பறப்பது ஒரு நோய்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 29 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

நாளாந்தம் நாம் பலரைக் காண்கிறோம். சந்திக்கிறோம். ஒவ்வொருவரும் சொல்லுகின்ற கதைகளோடு பயணிக்கிறோம். அவர்களின் கதைகளை கடத்த நம் காதுகளை இரவல் தருகிறோம்.

இந்த நிலை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

இந்தக் கதை சொல்லும், கதை கேட்கும் பாத்திரங்களை ஏற்றுக் கொள்ளும் அத்தனை பேரும் ஒவ்வொரு நாளும் புதிய விடயங்களைப் படிக்கிறார்கள். அல்லது பழைய விடயங்களைப் புதுப்பித்துக் கொள்கிறார்கள்

சொல்கின்ற பாங்கில் கதைகள் கனமிழக்கின்றன. இன்னும் சில கதைகளோ கனம் கொள்கின்றன. கதையொன்றின் வலிமை என்ற பதிவில் இது பற்றி நான் நிறத்தில் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.

இன்று நான் கதைகளின் தொடக்கத்தில் தோன்றும் யோசணைகள் பற்றி யோசிக்கலாம் என்று யோசிக்கலானேன். இப்பதிவு உருவாயிற்று.

பாடசாலைக் கல்வி தொடக்கம் நாளாந்தம் நாம் அறிந்து கொள்கின்ற விடயங்கள் யாவும் நாம் எவ்வாறு யோசனை செய்ய வேண்டும் என்பதை சொல்லித் தருவதாகவே இருக்க வேண்டும். அல்லது அவ்வாறு அவற்றை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

எப்படி யோசிப்பதென்பது, மாயஜால வித்தை அன்று.

think

எதை யோசிப்பது? எவ்வாறு யோசிப்பது என்பது பற்றிய தீர்க்கமான வரையறைகள் தான் எப்படி யோசிப்பதென்பதை புடம் போடுகின்ற ஆணிப்பொன்.

பல நேரங்கள் நாம் கேள்விப்படுகின்ற அல்லது நமக்குச் சொல்லப்படுகின்ற கதைகள், செய்திகள் என பலதும் எமது யோசணையின் தொடக்கமாகிவிடுகிறது.

எதை யோசிப்பது, எவ்வாறு யோசிப்பது என்ற எமது வரையறைக்குள் நாம் சென்று வர வேண்டியிருக்கிறது. உங்களை இன்னொன்றாக மாற்றிவிட தொடர்ச்சியாக உலகம் முயன்று கொண்டுதான் இருக்கும். யோசிப்பது பற்றிய தெளிவு அற்றுப் போனால், இன்னொன்றாக மாறிவிடும் நிலை நடப்பது நிச்சயமாகிவிடும்.

கேட்டதெல்லாம் அமுத வாக்குகள், சொல்லப்பட்டதெல்லாம் அற்புதங்கள் என ஏற்றுக் கொள்வதில் யோசணைக்கான களம் இல்லை. யோசணை என்பது ஆய்வது. அறிவது. தெளிவது.

ஆய்ந்தறிதல் இல்லாமலேயே பல விடயங்கள் இன்றளவில் இயல்பாகவே செய்தியாக்கப்பட்டு விடுகின்றன. கடந்த வருடம், சந்திரனைத் தொட்ட நீல் ஆம்ஸ்ரோங் இறந்த செய்தியை மிகப்பெரிய ஊடகங்கள் கூட, எட்வின் அல்ட்ரினின் நிழற்படத்தை பிரசுரித்து செய்தியாக்கி வெளியிட்டன.

கொஞ்சம் யோசிப்பதென்பது, மிகப்பெரிய ஆழமான செயல். ஆழ்மனதின் ஆற்றலோடு நெருக்கம் கொண்டது. உங்களோடு நீங்கள் பேசிக்கொள்கின்ற உன்னதமான நிமிடங்கள் அவை. தீர்மானம் எடுத்தலின் ஒத்திகை நடக்கும் இடம் அது.

எவற்றைப் பற்றி நான் அக்கறை கொள்ள வேண்டும் என்பது பற்றிய யோசணையில் பல பிரச்சனைகள் மறைந்து போகின்றன. நீங்கள் அறிந்து கொள்வது பற்றிய ஒவ்வொரு விடயம் தொடர்பாகவும் யோசிக்க கொஞ்சம் நேரம் கொடுங்கள்.

ஒருவர் யோசிக்காமல் ஒரு விடயத்தைச் சொன்னாலும், அதைக் கேட்பவர் யோசிப்பதால், அந்த விடயம் தொடக்கம் காண பகிர்ந்து கொள்ளப்பட வேண்டுமா இல்லையா என்ற கேள்விக்கு விடை கிடைக்கிறது. உங்களால், வேண்டப்படாத செய்தியொன்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதால், நிம்மதியடைவோரை நீங்கள் எண்ண வேண்டும்.

