(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 3 செக்கன்களும் தேவைப்படும்.) [?]
வாழ்வின் அர்த்தம், நம்பிக்கை, தேர்வு என்பன பற்றியெல்லாம் வித்தியாசமாகக் கதைக்கின்ற ஒரு அழகிய காவியமாகவே, நான், ஆன் லெமட் இன் Stitches என்ற நூலைக் காண்கின்றேன்.
ஒரு மனிதன், தன் சௌகரிய வலயத்தைத் துறக்கின்ற தருணத்திலேயே அவனது நிஜமான வாழ்வின் அழகியலைக் காண்பதற்கான வழியை உருவாக்கிக் கொள்கின்றான் என்கின்ற உண்மையை உறுதிப்படச் சொல்கிறது இந்த நூல்.
தனது வாழ்வின் உண்மைச் சம்பவங்கள், அனுபவங்கள் மூலமாக, தனது உண்மையான தன்மையை உணர்ந்து கொண்ட விதத்தை சொல்ல, ஆசிரியர் கையாளும் மொழி அழகியலாயிருக்கிறது. அதில், நகைச்சுவையோடு, உத்வேகம் தோன்றுகின்ற அற்புதமும் பொதிந்திருக்கிறது.
“நம்பிக்கைகள் எல்லாமே, தொலைந்த கணத்தில் நம்பிக்கை பற்றியதான உறுதி மனத்தில் தோன்றுகின்ற அந்தத் தருணம் தான் வாழ்வின் உயிர்ப்பையும் அர்த்தத்தையும் சொல்லித்தரும்”, என்பதாக லெமட் ஓரிடத்தில் சொல்கிறார்.
கலையையும் வாழ்வையும் சேர்த்து ரசிக்கின்ற ஆசிரியரின் மனப்பாங்கில் நான் என்னை இழந்து போகின்றேன். புத்தகமும் கலையும் அவரின், வாழ்வின் மீதான கவனத்தை புதுப்பிக்கச் செய்திருக்கிறது.
இயற்கையோ, இசையோ, வாசிப்போ, எதுவாக இருந்தாலும், அது உங்களைச் சூழ நின்று கொண்டு, வாழ்க்கையின் உங்களையும் விட பெரிதான ஒன்று பற்றிய நம்பிக்கைகளை விதைக்க வழியாகி நிற்கும்.
இந்த நிலையை அறிகின்ற நிலையில், நீங்கள் காண்கின்ற விடயங்கள் பற்றியதான புரிதலும் அர்த்தங்களும் மிக உயர்வான நிலையாகி உணர்வுகளைத் தொடும். அதுவே, மகிழ்ச்சிக்கான காரணியுமாகி வாழ்க்கை பற்றிய அழகியலை எழுத்துச் சொல்லும்.
படைப்பாளி ஒருவன், தன்னைச் சூழ இருக்கின்ற விடயங்கள் தொடர்பில் உண்மையாகவும் உத்வேகத்தோடும் புதியன படைக்கத் தொடங்குகையில், அங்கு பல பரிமாணங்களில் படைப்பு தன் தளங்களைத் தொடுகிறது என ஆசிரியர் சொல்லி வைக்கிறார்.
வாழ்க்கைப் பயணத்தில் ஒவ்வொரு வினாடி பற்றியதான சுவாரஸ்யங்களை பூட்டிச் சேமித்து வைக்க வேண்டுமென்ற மகிழ்ச்சியை இந்த நூல் தருகிறது.
— உதய தாரகை (தாரிக் அஸீஸ்)
இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu
சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்