அன்றொரு நாள் மாலை வேளை, எனது நண்பனொருவனுடன் கதைத்துக் கொண்டிருந்த போது யோசித்த விடயமொன்றை அண்மையில் Forbes சஞ்சிகை ஆய்வொன்று செய்து அதன் பெறுபேறுகளை வெளியிட்டிருந்தது.
புள்ளிவிபரங்கள் பல வேளைகளில், ஒரு விடயம் சம்மந்தமான தரவுகளை விபரமாகச் சொல்வதில் வெற்றி கண்டு கொள்கின்றன. “எவ்வளவு பணத்தை இந்தப் உலகத்திலுள்ள பணக்காரர்கள் வைத்திருக்கிறார்கள், அவர்களால், உலகத்தையே வாங்கி விடமுடியும் போல..” எனது நண்பன் பணம் பற்றி வியந்து கதைக்கத் தொடங்கினான்.
“குறைந்தது ஒரு நாட்டையாவது, பில் கேட்ஸால், தனது பணத்தால் விலைக்கு வாங்க முடியும்” என்றவாறு அவன் சொன்ன கருத்துக்கு விளக்கம் சொல்ல வழிகள் செய்தான் நண்பன். “ஆமா.. அவங்களால எவ்வளவோ முடியுது.. இதுகூட முடியாமப் போகுதா என்ன?” என்று எனது குறும்பான பதிலையும் அவன் சம்பாஷனைக்குள் சேர்த்துக் கொண்டேன்.
Forbes சஞ்சிகையானது, உலகத்தின் செல்வந்தர்களை பட்டியற்படுத்தும் வேலையை கச்சிதமாகவே செய்து கொண்டேயிருக்கிறது. அந்த சஞ்சிகையின் பட்டியற்படுத்தப்பட்ட முதல் 400 செல்வந்தர்கள், குறைந்தது ஒரு நாட்டையாவது விலைக்கு வாங்குமளவில் செல்வத்தைக் கொண்டுள்ளனர் என்பது வியப்பு.
பில் கேட்ஸின் மொத்த சொத்தின் மதிப்பு, உலகின் 140 நாடுகளை வாங்கிவிடும் அளவிற்கு விசாலமாம். பொலிவியா, உருகுவே போன்ற நாடுகள் இந்த 140 நாடுகளுக்குள் அடங்கியும் விடுகிறதாம் (நல்லா கெளப்புறாங்கய்யா.. பீதிய..).
கடந்த 12 மாதங்களில் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை இழந்த வோரன் பபட் கூட, வட கொரியாவை விலைக்கு வாங்குமளவிற்கு தகுதி கொண்டுள்ளாராம் (ஆஹா.. என்னமா எல்லாம் யோசிக்கிறாங்கய்யா..)
பணத்தின் அளவில் கொண்ட மதிப்பால் இப்படியெல்லாம் Forbes சஞ்சிகை புள்ளிவிபரங்களை எடுக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியிருக்க முடியாது.
எப்போதோ கட்டுரையொன்றில், “அமெரிக்கர்கள் புள்ளிவிபரங்கள் எடுக்காத விடயமே இல்லை. பாதையால் நடத்து கொண்டு செல்கையில் பாப்கோர்ன் சாப்பிட்டுக் கொண்டு செல்வோர் எத்தனை பேர்? என்ற புள்ளிவிபரங்கள் கூட அங்கு சுடச் சுடக் கிடைக்கும்” என்று வாசித்திருக்கிறேன்.
பலவேளைகளில், பிரசினங்களைத் தீர்க்கக் கிடைக்கும் முதல் துப்பாக புள்ளிவிபரங்கள் இருப்பது யாருமே கண்டுகொள்ளாத உண்மை.
நாடுகளைப் பற்றிக் கதைக்கும் போது, நேற்று திங்கட்கிழமை, ஐக்கிய நாடுகள் மனித அபிவிருத்திச் சுட்டெண் வெளியிடப்பட்டது ஞாபகத்திற்கு வருகிறது. எழுத்தறிவு, பாடசாலையில் சேர்தல், ஒருவருக்கான மொத்த தேசிய உற்பத்தி மற்றும் ஆயுள் எதிர்பார்க்கை போன்ற அளவீடுகளே இச்சுட்டெண் கணிப்பீட்டில் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தச் சுட்டெண்ணின் அடிப்படையில் உலகில் வாழ்வதற்கு உன்னதமான நாடாக, நோர்வே தேர்வாகியுள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் ஐஸ்லாந்து ஆகியன இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றுள்ளன.
