இந்த இரவில் நிறத்தில் புதிதாக பதிவொன்றை இடவேண்டுமென நான் நினைக்கிறேன். நான் எதுவாக இருந்தேனோ அதுவாகவே ஆகிவிட ஆர்வங் கொள்கிறேன். அதுவொரு மிக நீளமான பயணம். மிக மிக நீளமானது தான். அங்கும் இங்குமென பல இடங்களில் இடர்களைச் சந்திந்திருக்கிறேன். வாழ்க்கை என்பது அவ்வளவு லேசுபட்டதல்ல. முக்கியமாக வயது வந்த வாழ்க்கை.
கடந்துவிட்ட நேரத்தை மீளக்கொண்டு வரும் வரமெனக்கு இருந்திருந்தால் என கற்பனை செய்கிறேன். எனது வாழ்வின் அழகிய நேரங்கள் நிறைவு பெற்றுவிட்டது போன்ற எண்ணம் எனக்குள் குடிகொள்கிறது. இனிவரும் எல்லாமே நானறிந்த அழகிய நேரங்களை விடக் குறைவான அர்த்தங்களையே கொண்டிருக்கும். வாழ்வைத் திரும்பிப் பார்க்கும் போது, அந்த மங்கலான நிலையை மட்டுமே என்னால் கண்டு கொள்ள முடிகிறது.
அது ஆரம்பத்திலிருந்தே உண்மையாகவே இருந்தது, ஆனாலும், நான் இப்போதே அது மெய்யானதென உணர்ந்து கொண்டேன்.
எனது வாழ்க்கையில் நான் பெற்றிருந்த எல்லாவற்றையும் பிரிந்துவிட்டு நிற்கின்றேன். நண்பர்கள், பாடசாலை, வாழ்க்கையைப் பற்றி படிக்க கழித்த நாட்கள், சும்மா எதுவுமே இல்லாமல் கழித்த நாட்கள், எழுதுதல், கனவு காணுதல், செவிமடுத்தல், நானாக இருத்தல் என எல்லாவற்றையும் பிரிந்து விட்டதாய் சொல்லும் ஒரு அலை எனக்குள் பாய்கிறது.
இயல்பாகவிருக்க வேண்டுமெனச் சொல்லும் வாழ்க்கையின் உத்தரவு இந்நாட்களில் என்னைத் தாக்குகின்றது. நான் எனக்கான எல்லாவற்றையும் செய்து விட்ட போதிலும், சில நேரங்களில் என்னை நேசிக்க முடியாமல் இருக்கிறது. பல நேரங்களில் என்னை உச்சளவில் காதல் செய்ய முடிகிறது. மாறி மாறிக் கொண்டிருக்கும் நிகழ்வில் நானும் அகப்பட்டாலும், அதனை எப்போதும் எனக்காக தக்கவைத்துக் கொள்ள ஆர்வம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வேன்.
குறிப்பிட்ட சில விடயங்களை முன்னொரு போதும் இல்லாத வகையில் பிரிந்து விட்டதாய் உணர்கிறேன். உங்களுக்கு இதுபற்றி எதுவுமே தெரியாது. அவை திருப்திப் படுத்தக்கூடிய உணர்வுகளாக தோன்றலாம். அவை ஆத்மாவை தேற்றுவது போல் தெரியலாம். ஒரு வருடத்திற்கு பின்னர், நான் மனமுடைந்த நிலையில் இருக்கிறேன். வாழ்க்கையே அதன் மனத்தை உடைத்துக் கொண்டுவிட்டது. வாழ்க்கையில் நீங்கள் நினைப்பது போல், எல்லாமே அமைந்துவிடுவதில்லை.
நான் எனது ‘பழைய நானிடமிருந்து’ நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. வேகமாக வளர்ந்தது போலவே, நான் சிறுபிள்ளையாக மீண்டும் ஆகிவிட்டேன். சில நேரங்களில் இதுவே நான் தொடரப்போகும் வாழ்க்கை என்று உணர்கின்றேன். இன்னும் சில நேரங்களில் தப்பியோட வேண்டுமென உணர்கிறேன்.
இன்றிரவு நான் தப்பியோடுவதை தேர்ந்தெடுக்கிறேன். மூடப்பட்ட கதவுகளை திரும்பிப் பார்க்காமல், புதிய கதவுகளை திறந்து கொள்ளப் போகிறேன். எனது ஆர்வங்கள், திறமைகள் என எல்லாவற்றையும் சேர்த்த பெரிய உலகின் கதவுகள் அவை. எனது ஆர்வங்களுக்கு அர்த்தம் கொடுக்கும் ஆதாரங்களை இந்த உலகத்தில் நான் காண வேண்டுமென தவிக்கிறேன். அதிகமாகவே சஞ்சலமடைகிறேன். கஷ்டப்படுகிறேன். நான் வெறுமையாய் உணர்கிறேன்.
எனக்கு அழுதிட வேண்டும் போலிருக்கிறது. எனக்கு நீ வேண்டும். எல்லாமே முன்பிருந்தது போல், மீண்டும் அமைந்துவிடும் என்று தயவுசெய்து சொல்…
– உதய தாரகை
சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்