சின்னச் சின்ன விடயங்களால் சஞ்சலப்படுவோர் தொகை அதிகம். கேட்பது பற்றிய கரிசணையில், சொல்பவர் பற்றிய நம்பிக்கையில் பலரின் மனதுகளுக்கு சஞ்சலங்கள் பரிசளிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. கொஞ்சம் யோசிக்கலாமே!

“கூண்டுக்குள் பிறக்கும் குருவி, பறப்பது ஒரு நோயென்றே நம்பிக் கொள்ளும்” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

- உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். :) நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

வெளிச்சம் வேண்டாம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  2 நிமிடங்களும் 9 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

கடந்த வாரம் முழுக்க, என் பேருந்துப் பயணங்களின் துணையாக Brené Brown இன் The Gifts of Imperfection என்ற நூல் இருந்தது. வெறும் வார்த்தைகளால் உளவியல் பேசாமல் வாழ்க்கையின் நிகழ்வுகளால் விடயங்கள் சொன்ன பாங்கு பிடித்திருந்தது.

இந்த நூலை, வெறும் மகிழ்ச்சிக்கான வழிகளைச் சொல்லுகின்ற இன்னொரு நூலாக கண்டு கொள்ள முடியாது. மாறுபட்டதும் சொல்லவந்த விடயத்தை தெளிவாகச் சொல்லிருப்பதும் தான் சுவை.

ஒருவன் தன் குறைகளை பற்றிய புரிதல்களோடு, அவற்றை தைரியமாக தன் நிலை என புரிந்து கொண்டு, தன்னோடு அன்பாகப் பரிவோடு நடந்து கொள்ளும் நிலையில் தான் அவனால், மற்றவர்கள் தொடர்பான அன்பு பற்றிய புலன் தோன்ற முடியும் என்கிறார் Brené Brown.

happiness-tower

ஒரு தசாப்த காலத்தின் ஆய்வுகளின் ஆதாரங்களைக் கொண்டு மனவள ஆரோக்கியம் முதல் உளவியல் சமநிலை என இந்தப் புத்தகம் தொட்டுச் செல்கின்ற பரப்பு விசாலமானது. நேரம் வாங்கி, இந்த நூலை வாசியுங்கள். ஆனால், இந்தப் பதிவின் நோக்கம் அந்தப் புத்தகத்தைப் பற்றி மட்டும் சொல்வதல்ல.

இன்றளவில் அதிகமானோரின் மூச்சாகியிருப்பது முறைப்பாடு தான். “மொறப்பாட்டுத் தாள்” என்று foolscap கடதாசியை விழிக்கின்ற அளவிற்கு ஒரு சமூக நிலைக் காலங்கள் இருந்தது என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இன்னும் தொடர்கிறதா எனத் தெரியாது.

மகிழ்ச்சி தொலைந்து போய்விட்டது. அதுபற்றி முறைப்பட்டுக் கொள்கிறோம். கேட்பவர் ஆறுதல் சொல்கிறார். ஆதரவாய் வருகிறார். மாற்றங்கள் தோன்றுகிறது. மீண்டும், மகிழ்ச்சி தொலைந்து போய்விட்டது. அதுபற்றி முறைப்பட வேண்டும். இவ்வாறு முறைப்பாட்டுச் சக்கரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இங்கு உங்கள் கவனத்தை இந்த முறைப்பாட்டுப் படலம் தோன்றுவதற்கான மூலம் பக்கம் கொண்டுவர விரும்புகிறேன். பல நிலைகளில் முறைப்பாடுகளின் முக்கியமான மூலமாக, கடந்து போன நிகழ்வுகளின் நினைவுகள், வரப்போகின்ற வருங்காலத்தின் அனுமானங்கள் கலந்த எண்ணங்கள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

அலைபாயும் மனத்தின் பெறுதிகளாகத்தான் இந்த நினைவுகளும் எண்ணங்களும் தோன்றுகின்றன. மனத்தின் பண்பு அலைபாய்வதுதான் என்பது பிரபஞ்ச மெய்.

ஆக, முறைப்பாடு செய்ய முடியாத, கவலைகள் மறந்த, மகிழ்ச்சியே கொண்ட நிலைகளை எம்மால் பெற்றுக் கொள்ள முடியுமா? என்ற கேள்வி பலமாகவே எழுகிறது.

எமது அலைபாயும் மனதின் எண்ணங்களின் ஓட்டத்தோடு நாமும் பயணிப்பதால், இந்தக் கணத்தில் இடம்பெறும் எம்சூழல் பற்றிய நிலைகளை மறந்துவிடுகிறோம். இந்தக் கணத்தில் இருக்க உங்களால் முடியுமென்றால் அதுதான் மகிழ்ச்சி.

வாழ்க்கை என்பது இந்தக் கணத்தின் நுகர்விலும் அந்த நுகர்வின் நிலையில் தோன்றும் அனுபவங்களின் சேர்மானங்களிலும் தான் வலுப் பெறுகிறது.

