என்ன இது தலைப்பே ஏதோ “பன்ச் டயலொக்” மாதிரி இருக்கே என்று யோசிக்காதீர்கள். உண்மையாகவே, இந்த வசனம் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள சிவாஜி படத்தின் இப்போது வெளியாகியுள்ள முன்னோட்டத்தில் (Trailer) ரஜினி பேசுவதாக இடம்பெறுகிறது.
சும்மா அதிருதுங்க அந்தப் பேச்சு! இது என்ன நான் சிவாஜி படத்தைப் பற்றி ஏதோ கட்டுரை எழுதிக் கொண்டிருப்பதாக நினைத்துவிடாதீர்கள்.
விடயத்திற்கு செல்வோம். பெயர்களைக் கேட்டாலே நாம் அதிர்ந்து போவதற்கு அப்பெயர் சார்பாக நாம் கேள்விப்பட்ட விடயங்கள், கண்டுள்ள அனுபவங்கள் எல்லாமே துணைபுரியும்.
காட்டினூடாக பயணம் செல்லும் போது, வழியில் சிங்கம் ஒன்று நிற்பதாக யாரும் சொன்னாலே, அந்தச் சிங்கத்தைக் காண முந்தியே நாம் அப்பெயரைக் கேட்டவுடனே அதிர்ந்து விடுவோம். ஒரு கணம் பயந்து விடுவோம்.
சாதாரணமாக பெயரைக் கேட்டால் வரும் பயங்களுக்கு அப்பால், குறித்த சம்பவங்கள், பொருள்கள், நடவடிக்கைகள் அல்லது தனிநபர்கள் தொடர்பாக ஒருவருக்குள்ள அதீத பயமானது ஒரு மனிதனின் அசாதாரண நிலையென்றே கருதப்படுகிறது. இது phobia பதத்தினால் இனங்காணப்படுகிறது.
இவ்வாறான பயங்களை ஒருவரால் கட்டுப்படத்திக் கொள்ள முடியாத நிலையேற்படும் நிலையில் அவரால் அன்றாடக் கடமைகளைக் கூட ஒழுங்காகச் செய்ய முடியாமல் போய்விடுகிறது. இவ்வாறான நிலையில் குறித்த நோயாளி மனச்சோர்வு தொடர்பில் சிகிச்சை எடுத்துக் கொள்வது கட்டாயமாகிறது.
இந்த phobia பற்றி இன்னும் சுவாரஸ்யமான தகவல்கள் பல உள்ளன. ஒவ்வொரு விடயம் சார்பாக தனிநபர் கொண்டுள்ள அதீத பீதிக்கு வெவ்வேறு பெயர்கள் வழங்கப்படுகின்றன. பூனைகளைக் கண்டு பயங்கொள்ளும் தன்மைக்கு Ailurophobia என்று பெயர். ஆண்களைக் கண்டு பயப்படும் தன்மைக்கு Arrhenphobia என்று பெயர். ஏன்! சொற்களைக் கண்டு பீதி கொள்ளும் தன்மைக்கு Logophobia என்ற பெயர் உள்ளது. இப்படி பீதிகளையும் அவற்றிற்கு வழங்கப்படும் விஷேடித்த சொற்களையும் அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
இருந்தாலும், இப்பதிவில் அவற்றை நிரற்படுத்தி பதிவை நீளமாக்க எனக்கு ஆர்வமில்லை. ஆனாலும், நீங்கள் அறிந்த phobia பற்றியும் மறுமொழியாகச் சொல்லலாமே!
தூக்கத்திற்கு பயப்படும் தன்மையை Somniphobia என்று அழைக்கின்றார்கள் என்பது போனஸ் தகவல்.
-உதய தாரகை
சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்