எண்ணம். வசந்தம். மாற்றம்.

உதவி: அளவுகளைத் தாண்டியது [புதன் பந்தல் – 21.09.2011] #4

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 41 செக்கன்கள் தேவைப்படும்.) [?]

இந்த வாரத்தின் புதன் பந்தல், மாறுதல்கள் ஏற்படுத்துதல் பற்றிய விடயத்தை நட்சத்திரமீன்களின் கதையோடு ஆய்கிறது.

காலை நேரத்தின் கடற்கரைக்கு அற்புதமான தோற்றச்சூழல் கிடைக்கும். அப்படியொரு காலைப்பொழுதில் கடற்கரை வழியாக உடற்பயிற்சி செய்யும் நோக்கில் நடந்து செல்கின்றான் ஒருவன். அவன் செல்லும் வழியாக நூற்றுக்கணக்கான நட்சத்திரமீன்கள் (Star Fish) கரையொதுங்கியிருப்பதை அவதானிக்கிறான். உயிரோடு கரையொதுங்கியிருக்கும் அந்த மீன்கள், காலைநேரக் கதிரவனின் சூட்டினால் அவை இறந்துவிடக்கூடும் என்ற எண்ணம் அவனிடம் தோன்றிவிடுகிறது.

அவன் அவற்றை நோக்கி விரைந்து சென்று, அவற்றில் ஒன்றை தன்கையால் பற்றி, கடல்நீருக்குள் எரிந்து விடுகிறான். இப்படியாகத் தொடர்ச்சியாக செய்கிறான். அவன் இப்படிச் செய்வதை அவதானித்த அவனுக்கு பின்னால் நின்றவனுக்கு, அவன் செய்கின்ற இந்த விடயம் புரியாத புதிராகத் தோன்றியது.

பின்னால் நின்றவன், அவனை நெருங்கி, “என்னதான் பண்றீங்க சார்? இங்க நூற்றுக்கணக்கான நட்சத்திரமீன்கள் கரையொதுங்கிக் கிடக்குது. எத்தனைக்கு உங்களால உதவி செய்ய முடியும்? அப்படி என்னதான் மாற்றத்தைக் கொண்டு வரப்போகுது?” என்றவாறு கேள்விகளைத் தொடுத்தான். இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், இன்னொரு நட்சத்திரமீனைப் பற்றியெடுத்து கடல்நீருக்குள் எரிந்துவிட்டு, “இந்த மீனுக்கு அது மாற்றத்தைக் கொண்டு தரும்” என இயல்பாகப் பதிலளித்தான்.

என்ன மாற்றங்களை நாம் உருவாக்குகின்றோம் என்பது நமது பங்களிப்பு சிறியதா, பெரியதா என்பதில் தங்கியிராது.

“ஒவ்வொருவரும் சின்னச் சின்ன மாற்றங்களை உருவாக்கப் பங்களித்தால், ஈற்றில் அது மிகப்பெரும் அழகிய மாற்றமாய் உருவெடுக்கும் என்பது உண்மைதானே!” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

– உதய தாரகை

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்