நாளைக்கான ஆயத்தம் செய்து கொண்டு பலர், பல இன்றுகளைத் தொலைத்து விடுகின்றனர். நாளை என்பதும் ஒரு இன்றாகும், அன்று அவர்கள் அந்த “நாளையைக்” கூட தொலைத்திருப்பார்கள்.

வேகமாகச் சுற்றிச் செல்லும் இந்தப்பூமிக் கோளின் நிலை, தனது ஒவ்வொரு கணத்தையும் ரசித்துக் கொண்டிருக்க, அதிலிருப்பவர்கள் இந்தக் கணங்களை சென்ற கணங்கள் பற்றியும் வரும் வயது பற்றியும் மனதோடு மணந்து போய்விடுகின்றனர். மன ஒப்பாரி வைக்கின்றனர்.

இந்தக் கணத்தின் நிலையோடு மொத்தக் கவனத்தையும் செலுத்திக் கருமங்கள் செய்ய மகிழ்ச்சி தானே வந்து குடிகொண்டுவிடும். இதைத் தேடக்கூடாததில் நான் முன்னர் நிறத்தில் சொல்லியிருக்கிறேன்.

பூமி என்பது ஒரு சடப்பொருளால் அமைந்த ஒரு நிலையான பொருளல்ல. அது அசைந்து கொண்டிருக்கிறது. மாறிக்கொண்டிருக்கிறது. நீங்கள் வாசிக்கின்ற இந்தக் கணம் என்பது பூமியில் திரும்ப வராது. பூமி என்பது பொருளல்ல. ஒரு செயற்பாடு. அந்த செயற்பாட்டில் உங்களை நீங்கள் ஒவ்வொரு கணமாக திளைத்திருக்கச் செய்வதால் உங்களுக்கு முறைப்பாடு செய்வதற்கான தேவை தோன்றாது.

அப்போது மகிழ்ச்சி கதவைத் தட்டும். அலைபாய முடியாத மனது தன் தலையைத் தானே கொட்டும்.

மகிழ்ச்சியை நுகரச் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான், என்ன கருமம் செய்தாலும் அந்தக் கருமத்தோடும் அந்தக் கணத்தோடும் ஒன்றித்து முழு அவதானத்தையும் கொடுக்க வேண்டும். அந்நிலையில் துக்கம் இருக்காது. துயரம் துணை வராது. வெளிச்சம் உண்டாகும். மகிழ்ச்சி மேலோங்கும்.

ஆனால், பிளேட்டோ, சொன்ன ஒரு விடயத்தை கோபாலு ஞாபகப்படுத்தச் சொல்கிறான். “ஒரு குழந்தை, இருட்டைக் கண்டு பயப்படுவதை மன்னித்துவிடலாம். ஆனால், வளர்ந்த மனிதர்கள் வெளிச்சத்தைக் கண்டு பயப்படுவதுதான் வாழ்க்கையின் மிகக் கொடிய நிலை.”

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். :) நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

நீ, நீராகவிருக்க வேண்டும்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 29 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

அழியும் உலகமும் அழியாத ஆசைகளும் என்ற பதிவில் நிரம்பி வழிகின்ற கோப்பை பற்றிய கதையொன்றைச் சொல்லியிருப்பேன்.

இன்றளவில் அதிகமானோர் தாம் கேள்விப்பட்டவையெல்லாம், அவை பற்றிய எந்த ஆய்தலும் இல்லாமல் நிஜமானதென நம்பி செயலிலீடுபடுகின்றனர்.

ஆய்தறியப்படாத விடயங்களின் தொட்டிகளாக, அவர்களின் மனது நிரம்பி வழிந்து கொண்டிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லை போன்றே தோன்றுகிறது.

ஒரு முக்கோணமொன்றை உருவாக்கி, அதனுள்ளே தம்மை பொருத்திக் கொண்டால், உலகமே சுபீட்சம் கண்டுவிடுமென எண்ணிக் கொள்வது பலரின் வழியாகிவிட்டது.

கொஞ்சம் முக்கோணத்தைத் தாண்டியும் வரலாம். அதைத் தாண்டியும் இன்னொரு விலாசம் இருக்கிறது என்பது பற்றி யாரும் சொல்ல முடியாதுள்ளது. முக்கோணத்திற்குள் முழுக்காதுகளையும் அவர்கள் இரவல் கொடுத்துவிட்டே வெளியே எட்டிப் பார்க்கின்றனர்.

முக்கோணத்திற்குள் தம்மைப் பொருத்திக் கொண்டு, அந்த வடிவத்தை ஏற்கும் பலர், தாம் யார் என்பதையே மறந்து போவதுதான் கொடூரம்.

be-yourself

நீ, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான வடிவங்கள் பற்றிய விடயங்களை அறிந்து கொண்டபோதும், முக்கோணம் மட்டுந்தான் வடிவம் என்று முக்கியச் செய்தி போல் ஒவ்வொரு போது சொல்கிற போது, நான் உனது கண்ணாடியாக இருப்பேன். அதை நீ கவனிக்கவில்லையா?

