(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 44 செக்கன்கள் தேவைப்படும்.) [?]
வானவில்லை நீ பார்ப்பதில்லை மாறாக உருவாக்குகிறாய் என்பதைப் பற்றி நிறத்தில் ஏற்கனவே நீயல்லாத நிலைகள் என்ற பதிவில் சொல்லியிருக்கிறேன்.
உன் பிரபஞ்சத்தில் நீ இருப்பதாகக் காண்பவை மாத்திரமே இருக்கின்றன. மற்ற எதுவும் இருப்பதாக யார் சொன்ன போதிலும், நீ இருப்பதாக உணர்ந்தால் மாத்திரமே அது இருக்கும். நீ இந்தப் பதிவை வாசிக்கும் கணினியோ, கையடக்கச் சாதனமோ நீ இருக்கிறதென எண்ணுவதால் மாத்திரமே அது இருக்கிறது. இந்த நிலை எல்லா நிலைகளுக்கும் பொருந்தும்.
இந்த நேரத்தில் நான் வாசித்த ஒரு ஸென் கதை ஞாபகத்திற்கு வருகிறது.
சுயாங் சூ என்ற மிகப்பெரிய ஸென் ஆசான், தான் பட்டாம்பூச்சியாய் பறந்து திரிவதாகக் கனவு கண்டார். கனவில், அவர் தன்னை ஒரு மனிதராகக் கண்டு கொள்ள முடியவில்லை. பட்டாம்பூச்சியாக மாத்திரமே அவர் அங்கு இருந்தார்.
திடுக்கென, விழித்தெழுந்தவர், தன்னைத் தூக்கத்திலிருந்து எழுந்திருக்கும் ஒரு மனிதனாகக் கண்டு கொண்டார்.
ஆனாலும், அவரின் எண்ணத்திரள்கள் இப்படியாய் கேள்விகளைச் செதுக்கலாயின.
“நான் முதலில், பட்டாம்பூச்சியாய் இருப்பது போல் கனவு கண்ட மனிதனாய் இருந்தேனா அல்லது நான் இப்போது, மனிதனாய் இருப்பது போல் கனவு காணும் பட்டாம்பூச்சியாய் இருக்கின்றேனா?”
காட்சிகள் தோன்றி மறையும். எண்ணங்கள் தோன்றி மறையும். இங்கு தோன்றுகின்ற எதையும் தீர்மானிக்கின்ற தெரிவு மட்டும் உன்னிடம் இருப்பது ஆறுதலான விடயம்.
“நீயெதுவென உன்னை எண்ணிக் கொள்கிறாயோ, அதுவாகவே ஆகிவிடுகிறாய்” என கோபாலு சொல்லச் சொன்னான்.
– உதய தாரகை
குறிப்பு: இந்த யூலை மாதம் முழுக்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதிய பதிவை நிறத்தில் பதிவதாய் திடசங்கல்பம் பூண்டு, அந்த சங்கல்பத்தின் பதினைந்தாவது பதிவாய் இந்தப் பதிவு விரிந்தது. நாளை இன்னொரு புதிய பதிவோடு சந்திப்போம்! நன்றி.
இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். 🙂 நான் இங்கே – Follow @enathu
பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.
சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்