எண்ணம். வசந்தம். மாற்றம்.

வருடாந்தக் காதல் போட்டி

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 6 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

தனிமனிதன் சார்பான உலகம் பற்றிய விசாரிப்புகளில், பலவேளை யாரும் அறிந்திராத பல விடயங்கள் உதிப்பதுண்டு. அது நடக்கும் தருணங்கள் எதிர்கூற முடியாதவை போலவே, அதன் போது தோன்றும் விடயங்களும் ஏற்கனவே அறிந்து கொள்ளப்படாதவையே.

ஆய்வுகளின் அடிப்படையில் தனிமனிதனின் நடவடிக்கை சார்ந்த புலங்கள் நோக்கப்படுவது, காலங்காலமாக நடந்துவருவது நாமறிந்த நிகழ்வுதான். ஆனால், அவ்வாறான ஆய்வுகளில் ஒரு சில மொத்தத்தில் அனைவரினதும் கவனத்தை ஈர்த்துக் கொண்டுவிடும்.

ஸ்டான்போர்ட் புலன்வழி அறிதல் மற்றும் நரம்பியல் நிழற்படவாக்க நிலையத்தில் ஒரு அரிதான பரிசோதனை இடம்பெற்றது. “முதலாவது வருடாந்த காதல் போட்டி” என்பது தான் அந்த ஆய்விற்கான பெயர்.

அன்பு, காதல், பாசம், நேசம் என விரியும் மனிதனின் விருப்புக்குரிய உணர்வின் அளவின் தேடலில் வெற்றியாளரைத் தேர்வு செய்கின்ற ஆய்வு அது. போட்டியின் விதிகள் இவைதாம்,

  • போட்டியாளர்கள் தங்களின் அன்புக்குரியவர்கள் பற்றி, 5 நிமிடத்திற்கு உச்சளவில் நினைத்துக் கொள்ள வேண்டும், இந்தவேளையில் அவர்களின் மூளையின் செயற்பாடு fMRI யந்திரம் கொண்டு அளந்து கொள்ளப்படும்.
  • மூளையில் அன்புக்குரித்தானதாக காணப்படும் நரம்பிய வேதியல் கூறுகளின் அளவு கணித்துக் கொள்ளப்படும்.

பல்வேறு வயதுகளிலுள்ள, ஆண், பெண் ஆகிய இருபாலாரும் கலந்து கொண்டனர். இந்தப் போட்டியின் முடிவு ஏதோவொரு வகையில் உங்களுக்கு வியப்பைத் தரக்கூடும்.

காதலிலுள்ள வேதியலின் சாரத்தை அழகியலாய் பதினைந்து நிமிடங்களில் மிக நேர்த்தியாக திரைக்குக் கொண்டுவர இயக்குனர் பிரண்ட் ஹொப்பிற்கு முடிந்திருக்கிறது. நுட்பத்தின் வெகுவான சங்கீரணமான தன்மைகளைத் தாண்டி, அன்பின் மென்மையை அற்புதமாகக் கொண்டு வரும் கமராக்கண் — வியப்பு.

ஒவ்வொரு போட்டியாளரும் அன்பைக் காண்கின்ற விதத்தை விபரிக்கின்ற முறை — காதல். பத்து வயதுப் பையன் மைலோ, அன்பைப் பற்றிச் சொல்லும் விபரம் — உச்சம். “Love is a feeling you have for someone you have feelings about.”

உத்வேகம் தரக்கூடிய, வாழ்வின் அழகிய அனுபவங்களை ஒரு கணம் உசுப்பிவிடுகின்ற இந்த ஆய்வின் ஆவணத்தை நீங்கள் கட்டாயம் காண வேண்டும். பதினைந்து நிமிடங்கள் விரிகின்ற இந்த லாவண்யத்தை காண இதுதான் தருணம்.

.

திண்காறையாகிவிட்டவைகளும், உணர்வுகளின் ஸ்பரிசத்தில் கனமிழந்து போகின்றன. “காதல், தாய்மை இரண்டு மட்டும் பாரம் என்பதை அறியாது” என்ற ரட்சகன் படப்பாடல் வானொலியில் கேட்கிறது.

– உதய தாரகை —

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்