ஒரு வடிவத்திற்குள் பொருத்தி அதுவாகவே மாறிய நீ, உன் இயல்புகளையும் தொலைத்துவிட்டிருக்கிறாய் என்பதைச் சொல்லவே நான் கண்ணாடியாகி நிற்பேன். கண்டு கொள்ளமாட்டாயா?

உன் புலன்களைக் கூடவா, அந்த முக்கோணத்திற்குள் முடக்கி வைத்திருக்கிறாய்?

13ஆம் நூற்றாண்டின் அற்புதக் கவிஞர் ரூமி சொன்னவொரு விடயத்தை உன்னிடம் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. “நான் நேற்றுவரை கெட்டிக்காரனாக இருந்தேன். உலகத்தை மாற்றிவிட வேண்டுமென எண்ணினேன். இன்று நான் ஞானமுள்ளவனாய் இருக்கிறேன். என்னில் மாற்றங்களை கொண்டுவர எண்ணுகிறேன்”

குட்டி யானையின் காலில் கட்டிய கயிறு போன்று உன் மனதின் எண்ணங்கள் மாறிட வழிசெய்யாதே!

உனக்குள்ளே ஆய்ந்தறிதல் பற்றிய ஆசை தோன்ற வேண்டும். நீ நடனமாடி அனுபவம் காண வேண்டும். உனக்காக உன்னைச் சுற்றி நடனமாட ஆட்கள் தேடாதே! அனுபவம் கால்கிலோ கணக்கில் விற்பதில்லை.

போகும் இடமெல்லாம், அந்த இடத்தைப் போன்றே தன் வடிவத்தை மாற்றிக் கொள்ளும் நீர் பற்றி நீ அறிவாயல்லவா? அது ஒருபோதும் அதன் தன்மையை, இயல்பை இழப்பதில்லை.

நீரைப் போல் நீ வளைந்து செல்ல வேண்டியிருக்கிறது. நீ எந்த வகையில் உன் வடிவங்களை மாற்றிக் கொண்டாலும், உன் உண்மையான “உன்னை” தொலைத்துவிடக்கூடாது.

நீர், தன் வடிவத்தோடு தன் குணத்தையும் மாற்றிக் கொண்டால், அது அத்தருணம் முதல் நீராகாது. அதற்கு வேறு பெயர் வைப்பார்கள்.

எதுவோ, அதுவாகவிருத்தல் பற்றிய விஞ்ஞானத்தை நீ அறிய வேண்டும். ஒரு விடயத்தில் நாம் கொள்கின்ற இயைபாக்கம் பற்றிய நிலைகளை நீ புதுப்பிக்க வேண்டும்.

நீ நீராகவிருந்தால், எத்தனை பாத்திரங்களும் ஏற்கலாம், எத்தனை வடிவங்களும் கொள்ளலாம். ஆனால், இயல்புகளின் மாற்றங்கள் தோன்றாது.

நீ இயல்பிலேயே ஆய்ந்தறியும் ஆற்றல் உள்ளவன்தான் — உன் முக்கோண வலயம் உன்னை அதைச் செய்யாமல் முடக்கிவிட்டிருக்கிறது.

நீ இந்தக் கணத்திலிருந்து செய்யும் ஒவ்வொரு செயலும், ஆய்ந்தறிந்ததாய் இருக்கட்டும். என்னதான் பாத்திரம் கொண்டாலும், உன் செயல்கள் உன் உண்மையான இயல்பைக் கொண்டிருக்கட்டும் மகனே!

– உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். :) நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

என் மகனே!

இந்தப் பதிவை ஒலி வடிவில் கேட்க:



iTunes இல் நிறம் Podcast Niram Podcast
(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 9 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

என் மகனே!

திண்மம். திரவம். வாயு. நீ. உன் கனவுகள் அத்தனையும் உன் எண்ணங்களுக்குள் படர்ந்திருக்கிறது. உன் நம்பிக்கை தன் கால்களை நிலைநிறுத்திக் கொள்ளும்.

உன் ஆசைகள் விலாசம் பெறவுள்ளன. நீ எதிர்பார்த்தவையெல்லாம் உன்னை எட்டித்தொட பாய்ந்து கொண்டும்வரும். உன் பயத்தைக் கூட பயமறியாது. மனவுளைச்சல் என்பதைப் பற்றி உனக்கு எண்ணங்கள் சொல்லித்தரக்கூடும். ஆனாலும், இது எல்லாமும் தான் நீ.

son

உன்னைப் போல உலகத்தில் வேறொன்றும் கிடையாது. உனக்கும் தனித்துவமாய் நீ இருப்பதுபோலவே, மற்றவரும் உன்னைத் தனித்துவமாகக் காண வேண்டும்.

