பூலோகம் தோன்றிய காலந்தொட்டு பல ஆளுமைகள் உதித்து மனிதர்களின் வாழ்தலின் அர்த்தங்களைச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். பலரும் வெற்றி கண்டிருக்கிறார்கள். இந்தச் சக்கரம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
1982 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு திரைப்படம் 8 ஒஸ்கார் விருதுகளை வாங்கிச் சென்றது. றிச்சட் அட்டன்புரோ இயக்கிய திரைப்படமது. ஒரு மனிதனின் வாழ்க்கைச் சரிதத்தைச் சொல்லியது தான் அந்தப் படம். ஆனால், வாழ்க்கை இப்படித்தான் வாழப்பட வேண்டுமென்பதையும் சொல்லி நின்றது.
அந்தத் திரைப்படத்தை பார்த்து அழுதுவிட்டதாக என்னிடம் பலரும் சொன்ன போது, அது அப்படியாகவே இருந்திருக்கிறது என்று தான் என்னால் உணர முடிந்தது. அந்தத் திரைப்படத்தின் ஒரு கட்டத்தில் படத்தின் கதாநாயகன் சிறையிலடைக்கப்பட்டவுடன், தனது மக்களைப் பார்த்து ஒரு வசனம் கதாநாயகன் பேசுவார். “They want us to fight back or lose heart. We will do neither” என்பது தான் அந்த வசனம்.
சொற்களின் வலிமை கண்டு வியந்த தருணமது. நாவின் வன்மை, மனத்தின் மேன்மை எல்லாமே ஒரு புள்ளியில் ஒருமித்த நேரமது.
இன்று காந்தி உலகில் அவதரித்து 140 ஆண்டுகள் நிறைவாகிறது. “காந்தி” என்பது தான் நான் குறிப்பிட்ட அந்தத் திரைப்படம்.
காந்தி என்றாலே அகிம்ஷைப் போராட்டம் என்பதே வணிகக் குறியீடு போல சிறுயோர் முதற் கொண்டு பெரியோர் வரை குறிப்பிடுவர்.
எங்கள் வீட்டில் ஒரு குட்டி நூலகமொன்று இருக்கிறது. நான் பிறந்த காலத்திலிருந்தே அந்த நூலகம் இருந்து வருவது கலை. பத்துப் பாட்டு, சிலப்பதிகாரம், சீறாப்புராணம் என விரியும் பல சங்க கால இலக்கியம் தொட்டு, அண்மைக் கால கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பலரினதும் நூல்களும் அங்கு இருக்கின்றன.
சுமார் அறுநூறு புத்தகங்கள் இன்னும் அங்கு பேசிக் கொண்டேயிருக்கிறது (இது என்ன பில்ட் அப்.. புத்தகங்கள் இருக்கு என்று சொன்னா சரிதானே.. அதுக்கு இத்தணை புத்தகம் இருக்கு.. இவர்ர புத்தகம் இருக்கு என்றெல்லாம் சொல்ல வேண்டுமா..? அடங்குங்க உதய தாரகை!!).
அப்புத்தகங்களில் எனக்கு ‘காந்தி பாமாலை’ என்ற ஒரு நூலை நான் எப்போதோ படித்த ஞாபகம். உலகிலுள்ள பல தமிழ்க் கவிஞர்களும் காந்தி பற்றி பாடிய கவிதைகள் அப்பாமாலையில் ஒலியெழுப்பின. அந்த நூலின் வடிவமைப்புக்கூட மிக எளிமையாக இருந்தது என்னை ரொம்பவும் கவர்ந்தது என்பேன்.
எனது வாசிப்பு மற்றும் தேடல் என்பவற்றின் சொர்க்காபுரியாக மற்றும் ஊக்கியாக இருந்ததெல்லாம் எனது தந்தையால் உருப்பெற்ற எங்கள் வீட்டு நூலகம் தான். காந்தி பற்றிய எனது தேடலுக்கு அப்போது கிடைத்த விருந்தெல்லாம் அந்த வீட்டு நூலகத்திலேயே சமைக்கப்பட்டது தான்.
காந்தி சொன்ன விடயங்கள் பலவுள்ளன. அவற்றை அறிந்து கொள்வது வாழ்க்கையின் அர்த்தத்திற்கு அர்த்தம் சேர்க்கும். அழகிய கலை போன்ற ஆனந்தத்தை அள்ளித் தரும்.
மாற்றமாகவே உருவாதல் என்பது இரண்டு சொல் வசனம் தான். ஆனால், அதுவே பல அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய தீர்வான விடையாகவும் இருக்கிறது. “ஊருக்குத்தான் உபதேசம், எனக்கில்லை” என்ற வாழ்வியல் கோலம் தீர்வுகளை ஒரு போதும் தரப்போவதில்லை.
