எண்ணம். வசந்தம். மாற்றம்.

பத்து என்பது இருபதின் பாதியா?

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 39 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

நாம் வாழ்கின்ற உலகின் ஏற்பாடுகள் எல்லாமே, வெறுமனே கருப்பு அல்லது வெள்ளை என்ற கட்டங்களைத் தாண்டி சங்கீரணமான நிலைகளைத் தன்னகம் கொண்டுள்ளன.

ஆனால், இந்தச் சங்கீரணமான ஏற்பாடுகளில் சரளமான நிலைகளை அடையாளங் கண்டு கொண்டு, அவற்றை புரிந்து கொள்வதிலேயே மன நிம்மதி தங்கியிருக்கிறது எனலாம்.

ஆறாம் தரத்தில் படிக்கின்ற ஒரு மாணவன், அவன் மூன்றாம் தரத்தில் படித்த நூல்கள் யாவற்றையும் இருதடவை படித்துக் கொண்டால், ஆறாம் ஆண்டிற்கான அத்தனையும் படித்துவிட்டான் என்று பொருளாகாது.

அதுபோன்றே, மூன்றாம் தரத்தில் கற்கின்ற மாணவன் ஒருவன், ஆறாம் தரப் பாட நூல்களின் அரைவாசியைக் கற்றுக் கொள்வதால் மூன்றாம் தரத்திற்கான மொத்தப் பாடங்களைக் கற்றுக் கொண்டான் என்று எடுத்துக் கொள்ளப்படாது.

இந்த அடிப்படையான நிலையின் அம்சங்களைத்தான் வாழ்வின் பல விடயங்களை எமக்கு தந்திருக்கிறது. ஒரு நேரத்தில் ஒருவரால் செய்யப்பட்ட விடயம் தோல்வியடைய, இன்னொரு நேரத்தில் இன்னொருவரால் செய்யப்படும் அதேவிடயம் வெற்றியுமடைகிறது. இந்த ஏற்பாடுகள் பற்றிய புரிதல் என்பது சங்கீரணமான சங்கதி.

ஆனாலும், இங்கு சங்கீரணங்கள் பற்றி முறைப்படுவதிலோ, சங்கீரணங்கள் என்று அத்தனை விடயங்களையும் ஒதுக்கி வைப்பதிலோ எதுவும் ஆகிவிடப் போவதில்லை. இங்கு தேவையானது, செயல். வாழ்க்கையின் சங்கீரணங்களை எளிமையாக்கின்ற செயல்.

கருவிகளின் வியாபிப்பு, மொழியின் பயன்பாடு என எல்லாமே, சங்கீரணமான வாழ்வின் அம்சங்களை எளிமையாக்கிக் கொள்ள மனிதன் எடுத்துள்ள ஏற்பாடுகள் தான். ஆக, இங்கு செயல் என்பது தான் ஏற்பாடு. அதுவும் ஆக்குகின்ற செயல்.

இங்கு புதியவைகள் உருவாக்கப்பட வேண்டும். சங்கீரணங்களை அகற்றிவிட்டு விடயங்கள் சரளமாக்கப்பட வேண்டும். அது விஞ்ஞானம் என்றாலும் விவசாயம் என்றாலும் சங்கீரணம் அகற்றப்பட்ட நிலையில், பலரையும் அது கவரக்கூடும், அதுவே, அனைவரும் போஷிக்கின்ற, வியாபிக்க வேண்டுமென்று அக்கறை கொள்கின்ற விடயங்களாக மாறிவிடும்.

இங்கு எல்லாமே, புதிதாக உருவாக்கப்பட வேண்டுமென்பதில்லை. புத்தம் புதிதாக நீ ஒரு காகிதத்தை உருவாக்க, நீ ஒரு பிரபஞ்சத்தை உருவாக்க வேண்டும். அழித்து கிழித்து ஆக்கம் தொடங்காது. அது சாத்தியமாகாது. பலதும் சேர்ந்து புதியதாய் மலர்கின்ற போது, எல்லாமே இங்கு சாத்தியமாகும்.

எல்லாமே சாத்தியமாகும் என்ற வெறும் நம்பிக்கை எதையும் கொண்டு தராது என்பது போன்றே, எல்லாம் சாத்தியமாகாது என்ற வெறும் நம்பிக்கையும் எதையும் கொண்டு தராது. நம்பிக்கைக்கு செயல் வடிவம் கொடுக்கின்ற போது, இங்கு எல்லாமே புதிதாய் மலரும்.

  • உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே –

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்