நீயல்லாத இன்னொன்றால் உலகம் முழுமை அடையாது. உன் பங்களிப்பில் அது உயிர்ப்புக் கொள்ளும்.

அன்பைப் பொக்கிசமாக்கிக் கொள்ள நீ உருவாகியிருக்கிறாய். உன் பொக்கிசத்தை உலகமெலாம் விதைக்க நீ வழி சமைக்கலாம். உன் அன்பினால் இந்தக் கணம் உயிர் கொள்வதும் நாளை விடிவதும் நடக்க வேண்டியிருக்கிறது.

அன்பை நீ தேடித் திரியக்கூடாது. உனக்குள் நீயே கட்டியிருக்கும் வெறுப்பு வேலிகளைத் தேடிப்பிடித்து துவம்சம் செய்ய வேண்டியிருக்கிறது.

உனக்கு தேவையானதைப் பெற, வழியை உருவாக்குவாய் என நம்புகிறேன். பெற முடியாமல் போச்சே என்பதற்கு சாட்டுப்போக்குகளை நீ தேடித் திரியக்கூடாது.

மகிழ்ச்சிக்கு நீ முகவரி தர வேண்டும். மகிழ்ச்சியே உன் உருவாக வேண்டும். உன் கனவின் நோக்கம், பறந்து திரியும் பறவைகளாலோ, கூவித் திரியும் குயில்களாலோ அல்லது எத்தித் திரியும் மனிதர்களாலோ திரிபு கண்டுவிடக்கூடாது.

உன் சின்னச் சின்ன அசைவுகளைக்கூட இந்த உலகம் ரசிக்கத் தொடங்கலாம். ஆனாலும், திடமாகவே நீயெதுவோ அதுவாகவே இருக்க வேண்டுகிறேன்.

உன் வானத்தின் நட்சத்திரங்களைப் பற்றி அவர்களுக்கு நீ சொல்லிக் கொடுக்க வேண்டும். உன் வானச்சூரியனும் இன்னொரு நட்சத்திரம் தான் என்ற உண்மையை அவர்கள் உணரச் செய்ய வேண்டும்.

அர்த்தப்படும் வாழ்வின் சுவைகளை ரசிக்க உனக்கு கணங்கள் நிறையத் தேவைப்படலாம். ஆனால், அர்த்தங்களைத் தேடித் திரியாமல் நீ வாழ்வை ரசிக்க வேண்டியிருக்கிறது. அதனாலேயே வாழ்வு இயல்பிலேயே அர்த்தப்பட்டுவிடும்.

நீ ரசிக்கின்ற விடயங்களை செய்து கொண்டேயிரு. மகிழ்ச்சிக்கு விலை கேட்டு மற்றவர்கள் வாங்கிட முயன்றிடட்டும்.

எதுவுமே நிரந்தரமானதல்ல என்பதை நீ தெரிந்திருக்கலாம். ஆனால் எல்லாமும் உன்னதமானவையுமல்ல என்பதையும் நீ தெரிய வேண்டும். மாற்றங்கள் மட்டும் தான் மாறாதது என்பதை நீ உணர வேண்டும்.

நீ ஒரு பரிசு. உன்னை யார் வெறுத்தாலும், ஒருபோதும் உன்னை நீ மட்டும் வெறுத்துவிடாதே! இங்கு எல்லாமும் நீதான்.

உன்னை நேசிக்கும்,
உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். :) நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.
ஒலிக்கோப்பிற்கான இசை வழங்கியது Kevin McLeod. நன்றி.

முடிவிலியின் அந்தம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 23 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

சமுத்திரங்களைக் கடப்பது போன்றுதான் வாழ்க்கையை வாழ்வது பற்றிய அமைப்புகள் இருக்கின்றன. சமுத்திரங்களைக் கடக்க யாருக்குத்தான் தேவை உண்டு?

ஆனாலும், வாழ்க்கை வாழப்பட்டுக் கொண்டே போகிறது.

அடுத்த அடியில் ஆழமாயிருக்குமோ — இன்னும் கொஞ்சம் நேரத்தில் கண்ணுக்குள் கரையின் காட்சி தோன்றிடுமோ என்ற ஆர்வம் தான் சமுத்திரங்களைக் கடக்க நினைக்கையில் இருக்கும். வாழ்க்கையும் அப்படித்தான்.

நீங்கள் நினைக்காவிட்டாலும், அது அப்படியாகவே நடந்தும் விடுகிறது.

சமுத்திரங்களைக் கடத்தல் பற்றிய விஞ்ஞானம் வித்தியாசமானது. இந்த அற்புதமான அறிவியலின் நிலையை “பை” என்ற கதாபாத்திரத்தின் வழியாக எழுத்தாளர் யான் மார்டல் தனது புனைவில் சொல்லியிருப்பார்.