182 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ள இந்தப்பட்டியலில், இலங்கை 102 ஆவது இடத்திலும், 134 ஆம் இடத்தில் இந்தியாவும், 141 ஆவது இடத்தில் பாக்கிஸ்தான் இருப்பதுவும் கவலை.
இப்படி நாடுகளின் கோலங்கள் விரிந்து செல்ல, நாட்டின் பிரஜைகளின் அறிவின் எழுச்சிக்காய் பணி செய்யும் ஆசிரியர்களுக்கான தினமும் இன்றுதான் என்பது மகிழ்ச்சி. எனது வாழ்க்கையில் பல ஆசிரியர்களைச் சந்திந்துக்கொண்டிருக்கிறேன் (இன்னமுமா படிக்கிறீங்க..? “கல்வி கரையில. கற்பவர் நாள் சில.” என்று சும்மா யாரும் சொல்லியிருக்க மாட்டாங்களே!!??).
கசப்பாய் இருந்தபோதிலும், நோய் போக மருந்தை அருந்தியேயாக வேண்டும். பல ஆசிரியர்களினதும் அணுகுமுறைகள் என்னை புடம் போடச் செய்தலில் பங்கு பெற்றிருக்கிறது. அவர்களின் உணர்வுகளையும் உண்மைகளையும் பற்றி எனது இன்னொரு பிரபஞ்சம் தொடரில், பட்டம் பறக்கும் இரகசியம் என்றும் ஆனைக்கு காலம் வந்தால் பூனைக்குக் காலம் வரும் என்றும் ஏற்கனவே சொல்லியுமிருக்கிறேன். இன்னும் சொல்வேன் (இன்னுமா..?!! சபா.. இப்பவே கண்ணைக் கட்டுதே!!!)
இன்னும் சிலரையும், நான் பாடசாலைகளில் சந்திந்திருக்கிறேன். அவர்கள் ஆசிரியர்கள் என அதிபர் சொன்ன போதுதான் தெரிந்து கொண்டேன். வாழ்க்கை, செங்கல் கொண்டு தலையில் அடிக்கும் ஆனால் சோர்ந்து விடவோ, நம்பிக்கையிழந்து விடவோ கூடாது (என்ன உதய தாரகை!! ரொம்ப பீலிங்ஸா எல்லாம் பில்ட்அப் கொடுக்குறீங்க…??). இது பற்றியும் இன்னொரு பிரபஞ்சம் தொடரில் சொல்லவுள்ளேன்.
சிற்பிகளை உருவாக்கும் சிற்பியாய் திகழும் ஆசிரியர்களுக்கு, நினைக்கும் நல்ல விடயங்கள் எல்லாம் வசமாகும் வலிமை சேர வாழ்த்துக்கள் சொல்கிறேன்.
மெழுகுதிரி என ஆசிரியர்களை உவமித்துக் கூறும் பழக்கம் இன்றும் இருக்கிறது.
பிறருக்கு ஒளி கொடுத்து தன்னிலையை இழந்துவிடும் மெழுகுதிரியை எனக்கு பாடம், வாழ்க்கை என்பன சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கு உவமையாகச் சொல்ல நான் விரும்பவில்லை. அதில் எனக்கு உடன்பாடும் கிடையாது. தன்னிலை இழக்காத நிலையில் தான் ஒரு தனிமனிதனால், அவனின் நிலைகளைப் பற்றி மற்றவர்களுக்குத் தெளிவாகச் சொல்லமுடிகிறது.
அவர்கள் சிற்பிகளாவே இருக்க வேண்டும். கற்களைத்தான் அவர்கள் செதுக்குகிறார்களே!
இது இப்படியிருக்க யாழ்தேவி திரட்டியின் இவ்வார நட்சத்திரப் பதிவராக உதய தாரகை (ஆமா.. அது நான் தாங்க..) தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. சென்று பார்த்தேன். அட ஆமால்ல.. நானே தான். நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன் (ஏனிந்த பில்ட்அப் உதய தாரகை??) யாழ்தேவி திரட்டி நிர்வாகத்திற்கு எனது நன்றிகள் பல.
“என்னடா.. இன்னுமா ஆர்டிகல் (article) எழுதிக் கொண்டிருக்கிறாய்? உனக்கு வேற வேலையே கெடயாதா?” என்று தொலைபேசியில் என்னை அழைத்து ஒரு நண்பன் கேட்கிறான். “இப்படிக் கேட்பதுதானே உனது வேலை என்பதால், உனக்கு வேலை தந்து கொண்டுதான் இருப்பேன்” என்கிறேன் சிலேடையாக.
– உதய தாரகை
சொல்ல நினைப்பதை சொல்லி அனுப்புங்கள்