அது பிரச்சனைகளுக்கு புதிய பாதைகளை உருவாக்கித் தருவதில்தான் வெற்றியெய்தும். தான் உபதேசம் செய்வது ஒன்றான விடயம், தன்னால் கடைப்பிடிக்கப்படும் போதே அர்த்தப்படுகிறது. அனைவரும் அதனை மனதார ஏற்க வழி உருவாகிறது.
“உலகில் என்ன மாற்றம் உருவாக வேண்டுமென நீ ஆசைப்படுகிறாயோ, அதுவாகவே நீ மாறிவிடு!” என்று காந்தி சொன்ன வசனம் எனக்கு எப்போதுமே ஞாபகத்தில் நிலைப்பதுண்டு. வாழ்க்கையில் போதனை செய்வது அல்லது மற்றவர்களுக்கு உபதேசம் செய்வது எல்லாம் இரண்டாம் கட்டம் என்றே நான் கருதுகிறேன்.
தான் வாழுகின்ற வாழ்க்கையின் நடைமுறைகள் தான் மற்றவர்களுக்கு வழியைக் காட்டக்கூடியதாக இருக்க வேண்டும். சிறந்த வாழ்க்கை முன்மாதிரிகளை வழங்குவது தான் மற்றவர்களை நாம் எம்பக்கம் அழைப்பதற்கு செய்ய வேண்டிய முதற்படி.
நீங்கள் உலகம் எப்படியிருக்க வேண்டுமென எண்ணுகிறீர்களோ, அது தான் உங்கள் உலகம்.
உங்களிடம் ஒரு சிறிய கேள்வி. நான்கு தவளைகள் ஓரிடத்தில் இருந்தன. அவற்றில் ஒரு தவளை பாய்ந்து விட எண்ணியது. அங்கு எத்தனை தவளைகள் எஞ்சியிருக்கும்? முந்திக் கொண்டே மூன்று என நீங்கள் பதிலளிக்க முடியும். ஆனால் அது தான் பிழையாச்சே.
யாரும் எண்ணுகிறார்கள் என்பதற்காக எண்ணியது நடந்துவிட்டதென பொருள் கொள்ள முடியாது. எண்ணங்களை நடைமுறையில் கொண்டுவருவதில் தான் நேரத்திற்கு அர்த்தம் கிடைக்கிறது. எண்ணங்களுக்கு வலிமை பிறக்கிறது.
தனிநபராக இருந்து கொண்டு முழு உலகத்தையுமே மாற்றிவிடலாம் என்ற கற்பனைக்கு யாரும் பொருள் கொடுக்க முடியாது.
ஆனால், ஒவ்வொருவரும் தனித்தனியாக எண்ணும் அழகிய எண்ணங்களை நடைமுறையாக்கும் போது, பூலோகமே பூத்துக் குலுங்கத் தொடங்கும். “சிறு துளி, பெரு வெள்ளம்” என்பார்கள். பெரிய வெள்ளத்திற்கு சிறிய துளிகளின் சேர்க்கை இங்கே தேவைப்படுகிறது.
காந்தியாக மாறவேண்டாம். காந்தி சொல்ல வந்த எண்ணங்களுக்கு உயிர் கொடுக்கலாம். சிலவேளைகளில் எண்ணங்களின் வலிமையை அதனைச் செயற்படுத்தும் போதுதான் அறிந்து கொள்ள முடிகிறது. வெறும் பல்கலைக்கழக உள்ளக இணையத்தளமாக உருவெடுத்த Facebook, பின்னாளில், உலகமே கவ்விக் கொள்ளும் இன்றியமையாத இணையத்தளமாக மாறவில்லையா?
எண்ணங்களை செயற்படுத்துவதில் எப்போதுமே தடைகள் தோன்றுமென்பதில்லை. ஆனால், தடைகள் தோன்றாமல் எண்ணங்கள் நடைமுறைக்கு வந்த சரித்திரங்களும் இல்லை.
காந்தி சொன்ன விடயங்களில் மேற்சொன்ன இரண்டு விடயங்களும் என்னை மிகவும் பாதித்தவை என்றே நான் சொல்வேன். இது இப்படியிருக்க, கூகிளுக்குள் காந்தி குடிபுகுந்த கதை, உண்மையானது.
இன்றைய கூகிளின் இல்லப்பக்கம் (Homepage) எல்லாம், Google என்ற சொல்லின் முதல் எழுத்தான G இற்குப் பதிலாக காந்தியின் படத்தைக் கொண்டிருந்தது. கூகிள் தனது இல்லப்பக்கத்தை முக்கிய நிகழ்வுகளின் நிமித்தம் அவற்றைக் குறிப்பிடுமாற் போல், மாற்றியமைப்பது நீங்கள் அறிந்ததே!
எம்மை நாமே தேடவேண்டிய தருணங்கள் வாழ்க்கையில் அடிக்கடி நிராசையாக வருவதில்லை. அந்தத் தருணங்கள் உருவாக்கப்பட வேண்டும். தேடல் இல்லாதவரை, நாம் தொலைந்தவர்களாகவே ஆகி விடுகிறோம்.
– உதய தாரகை
சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்