சமுத்திரங்களையும் கடலையும் நீங்கள் ஒன்றாக எண்ணிவிடக்கூடாது. கடல் என்பது கரையின் கருவில் தான் முகவரி கொள்கிறது.

முடிவிலியின் அந்தம்

காற்றினால் துவம்சமாகும் கடல்கள் எழுப்பும் ஒப்பாரிகளைக் கேட்டு, சமுத்திரம் கண்ணீர் வடிப்பதை நீங்கள் கண்டதுண்டா?

சமுத்திரங்கள் பற்றிய எமது அறிவும் எம்மைப் பற்றிய சமுத்திரங்களின் அறிவும் இரு வேறு காவியங்கள். இங்கு காவியங்கள் நிறைய இருப்பதால் வாசிக்கப்படாமலேயே அவை வரலாறுகள் ஆகிவிடுகின்றன.

வானம் தொடுகின்ற சமுத்திரத்தின் அந்தத்தைக் காண முடிந்த உங்களால், சமுத்திரம் தொடுகின்ற பூமியின் ஸ்பரிசத்தை உணர முடிவதில்லை. இங்கு தோன்றலில் பிழை எதுவுமில்லை. நோக்கத்திலும் நோக்குவதிலும்தான் வழு உண்டு.

ஆனாலும், பூமியின் ஸ்பரிசத்தைக் உணர்ந்த நிலையில் உங்கள் காயத்தின் வழியாக பெரும் தண்மதியின் வெளிச்சத்தைக் காண்பீர்கள். ஆழியின் ஆழத்திற்குச் சென்றாலும், உங்கள் கண்களுக்கு ஒளி தரும் ஒரு சுவடாய் அது இருக்கும்.

வெறுப்பவர்கள் வெறுக்கட்டும். தூற்றுபவர்கள் தூற்றட்டும். கத்துபவர்கள் கத்தட்டும். ஆனால் உன்னால் எப்போதும் காண முடிகின்ற அந்த நிலவின் ஒளியை மறக்காமலிருக்க வேண்டும்.

வெறுப்பின் கோபங்களை வெறுமையாக்க, கோபத்தைச் சமுத்திரத்தோடு கலந்துவிட வேண்டியிருக்கிறது. காயமில்லாதது சமுத்திரம். அதனால் அதற்கு காயமும் வராது. உன் கோபங்கள், உன் காயத்தை காயப்படுத்திட காலத்திற்கு இடம் தரமுடியாது.

கடலோடு கடுமையாய் நடக்கலாம் — உன் ஆன்மாவோடு மென்மையாக இருக்க வேண்டியிருக்கிறது. இது சமுத்திரங்களைக் கடக்கின்ற அப்பியாசம்.

உன் அடுத்த கணத்தின் ஆரம்பம், கரையாக இருக்கலாம். களிப்பின் விளைநிலமாக விரியலாம்.

ஆனாலும், நீ வெறும் கடலைக் கடந்து செல்ல ஆர்வங் கொள்ளக்கூடாது. கடல் அமைதியானது. திசைகள் தொலைத்தது — உனக்கு திசைகளைக் கண்டிட ஆதாரமாய் இருப்பது. அந்நிலையின் நீ காண்கின்ற உனக்கே உரித்தான நிலவொளியைப் பற்றி மறந்து போயிருப்பாய். இந்த வினையில் உழைத்தல் இருக்காது. போராட்டமும் நிலைக்காது.

நீ காணும் உன் நிலவொளியோடு ஒரு திசை செய்ய வேண்டும். அது உனக்கு சமுத்திரங்கள் தாண்டிச் செல்லும் வலு சேர்க்கும்.

“உன் காயமெனும் சுக்கான் சமுத்திரம் கடப்பதா அல்லது வெறும் கடலைக் கடந்து கரைகளில் அழிந்து போகும் மணல்வீடாய் விழுவதா என்பதை நீதான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது.” — கோபாலு சொல்கிறான்.

நேசத்தோடு சேர்ந்து திசை செய்ய ஆசிகள்.

- உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். :) நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

பணமரம்

(இந்தப் பதிவை வாசிக்க சுமார்  1 நிமிடமும் 54 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

அது நவம்பர் மாதம் தொடங்கிவிட இன்னும் ஓரிரு நாட்கள் காணப்பட்ட சூழல். நெடுநாட்கள் கழித்து என்னைக் காணவந்தான் என் நண்பனொருவன்.

நெடுநாட்களின் தெரியாத சங்கதிகளை சுவை சேர்த்து குறுகிய நேரத்திற்குள் பகிர்ந்து கொண்டோம். விடைபெறும் நேரத்தில், “உனக்கொரு கிப்ஃட் கொண்டு வந்திருக்கேன்” என்றவாறு என்னிடம் ஒரு பொதியைத் தந்தான்.

பொதியைப் பெற்று, அவனையும் வழியனுப்பிவிட்டு, வீட்டினுள் வந்தேன்.

