்பிக்கை கொள்வது ஒரு வகை. அந்த விடயத்தை செய்து, அந்த நம்பிக்கைக்கு ஆயுள் கொடுப்பது இன்னொரு வகை. இதில் பிந்திய வகையில் தான் நம்பிக்கை, தனக்கு அர்த்தம் பூசிக் கொள்கிறது.

tumblr_npoinkmkuo1sfie3io1_1280

ஒரு விடயத்தைச் செய்யலாம் என்ற நம்பிக்கைக் கொண்டு, அது பற்றி அறிந்து செய்யத் தொடங்குகின்ற நிலையில், பிரயோக ரீதியான பல இடையூறுகள் தோன்றலாம். அவற்றை எல்லாம் சமாளித்துச் சரி செய்து அந்த விடயத்தை செய்து முடிக்கின்ற போதே, படைப்பாக்கம் பற்றிய புரிதல் மேலோங்குகிறது.

இங்கு யாருக்கும் எல்லாமும் தெரியாது. ஆனால், எல்லோருக்கும் ஏதாவதொன்று தெரியும். இந்த இயல்பான உண்மையை நாம் உணர்ந்து கொள்கின்ற நிலையில், படைப்பாக்கம் பற்றிய உத்வேகம் தானாகவே குடிகொண்டுவிடும்.

ஒரு விடயத்தை செய்வதன் மூலமே, அந்த விடயம் தொடர்பான தெளிவைப் பெற முடியும். எடுத்துக் காட்டாக, எழுதுவதை எடுத்துக் கொள்வோம். எழுதுவது பற்றி அறிய வேண்டுமா? தொடர்ந்து எழுத வேண்டும். வரைவது பற்றிய தெளிவைப் பெற வேண்டுமா? தொடர்ந்து வரைய வேண்டும்.

நான் ‘தொடர்ந்து’ என்பதை இங்கே வலியுறுத்திச் சொல்கின்றேன். நாளாந்த பழக்க வழங்கங்களில் ஒன்றாக எமது படைப்பாக்க நிலைகள் அமைகின்ற போது, அந்தப் படைப்பாக்கத்தின் பாலான தேர்ச்சி பெறுதலின் தெளிவை நாம் மெல்ல மெல்ல உணரத் தொடங்குவோம்.

கடந்த ஏப்ரல் மாதம் ஏழாம் திகதியிலிருந்து, ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக 100 நாட்களுக்கு, ஒவ்வொரு எழுத்தழகியல் எண்ண வரைபை உருவாக்கி, வெளியிட வேண்டுமென திடசங்கல்பம் பூண்டேன். இன்று அதன் 84 ஆம் நாள்.

இந்தத் தொடர் படைப்பாக்கப் பயிற்சியின் மூலமாக வரைதல் பற்றிய பல விடயங்களை அறிந்து கொள்கின்ற வாய்ப்பு தொடர்ச்சியாகக் கிட்டுகின்றது. அதன் நுணுங்கள் பற்றிய தேர்ச்சியும் எனக்குள் தொற்றிக் கொள்கிறது. ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக வரைய வேண்டும் என்கின்ற ஒழுக்கமும் துணையாகி வருகின்றது.

ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக இந்தப் படைப்பாக்க நிலையில் என்னை உட்படுத்துகின்ற போது, உத்வேகம் என்பது தானாகவே ஒட்டிக் கொள்கிறது. இதுவோர் அழகிய அனுபவம்.

உத்வேகத்தின் தேவையும் பெறுகையும் நீங்கள் ஒரு விடயத்தை தொடர்ச்சியாக செய்வதில் காட்டும் ஒழுக்கத்திலேயே கூடிவருகிறது.

இங்கு படைப்பாக்கம் என்பது போற்றப்பட வேண்டும். எப்படிப் படைப்பாக்கத்தைப் போற்றுவது? என்கின்ற கேள்வி தொக்கி நிற்கிறது. படைத்தலின் மூலம் படைப்பாக்கம் உண்டாகிறது. புகழ்ச்சி கொள்கிறது. பெருமை அடைகிறது. போற்றப்படுகிறது. படைப்பதே, படைப்பாக்கத்தைப் போற்றுகின்ற ஒரேவழி.

இனி உத்வேகம் தேடி அலைவது, அல்லது எதைப் படைப்பது என்றெல்லாம் அங்கலாய்ப்பதை நாம் குறைக்கலாம், அல்லது முற்றிலுமாக நிறுத்தலாம். இங்கு எல்லோரிடடும் எல்லாமும் பற்றிய கருத்து இருக்கிறது. ஆனால், எத்தனை பேரிடம் கருத்துக்களை வாங்குகின்ற படைப்பிருக்கிறது?

கருத்துச் சொல்பவர்கள் சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். அவர்கள் நுகர்வோர். அவர்களோடு நீங்களும் சேர்ந்து கருத்துக்களைச் சொல்லப் போனால், கடைசியில் வெறும் கருத்துக்கள் தான் எஞ்சியிருக்கும். காரியம் எதுவும் நடந்திருக்காது.

வெறும் கருத்துக்களை விடுத்து, கருத்துக்களுக்கு வடிவம் கொடுக்கலாம். படைக்கலாம். படைத்ததைப் பகிரலாம். அதுவோரு எழுத்தாகவிருக்கலாம், சித்திரமாகவிருக்கலாம், கடிதமாவிருக்கலாம். இங்கு கருத்துக்களின் சேர்க்கையின் மூலம் தோன்றுகின்ற படைப்பாக்கத்தின் தேவையே இருக்கிறது.

நீங்கள் படைப்பதையா அல்லது நுகர்வதையா தேர்ந்தெடுக்கப் போகிறீர்கள்.

  • தாரிக் அஸீஸ்

எனது எழுத்தழகியல் வரைபுகளை இங்கே காணலாம்.
இன்ஸ்டகிராமில் என்னை இங்கே பின் தொடரலாம்.


இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்