எண்ணம். வசந்தம். மாற்றம்.

பங்குச் சந்தையை புரட்டிப் போட்ட திருப்புமுனை: அறிவோம் தெளிவோம்

என்னதான் நடக்கிறது?

வீடியோ விளையாட்டுக்களை டீவீடீயாக விற்பனை செய்து வந்த நிறுவனம்தான் GameStop.

இணையத்தின் ஆதிக்கம் இருக்கும் இக்காலத்தில் டீவீடீகளை விற்பனை செய்தால் இலாபம் கிடைக்குமா என்ன?

பெருந்தொற்றுக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி GameStop மிகப்பெரும் நட்டத்தில் இயங்கியது.

ஆனால், இந்த வாரம் இந்த நிறுவனத்தின் பங்குகளின் அதீத விலையுயர்ச்சியால் நியுயோர்க்கின் வோல் ஸ்ட்ரீட் பங்குசந்தை கதிகலங்கியுள்ளது.

நட்டத்தில் இயங்கிய இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை அதியுச்சமானது எப்படிச் சாத்தியமாகியது?

இந்தச் சம்பவம், உலக வரலாற்றின் திருப்புமுனை என்றுகூடச் சொல்லிவிடலாம்.

இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது என்பதை அறிந்து கொள்ள, பங்குச் சந்தையின் நடவடிக்கைகளில் “Short” என்ற நிலை பற்றி அறிந்து கொள்வது முக்கியமாகும்.

பங்குச் சந்தையில் Short எனப்படுவது, ஒரு பங்கை நீங்கள் தரகரிடம் இரவல் வாங்கி, அதன் விலை குறையும் என்ற நம்பிக்கையில் உடனடியாக அதனை விற்கிறீர்கள். இதன் முக்கிய நோக்கம், பங்கின் விலை குறைந்ததும் விற்ற பங்கை குறைந்த விலைக்கு வாங்கி, இரவல் வாங்கிய பங்கை தரகருக்கு கொடுத்துவிட்டு மீதமுள்ளதை இலாபமாக எடுத்தக் கொள்வதாகும்.

உதாரணமாக, A என்ற நிறுவனத்தின் ஒரு பங்கின் தற்போதைய விலை 10 ரூபா என்று வைத்துக் கொள்வோம். அந்தப் பங்கை தரகரிடமிருந்து இரவல் எடுத்து, உடனடியான 10 ரூபாய்க்கு விற்றுவிடுகிறீர்கள்.

இப்போது உங்களிடம் 10 ரூபாய் பணம் இருக்கிறது. அத்தோடு நீங்கள் தரகரிடமிருந்து வாங்கிய ஒரு பங்கு அவருக்கு மீண்டும் கொடுக்க வேண்டும் என்ற தேவையும் இருக்கிறது.

இப்போது, A என்ற நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 6 ரூபாவாக குறைந்துள்ளது என வைத்துக் கொள்வோம். இப்போது, நீங்கள் ஏற்கனவே விற்ற பங்கை 6 ரூபாய்க்கு வாங்குகிறீர்கள். தரகரிடம் இரவலாக வாங்கிய பங்கையும் திருப்பி கொடுத்தும்விடுகிறீர்கள்.

இங்கு, நீங்கள் 10ரூபாய்க்கு விற்ற பங்கை, மீண்டும் வாங்க உங்களுக்குச் செலவானது 6 ரூபாய் தான். ஆக, 4 ரூபாய் இலாபமாக உங்களுக்கு இதன் மூலம் கிடைத்துள்ளது.

இது இப்படியிருக்க, இங்கு பங்கின் விலை குறைந்தது போல், பங்கின் விலை கூடினால் என்ன நடக்கும்?

நீங்கள் இரவலாக வாங்கிய பங்கை தரகருக்கு வழங்கத்தான் வேண்டும். 10ரூபாய்க்கு விற்ற பங்கின் தற்போதைய விலை 15 ரூபாய் என்றால், நீங்கள் மேலதிகமாக 5ரூபாய் சேர்த்துத்தான் 15ரூபாய்க்கு அந்தப் பங்கை மீண்டும் வாங்க வேண்டும். அப்போதுதான் இரவல் வாங்கிய பங்கை தரகருக்கு திரும்பித் தர முடியும். இங்க உங்களுக்கு 5 ரூபாய் நட்டம் ஏற்படும்.