பொதியில் தந்த பரிசு என்னவாயிருக்கும் என்ற ஆர்வக்கேள்விக்கு விடை தேட, வேகமாக பொதியைப் பிரிக்கலானேன்.

treeofmoney

பொதிக்குள் ஒரு குட்டி மரம் — ஆமாம், அது பணமரம்.

இது சீனர்களின் பாரம்பரியத்தில் வருகின்ற பணமரமல்ல. இது உண்மையான பணமரம்.

அணுக்களால் பிரபஞ்சம் ஆக்கப்பட்டதல்ல, அது பணமரத்தின் கிளைகளின் நிழல்களால் தாக்கப்பட்டது என்பதாய் விசாலமாய் விரிந்து வளரத்துடித்த அந்த பணமரத்தின் கிளையொன்று சொல்லியது எனக்குப் புரிந்தது.

“விருட்சமாய் வியாபிக்க நினைக்கும் உன் கனவின் தொடக்கத்திற்கு நான் தரக்கூடியது என் ஜன்னலோரக் கண்ணாடியின் முகம்தான்” என்றவாறாய் பணமரத்திற்கு வீடு தருகிறேன்.

தொடர்ச்சியாக நீருற்றி பராமரிக்க வேண்டும் என்றெல்லாம் எனக்கு விடயங்கள் சொல்லப்பட்டன.

காலைநேரத்தின் கதிரவனைக் காணும் என் ஜன்னல் கண்ணாடியின் தோழனாய் பணமரம் இரவோடிரவாக மாறிக் கொண்டது.

என் கரம் பற்றிக் கொண்ட போதெல்லாம், அது மெல்ல மெல்ல முளைத்துக் கொண்டுவிடுவதைக் கண்டு உவகை கொள்வேன்.

அதன் மெதுவான முன்னேற்றம் அதன் கிளைகளுக்கு வலிமை கொடுத்தாலும், என் எண்ணங்களுக்கு வானமும் கொடுத்தது.

பணி முடித்து பல மணிகளுக்கு பின்னர் வீடு வந்து அந்த மரத்தைக் காண்கின்ற போது, சோர்ந்து போய் இருக்கும். என் ஸ்பரிசத்தில் புத்துணர்ச்சி பெற்றுக் கொள்ளும்.

பணமரத்தின் இயல்பான வாழ்வையும் அதன் ஒவ்வொரு கிளையும் கொண்ட பிரபஞ்சத்தின் விலாசங்களையும் கண்டு வியந்திருந்திருக்கிறேன். ஒரு விஞ்ஞானமும் இந்த விலாசங்களுக்கு விலாசம் கொடுத்ததில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அது காலை வேளை, சூரியனும் அற்புதமாய் ஒளி தந்து சூழலை ரம்மியமாக்கியது. காற்று வரட்டுமே என்று ஜன்னலை திறந்து விட்டு, வெளியே சென்று விட்டேன்.

அன்று பணமரத்திற்கு மகிழ்ச்சி அலாதியாய் இருந்திருக்க வேண்டும்.

நிலைகளை மாற்றிக் கொள்வதில் காலநிலைக்கு எப்போதுமே இருக்கும் பிரியம் அன்றும் தொடர்ந்தது. பெய்யெனப் பெய்த மழை ஜன்னலையும் தாண்டி பணமரத்தையும் துவம்சம் செய்து விட்டுள்ளதை வீடு திரும்பியதும் கண்டேன்.

கவலை — மௌனம்.

விழுந்தாலும், எழுவேன் என்ற நம்பிக்கையோடு பணமரம் தரையில் ‘வியாபித்துக்’ கிடந்தது. கையில் அதனைப் பற்றிக் கொண்டு அதன் கண்ணீரைத் துடைக்கலானேன்.

“உன்னைவிட, நீ வேறொன்றை நேசித்து, பின் அதனை இழக்கும் போதே, நீ இழப்பின் உண்மையான வலியை உணர்ந்து கொள்கிறாய்” — அதன் ஒரு கிளை உரக்கச் சொல்லியது.

அதன் கிளைகள் சொல்லிய ஒவ்வொரு விடயத்தையும் கேட்டு, தூங்கிய எனக்கு எழும்பிய போதெல்லாம், அவை சொன்ன அத்தனை உணர்வுகளோடு என்னோடு ஒட்டிக் கொண்டு பயணிப்பதான உணர்வு தோன்றியது.

இந்தக் கிளைகளின் உணர்வு ஒட்டிப் போன கதையை யாரிடம் தான் சொல்லலாம். யார்தான் கேட்கப் போகிறார்கள் என்ற முடிவெடுக்கப்பட்ட அனுமானங்களின் தொடக்கங்கள் எனக்குள் நிலை கொண்டாலும், நான் கிளைகளோடு ஐக்கியமாயிருந்தேன்.

நிஜச்சூழலில் நடப்பது பற்றிய துலங்களைத் தரக்கூட எனக்கு முடியவில்லை. இந்த கிளைகளின் உணர்வுகள் அப்படி ஒட்டிக் கொண்டுவிட்டது.

