எண்ணம். வசந்தம். மாற்றம்.

உன்னை ஒன்று கேட்பேன்

உன்னை ஒன்று கேட்பேன், உண்மை சொல்ல வேண்டும்.

கடந்த 20 ஆண்டுகளில், உலக சனத்தொகையில், தீவிர வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களின் தொகையின் விகிதம் எந்தளவு மாறியுள்ளது?

உங்களுக்கான தெரிவுகள் இவைதாம்.

  1. மாறவில்லை.
  2. அரைவாசியாகக் குறைந்துள்ளது
  3. இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

இவற்றுள், உங்கள் தெரிவு என்ன?

இலகுவானதுதான். இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்பதை தெரிவு செய்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.

இந்தக் கேள்வி, உலகின் பல இடங்களிலும் பல்வேறுபட்ட மக்கள் குழுக்களிடமும் கேட்ட போது, இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதையே அவர்களும் உறுதிப்படுத்தினர்.

இது உண்மைதானா?

இல்லை. உண்மை முற்றிலும் மாற்றமானது, ஆச்சரியம் மிகுந்தது.
அதீத வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களின் தொகையின் விகிதம் கடந்த 20 வருடங்களில் அரைவாசியாகக் குறைந்துள்ளது. இதுதான் உண்மையான தரவுகளின் முடிவு.

அப்படியானால், நீங்களோ மற்றயவர்களோ, இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என்று முடிவு செய்ய என்ன காரணமாகியது?

நீங்கள் காண்கின்ற உலகம் தான் இந்த முடிவுக்கு உங்களை இட்டுச் சென்றுள்ளது.

நீங்கள் காணும் உலகம் என்பது, நீங்கள் வாசிக்கும் செய்திகள், காணும் செய்திக் காணொளிகள் ஏன் நண்பர்கள் பேஸ்புக், வட்ஸ்அப்பில் பகிரும் உருக்கமான கதைகள் என பலவற்றாலும் உருவாகிறது.

பத்திரிகையில் வறுமையால் வாடும் குடும்பங்கள் பற்றிய செய்தி மனதை பத பதைக்கிறது.

தொலைக்காட்சியில் தோன்றும் வறுமைக் காட்சிகள் நெஞ்சுக்கு வலியைத் தருகிறது. உலகமே வறுமையில்தான் வாடுகிறது என்ற முடிவுக்கு வர உங்களால் முடிகிறது.

ஊடகங்கள், உலகிலுள்ள எல்லா பிரச்சினைகளும் உங்களின் பிரச்சினையாகக் காட்டுவது போல், சமூக ஊடகங்களும் நீங்கள் காண்பதை உறுதிப்படுத்தியும் விடுகிறது.

நீங்கள் உலகத்தைப் பார்க்கும் விதம் பிழையானால், உலகத்தைப் பற்றி பிழையான அனுமானங்களை வெற்றிகரமாகச் செய்வீர்கள்.

மில்லியன் கணக்கில் நாளாந்தம் பகிரப்படும் போலிச் செய்திகளின் தோற்றுவாய் நீங்கள் காணும் உலகின் வெளிப்பாடாகும்.

ஸ்டீபன் கௌவ்கிங்ஸ், “அறிவின் மிகப்பெரிய எதிரி அறிமையாமை அல்ல. மாறாக அறிவைக் கொண்டிருப்பது போன்ற மாயையாகும்” என்கிறார்.

ஊடகங்களின் மூளைச்சலவைக்குள் சிக்கித் தவிக்காமலிருக்க என்ன செய்யலாம்?

எந்தத் தகவலையோ செய்தியைக் கண்டாலும் அது எங்கிருந்து வருகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள். தரவுகளைத் திரட்டுங்கள்.

நீங்கள் காண்பது பற்றி, கேட்பது பற்றி உங்களுக்கு பயம் தொற்றிக் கொண்டால், தரவுகளுக்கு அங்கே இடமிருக்காது.

அதனால் அவசரப்பட வேண்டியதில்லை. உங்களுக்கு யாரும் வேகமாகப் ஒன்றைப் பகிர்ந்துள்ளீர்கள் என்று வெற்றிக் கிண்ணம் தரப்போவதுமில்லை.

நீங்கள் பிழையான தகவலை வேகமாகப் பரப்புவதால் வரும் பாதிப்பு பல மடங்கானது என்பதை உணருங்கள். உங்களை ஓர் நெறியாள்கை செய்கின்ற ஊடகமாக்க, தேடித் தெரிந்து ஆய்ந்தறிந்து தகவல்களை பகிருங்கள். உங்களை உலகமே பின்தொடரும்.

ஆய்தத்தை ஆயுதமாகக் கொள்ளுங்கள்.

தாரிக் அஸீஸ்
07.01.2021

சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்