எண்ணம். வசந்தம். மாற்றம்.

தும்மலின் விஞ்ஞானம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 5 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

மனித உடலின் விசித்திரங்களின் பட்டியலை விரித்துக் கொண்டே போகலாம். உடல், தனது நிலையை ஒரு தகவில் வைத்துக் கொள்ளும் பொருட்டு, தன்னியக்கமாகவே பல விடயங்களைச் செய்வதை அவதானிக்க முடியும்.

அதில் ஒன்றுதான் தும்முதல். மனித உடலில் இடம்பெறும் சங்கீரணமான செயற்பாடாகத்தான் தும்மலைக் கண்டு கொள்ளலாம்.

“தும்மும் போது, கண் எப்போதுமே மூடித்தானிருக்கும்” என்பது ஒரு தகவல். “கண்கள் திறந்த நிலையில் உன்னால் தும்ம முடியாது” என்பது அவளிடமிருந்து கோபாலுக்கு வந்த சவால்.

உண்மையில் இந்தச் சின்னத் தகவலின் பின்னணியில் இருக்கின்ற விஞ்ஞானம் என்ன என்பதை அறிந்து கொள்ள ஆர்வப்பட்டேன். என் ஆர்வத்தின் விளைவின் உண்டான கேள்விக்கு கிடைத்த பதில்களில் விபரமான தொகுப்புதான் இப்பதிவாயிற்று.

பூமியிலுள்ள பெரும்பாலும் அத்தனை விலங்குகளும் தும்முகின்றன. “Sternutatory reflex” என்ற சொற்றொடர் மருத்துவத்தில் தும்மலைக் குறிப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

மூக்கின் மென்சவ்வில் நமைச்சலை உண்டுபண்ணக் கூடிய காரணி தொடுகையுறும் நிலையில், அந்தக் காரணியின் தொடுகை, மூளையின் சில பகுதிகளில் பிரதிபலிப்பை உண்டாக்கும். இந்தப் பிரதிபலிப்பின் காரணமாக இன்னும் பல நரம்பிணைப்புத் தாக்கங்கள் தொடர்ச்சியாக ஏற்படும்.

தும்முகின்ற நிலையில், உடலின் உள்ளே மிக அதிகமான அமுக்கம் பிரயோகிக்கப்படும். இதன் காரணமாக, குறிப்பிடத்தக்களவு வாயு அமுக்கம் கண்களில் பிரயோகிக்கப்படும்.

கண்களை, கண் குழிக்குளியிருந்து வெளியேற்றிவிடவோ, கண்கள் பிதுங்கி வெளியே வந்துவிடவோ இந்த அமுக்கத்தால் முடியாவிட்டாலும், கண்களிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்த இந்த அமுக்கத்தால் முடியும்.

டாக்டர். ஜி. எச். ட்ரம்ஹெல்லரின் அவதானிப்பின் படி, “கண்கள் ‘பிதிர்க்கக்‘ கூடாதென்பதற்காகவே தும்மும் போது நாம் கண்களை மூடுகின்றோம்.” எனச் சொல்கிறார்.

தும்மலின் போது கண்களில் ஏற்படக்கூடிய அமுக்கத்தின் காரணமாக, கண்ணில் அசாதரண நிலை தோன்றப்படாது என்பதற்காய் எமது உடலே தன்னியக்கமாக தற்காப்பில் ஈடுபடுவது – வடிவமைப்பின் வியப்பு விஞ்ஞானம்.

ஆனாலும், இந்தப் பெண், கண்களைத் திறந்த நிலையில் தன்னால் தும்மக்கூடியது தனது விஷேடமான திறமை என்கிறார். தும்மலின் பின் அவரின் கண்களின் பிரதிபலிப்பைக் காணொளியில் அவதானிப்பதன் மூலம், கண்களைத் தும்முகின்ற நிலையில் மூடிக் கொள்வது கட்டாயம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

“ஏன்?” என்ற கேள்விகளுக்குள் விஞ்ஞானம், வரலாறு என பல விடயங்கள் விரிந்து பரந்து கிடைக்கிறது. “ஏனெனக் கேட்பது கலை” — கோபாலு சொல்கிறான்.

– உதய தாரகை

மறுமொழிகள் சொல்லி ட்விட்டரில் தொடர..

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்