எண்ணம். வசந்தம். மாற்றம்.

நீயல்லாத நிலைகள்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 57 செக்கன்கள் தேவைப்படும்.) [?]

மின்காந்த நிழற்பட்டையின் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதையே உன்னால் கண்டு கொள்ள முடிகிறது. ஒலித் திருசியத்தில் காணப்படும் ஒலியின் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதையே உன்னால் கேட்க முடியும்.

இதனை நீ வாசித்துக் கொண்டிருக்கும் போது, விண்மீன் மண்டலத்தினூடாக மணிக்கு 220 கிலோ மீற்றர் வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறாய். உன் உடலின் 90 சதவீதமான கலங்கள் — “நீயல்லாத” — தங்களுக்கே உரித்தான பரம்பரையலகோடு காணப்படுகின்றன. உன் உடலிலுள்ள மொத்த அணுக்களில் 99.999999 சதவீதமானவை வெறும் வெற்றிடங்கள். இவை நீ பிறந்த போது, உன்னோடு சேர்ந்து வந்தவையே அல்ல. ஒரு விண்மீனின் உதரத்திலிருந்து தோற்றம் கண்டவை.

சாதாரண உருளைக்கிழங்கில் காணப்படும் நிறமூர்த்தங்களின் எண்ணிக்கையை விட 2 நிறமூர்த்தங்கள் உன்னிடம் குறைவாக உள்ளது. 46 நிறமூர்த்தங்கள் மட்டுந்தான் உன் வசம் உள்ளன.

உன் கண்ணிலுள்ள கூம்புருவான ஒளிவாங்கிகளின் அமைவில் தான் வானவில்லின் தோற்றம் நிலைநாட்டப்படுகிறது. கூம்புருவான ஒளிவாங்கி இல்லாத விலங்குகளிற்கு வானவில் இருப்பதில்லை. ஆக, நீ வானவில்லை பார்க்கவில்லை மாறாக அதை உருவாக்குகின்றாய்.

மின்காந்த நிழற்பட்டையில் காணப்படும் நிறங்களில் 1 சதவீதமானவையே உன்னால் காணக்கூடிய அத்தனை அழகிய நிறங்களாக இருக்கின்ற நிலையில், நீ தோற்றுவிக்கும் வானவில் கொஞ்சம் அதிசயமானது தான்.

தான் பெற்றுக் கொண்ட மின்னஞ்சலில் இப்படியொரு அற்புதமான செய்தியிருந்ததாக கோபாலு என்னிடம் சொன்னான். (பதிவின் தேவை கருதி, இங்கு தமிழாக்கம் செய்துள்ளேன்.)

அதிசயமான அபூர்வ நிலைகளைக் கண்டு வியந்த நிலையோடு, “மின்னஞ்சலின் தலைப்பு என்னவாயிருந்தது” என்று கேட்டேன்.

“அடுத்தவனைப் பற்றி நீ அனுமானம் செய்து கொள்ள முன்னர் அல்லது மெய்யென நீ ஒன்றை அடித்துச் சொல்வதற்கு முன், இதைக் கொஞ்சம் கவனத்தில் எடு” என்ற கருத்து பொதிந்ததாய் இருந்தது” — கோபாலு விளக்கமாகச் சொன்னான்.

“ஒருவனைப் பார்த்து அவன் அப்படித்தான் என தீர்மானித்துக் கொண்டால், அவனிடம் அன்பு செலுத்த உங்களிடம் வாய்ப்பே தோன்றாது” என்ற அன்னை தெரேஸாவின் கூற்றும் அப்படியே இங்கு பொருந்திப் போகிறது.

– உதய தாரகை

மறுமொழி சொல்லி ட்விட்டரில் தொடர நான் இங்கே. 🙂 –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

தொடர்புடைய பதிவு: கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய்

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்