ஆனால், இதிலிருக்கின்ற சுவாரஸ்யம், 15ரூபாயாகத்தான் பங்கின் விலை இருக்குமென்பதில்லை. அது எவ்வளவு வேண்டுமானாலும் கூடிக் கொண்டே செல்லலாம். அப்படியானால், பங்கின் விலையுயர உயர, நட்டமும் கூடிக் கொண்டே செல்லும். அதனால், விற்ற பங்குகளை வேகமாக வாங்கி தரகரிடம் மீண்டும் தரவேண்டிய நிர்ப்பந்தம் உங்களுக்கு ஏற்படும்.

இனி GameStop இல் இது எப்படி நடந்தது எனப் பார்ப்போம்.

GameStop இன் பங்குகளை Short முறையில் கையகப்படுத்தி அதிக இலாபமீட்டுவதையும் அதன் மூலம் GameStop ஐ கடன்தீர்க்க முடியாத நிலைக்குத் தள்ளுவதற்கும் Hedge Fund முனைப்புக் காட்டியதை, Reddit இணையத்தளத்திலுள்ள ஒரு பிரிவான WallStreetBets என்ற தன்னார்வலர்கள் கடந்த சில வாரங்களாக அவதானித்தனர். இதற்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டுமென முடிவு செய்தனர்.

WallStreetBets என்கின்ற Reddit இணையக் குழுமத்தில் 2 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் செயல்நிலையில் இருக்கிறார்கள்.

அங்குள்ள உரையாடல்களில், GameStop இன் பங்குகளை அதிகமதிமாக வாங்குமாறு செய்திகள் பரிமாறப்பட்டன. தங்களால் முடியுமான அளவுக்கு GameStop இன் பங்குகளை வாங்குமாறு குழுமத்திலுள்ளவர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

GameStop பங்குகள் வேகமாக வாங்கப்பட்டன. பங்குகளின் விலை அதிகரிக்கத் தொடங்கியது. இதனால், Short முறையில் இலாபமீட்டிய Hedge Fund பில்லியன் கணக்கான அமெரிக்க டொலர்களை இழக்கத் தொடங்கியது. Hedge Fundஇன் மொத்தப் பெறுமதியான 13.1 பில்லியன் டொலர்களைத் தாண்டி அவர்கள் அடைந்த நட்டம் உயர்ந்தது.

தமது Short நிலையிலிருந்து மீள்வதற்கு, Hedge Fund வேகமாக GameStopஇன் பங்குகளை அதிகமான விலையில் திரும்ப வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால் பங்குகளின் விலை இன்னமும் கூடியது. இந்த நிலைதான் பங்குச் சந்தை நடவடிக்கையில் ‘Short Squeeze’ எனப்படுகிறது.

இப்போது, Hedge Fund தாம், கடன் தீர்க்க முடியாத நிலையை (Bankruptcy) அடைந்துவிட்டதாக அறிவித்துள்ளது. ஏனைய Hedge Fund நிலைகளும் இந்த இணையப் பயனர்களின் ஏற்பாட்டால் கதிகலங்கலாம் என்ற பயத்தில் Short நிலையின் எதிர்ச் சம்பவங்கள் பங்குச் சந்தையில் வெவ்வேறு வகையில் இடம்பெறத் தொடங்கியுள்ளன.

பொதுமக்கள் இணைந்து பங்குச் சந்தையில் இப்படி மாற்றத்தைக் கொண்டுவருவது சட்டவிரோதமானது என வோல் ஸ்ட்ரீட் அழத் தொடங்கியுள்ளது. எப்படியாயினும், சாதாரண மக்களின் சக்தியின் முன்னால், வோல் ஸ்ட்ரீட்டின் செல்வந்த ஜாம்பவான்கள் தோற்றுப் போயுள்ளதே இங்கு நடந்தேறியுள்ளது.

இதையொரு நவீன தாவீது கோலியாத் கதையென்றே சொல்ல வேண்டும்.

தாரிக் அஸீஸ்
30.01.2021

கோலியாத்தை வீழ்த்தி தாவீது.

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்