எண்ணம். வசந்தம். மாற்றம்.

வாசிப்பு: மனச்சித்திரங்களின் வானம்

“நான் வாசித்த அனைத்தினதும் ஒரு பகுதியாகவே நான் இருக்கிறேன்,” என்று தியோடர் ரூஸ்வெல்ட் சொல்கிறார்.

இன்று உலக புத்தக தினம்.

உங்கள் வாழ்வில் நூல்கள் தரக்கூடிய தாக்கம் மிக முக்கியமானது.

வாசிப்பின் தேவையை பூர்த்தி செய்கின்ற வழி நூல்கள்.

உங்கள் யோசனைகளின் தோற்றுவாயாக மனச்சித்திரங்கள் வரும்.

அந்த மனச்சித்திரங்களின் விசித்திரம், வாசிக்கின்ற நூல்கள் மூலமே நெறியாள்கை செய்யப்படுகிறது.

உங்களின் வாழ்க்கையின் வருங்கால பெறுமதியை நிர்ணயிக்கும் கூறுகளாக நீங்கள் வாசிக்கும் நூல்கள் இருக்கின்றன.

உடலுக்கு உடற்பயிற்சி எப்படி வலிமை சேர்க்கிறதோ,

மூளைக்கு வலிமை சேர்ப்பது வாசிக்கும் உங்கள் செயலாகிறது.

புத்தகங்களை வாசிக்கும் உங்களின் தேட்டம், உங்களின் ஞாபகங்கள், யோசனைகளை நெறிப்படுத்தும்.

அடுத்தவரின் கவலை, வாழ்வை அறிந்து கொண்டு அவர்களுக்கு உதவுவதற்கான வாய்ப்பை வாசிப்பு கொண்டு தரும்.

உங்களுக்கே உரித்தான யோசனைகளை உருவாக்க உபயமாக வருவது நீங்கள் வாசிக்கும் நூல்கள் தாம்.

உங்களின் மனத்தின் அமைதியையும் ஓர்மையையும் சாத்தியமாக்கும் தன்மை புத்தகங்களுக்கு உண்டு.

வாசிப்பது என்பது, மனச்சித்திரம் வரைவதாகும்.

புத்தகங்கள் வேண்டி நிற்பது செயலை; அவை சொல்பவற்றை மனத்தில் கொண்டுவரும் ஆற்றலை.

மனவுளைச்சலை 68 சதவீதம் குறைக்கக்கூடிய ஆற்றல், புத்தகங்களை வாசிப்பதால் தோன்றுகிறது என,

இங்கிலாந்தின் சசக்ஸ் பல்கலைக்கழக ஆய்வுகள் சொல்கின்றன.

மூளையை கட்டமைத்து, நீண்ட நாள் நினைவுகளை தேக்கி வைப்பதை, புத்தக வாசிப்பு கூர்மைப்படுத்துகிறது.

முதலாம் உலகப் போரில் பங்கேற்ற இராணுவ வீரர்களை போரின் வடுக்களிலிருந்து மீள வைப்பதற்காக,

அமெரிக்க நூலக சேவை, இராணுவ வீரர்களுக்கு புத்தகங்களை வழங்கி வாசிக்கச் செய்தது.

அந்த வீரர்களின் மனத்தில் அமைதியும், ஆர்வமும், அழகியலும் தோன்றியது என்பது வரலாறு.

ஒரு புத்தகத்தை வாசிக்க வேண்டுமென நீங்கள் எண்ணியிருக்கலாம்.

ஆனால், அதைத் தொடங்குவது உங்களால் முடியாமல் போயிருக்கலாம்.

இன்று அதற்கான நேரம், நீங்கள் விரும்பிய அந்தப் புத்தகத்தை கையில் எடுங்கள்.

ஓரிரண்டு பக்கங்கள் வாசியுங்கள்.

ஒவ்வொரு நாளும் வாசியுங்கள்.

சின்னச் சின்னதாய் தொடங்குங்கள். சிகரம் எட்டுவீர்கள்.

வாசித்தவைகளை உங்களை நேசிப்பவர்களோடு பகிருங்கள்.

உங்கள் மனத்தில் தெளிவு பிறக்கும், மூளையில் நினைவு மையம் கொள்ளும்.

நல்ல புத்தகங்களை வாங்குங்கள். அல்லது நூலகங்களில் இருந்து இரவல் எடுங்கள்.

PDF ஆய் கேட்காதீர்கள். PDF ஆக பகிராதீர்கள்.

முடிந்தால், Kindle ஒன்றை வாங்குவதில் முதலீடு செய்யுங்கள்.

எல்லாம் நெறிப்படும்.

கல்யாண்ஜியின் இந்தக் கவிதையோடு நிறைவு செய்கிறேன்.

“ஆறே
பார்க்காதவர்களை
அருவி
பார்க்காதவர்களை
கடல்
பார்க்காதவர்களை
எப்போதும்
பார்த்துவிடுகிறது
மழை.”

இந்தச் சாதாரண வரிகளை வாசிக்கின்ற போது,

உங்களில் தோன்றும் மனச்சித்திரத்தைக் கண்டு வியக்காமல் இருக்க முடியுமா?

தாரிக் அஸீஸ்
23.04.2021

வாசியுங்கள்.

“வாசிப்பு: மனச்சித்திரங்களின் வானம்” அதற்கு 4 மறுமொழிகள்

  1. Kunaseelan Subramaniam Avatar
    Kunaseelan Subramaniam

    வணக்கம். அருமையான பகிர்வு. நன்றி.

    1. Tharique Azeez | உதய தாரகை Avatar
      Tharique Azeez | உதய தாரகை

      நன்றிங்க.

  2. Kugathasan Nadesan Avatar
    Kugathasan Nadesan

    மிக அருமையான பதிவு.

    On Fri, 23 Apr 2021 17:10 நிறம் by தாரிக் அஸீஸ், wrote:

    > Tharique Azeez | உதய தாரகை posted: ” “நான் வாசித்த அனைத்தினதும் ஒரு
    > பகுதியாகவே நான் இருக்கிறேன்,” என்று தியோடர் ரூஸ்வெல்ட் சொல்கிறார். இன்று
    > உலக புத்தக தினம். உங்கள் வாழ்வில் நூல்கள் தரக்கூடிய தாக்கம் மிக
    > முக்கியமானது. வாசிப்பின் தேவையை பூர்த்தி செய்கின்ற வழி நூல்கள். உங்கள் யோச”
    >

    1. Tharique Azeez | உதய தாரகை Avatar
      Tharique Azeez | உதய தாரகை

      நன்றிங்க.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்