அதுவொரு மாலைப்பொழுதாகவே இருக்க வேண்டும். எனது நண்பனொருவனை சந்தித்தேன். அவனிடம் பல விடயங்கள் தொடர்பாகக் கதைத்துக் கொண்டிருந்தேன்.
திடீரென அவனிடம் சில சம்பவங்கள் பற்றிக் கேள்விகள் சிலவற்றைக் கேட்கலானேன். அவனும் எதற்கும் தயார் என்ற நிலையில் சட்டு சட்டு என பதில் சொல்லிக் கொண்டேயிருந்தான்.
அப்போதுதான் நான், “அநேகமாக ஆண்கள் இடது கையிலும் பெண்கள் வலது கையிலும் மணிக்கூடு கட்டியிருப்பதைப் பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டேன்.
“ம்… பார்த்திருக்கிறேன்.” என்று பதில் சொன்னான்.
நானும் விடவில்லை. “உண்மையாகவே பார்த்திருக்கிறாயா?” என்று கேட்டேன்.
“ஆமாம்டா.. நெசமாகவே பார்த்திருக்கிறேன்.” என்று உறுதிப்படுத்தினான்.
“அப்படி ஆண்கள் இடது கையிலும் பெண்கள் வலது கையிலும் மணிக்கூட்டை ஏன் கட்டுகிறார்கள் என்று தெரியுமா?” என்று அவனிடம் கேட்டு நின்றேன்.
“ம்… தெரியாதே!” என்று முளித்தான். முயன்று பார்க்கச் சொன்னேன். அவனும் எவ்வளவோ யோசித்தான். தனது கையடக்கத் தொலைபேசியை வேறு எடுத்துக் கொண்டு தன் நண்பனுக்கு வேறு அழைப்பெடுத்து விசாரித்தான். முடியவில்லை.
“எனக்குத் தெரியாது” என்று சொல்லி நின்றான்.
நானோ, “அப்படி மணிக்கூட்டை ஆண்கள் இடது கையிலும் பெண்கள் வலது கையிலும் கட்டுவது நேரத்தைப் பார்க்கத்தான்” என்று இயல்பாகவே சொல்லி நின்றேன்.
“என்ன கொடுமை சார்??!!” என்று அவன் மனதிற்குள் யோசித்திருக்க வேண்டும். (ஜோக்கு ஒன்று சொன்னமில்ல.. கொஞ்சம் சிரிக்கலாமில்ல..??!!)
மேற்சொன்ன ‘சம்பவக்கடி’ அண்மையில் என்னிடம் ஒரு நண்பன் பகிர்ந்து கொண்டது தான். (இருக்கோட்டும்.. இருக்கோட்டும்.. மேட்டருக்கு வாரன்)
இனி ரொம்ப சீரியஸான விடயம்.
ஆண்களின் சட்டைகளில் பொத்தான் பொருத்தப்பட்டுள்ள பக்கத்தைக் கவனித்துப் பார்த்துள்ளீர்களா? இதிலென்ன கவனிக்க வேண்டிக்கிடக்குது என்று நீங்கள் நினைப்பது எனக்குப் புரிகிறது.
பெண்களின் சட்டைகளில் பொத்தான் பொருத்தப்பட்டுள்ள பக்கத்தைக் கவனித்திருக்கிறீர்களா? நல்ல கேள்வி என்று தானே நீங்கள் யோசிக்கிறீர்கள்.
உண்மையில், ஆண்களின் சட்டைகளிலும் பெண்களின் சட்டைகளிலும் பொத்தான்கள் பொருத்தப்பட்டுள்ள பக்கம் வித்தியாசமானது.
ஏனிப்படி இது இருக்க வேண்டும் என்ற கேள்வி உங்களுக்குள் எழுந்திருக்கலாம். அதற்கொரு வரலாறே உண்டென்றால் நீங்கள் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும்.
19 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் வாழ்ந்த செல்வந்த எஜமானிகள் தங்கள் வேலைகளைச் செய்து கொள்ள பல அடிமைகளையும் வேலையாட்களையும் பெற்றிருந்தனர். அந்நாட்களில் இந்த வேலையாட்களையே தமக்கு உடையணிவித்துக் கொள்வதற்கும் எஜமானிகள் பயன்படுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக, வேலையாட்கள் எஜமானிகளுக்கு உடையணிவிக்கும் போது, பொத்தான்களை பூட்டுவதை இலவாக்கும் பொருட்டு, சட்டையின் இடப்பக்கத்தில் பொத்தான் பொருத்தப்பட்டு தையற்காரர்களால் சட்டைகள் தைக்கப்பட்டது.
ஆனாலும், வேலையாட்களை செல்வந்த எஜமான்கள் கொண்டிருந்த போதும், தமது ஆடைகளை தாமே உடுத்திக் கொண்டதால், அவர்களுக்கு பொத்தானை பூட்டுவதை இலகுவாக்க, சட்டையின் வலப்பக்கத்தில் பொத்தான்கள் பொருத்தப்பட்ட நிலையில் சட்டைகள் தைக்கப்பட்டன.
இந்தப் பழங்காலத்து வழமையே தொடர்ந்தும் பொத்தான் பொருத்துமிடம் தொடர்பில் பேணப்படுவது அழகிய கலை.
இருபாலாரின் சட்டைகளில் பொத்தான்கள் இடம் மாறி பொருத்தப்பட்டது தொடர்பின் பின்னணியில் பல சம்பவங்கள் சொல்லப்பட்டாலும், இதுவே பலராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
சின்னதொரு பொத்தான் பொருத்தப்படும் இடம் சொல்லும் வரலாறு வித்தியாசமானது தான். நூற்றாண்டு கால வரலாற்றுச் சம்பவ உண்மைகளை வெறும் சட்டை பொத்தான்கள் காலத்தால் அழியாமல் கடத்திக் கொண்டுவருவது அதிசயமே!
– உதய தாரகை
சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்