ஜன்னல் கண்ணாடிக்கருகில் இருந்த பணமரத்தை நான் இப்போது, என் கைகளுக்கு எட்டிய தூரத்தில் வைத்து அழகு பார்க்கிறேன். கிளைகளோடு சிலாகித்துக் கொள்கிறேன்.

இப்போது நான் தலையணைக்கடியில் வைத்து அந்த மரத்தை வளர்க்கின்றேன். என் காதோரமாய் அது பாடும் தாலாட்டுப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது. கூடவே கனவின் ஓரத்தில் பணமரம் நின்று, உதிரும் இலைகள் விழுகின்ற ஓசைகளையும் என்னால் கேட்க முடிகிறது.

பணமரங்களோடு நேசம் வைத்திருப்பது, மற்றையவற்றுடன் நேசம் வைத்திருப்பதைக் காட்டிலும் விஷேசமானது. உங்கள் கவனத்தை அதற்கு வழங்க வேண்டும். மன ஓர்மையாய் இருக்க வேண்டும். நேரத்தை அதற்காகத் தர வேண்டும். அதனோடு உன்னிப்பாக இருக்க வேண்டும். உலகத்திலே இத்தனையும் வேண்டிநிற்கும் ஒரு நேசம் பணமரத்தின் நேசமாகத்தான் இருக்க வேண்டும்.

“இந்த நேசம் எனக்கு ரொம்பப் பிடிக்கும்” என்று கோபாலு சொல்லச் சொன்னான்.

(யாவும் கற்பனை அல்ல)

- உதய தாரகை

இவ்வளவு வரைக்கும் வாசித்து வந்துவிட்டீர்களாயின் கட்டாயம், நீங்கள் என்னை Twitter இல் பின் தொடரலாம். :) நான் இங்கே –

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

நிம்மதிகளைச் சேமித்தல்

இந்தப் பதிவை ஒலி வடிவில் கேட்க:



iTunes இல் நிறம் Podcast Niram Podcast
(இந்தப் பதிவை வாசிக்க சுமார் 1 நிமிடமும் 16 செக்கன்களும் தேவைப்படும்.) [?]

இது குளிர்காலம். விண்வெளிக்கு செல்வது போன்று, உடையணிந்து வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் இன்னும் கொஞ்ச நாளில் வந்துவிடும்.

மழைபெய்யும் மத்தியானத்தில் போர்வைக்குள் போர்த்தி கிடந்திருப்பது எப்படியோ, பனிவிழும் இரவில் மெளனமாய், பனி விழும் மௌனத்தைக் கேட்பதும் அற்புதம் தான்.

புகைகள் நிரம்பிய கனவு. பூராய் மழைபொழியும் காட்சி. தடுக்கிவிழுவதாய் நெஞ்சு கணத்து திடுக்கிட்டு நினைவுக்கு வரும் கனவின் விளிம்பு. மறந்து போகும் முக்கியமான கனவின் முகவரி.

சிந்திய தேநீர் சேமிக்கும் நிம்மதி

ஞாயிற்றுக்கிழமை. விடிகின்ற காலை. வித்தியாசமான வானம். மெல்லியதாய் காற்று. அடுத்த அடிக்கு அப்பால் இருக்கும் உன்னை காணமுடியாத பனிமூட்டம். கண்களை ஆவியால் வாட்டும் சுடும் தேநீர்க் கோப்பை.

இறுதிச் சொட்டுவரை நக்கி உண்ணப்பட்ட பனிக்கூழின் ரப்பர்க் கரண்டி. பனிக்கூழ் தொலைத்து ரப்பரின் சுவையைக் கண்டு விழிக்கும் நாக்கு. முடிவில்லாத பாதைகளின் முனைகளை நோக்கிப் பாயும் சைக்கிள் சக்கரங்கள்.

ஐபோனின் அழைப்பு மணியின் அதிர்வு. “அடிப்பதை நிப்பாட்டிடு” எனக் கட்டளையிட்டு அடித்தடித்தே ஓய்ந்து போகும் அலாரம்.

காலை நேர முகத்தில் படும், சுடுநீரின் குளிர். கண்ணாடியில் சரிசெய்து கொள்ளக் கேட்கும் தலைமுடி. பசையாய் ஒட்டி வாழ வேண்டுமென நினைத்தும் பட்டுவிட்டு வெளியே துப்பித் தொலைக்கப்படும் பற்பசை.

காகிதத்தோடு காதலாகிப் போன, அந்தப் பேனாவின் முத்தம். “ஒரு சொல்லால் முத்தம் தா, நான் பதிலுக்கு ஒரு பந்தியாய் முத்தம் தருகிறேன்” — என்ற காகிதத்தின் ஆசை.

அவன் விரல்களின் ஸ்பரிசத்தில் அழகாய் கானமிசைக்கும் கணினி. கணினியோடு சேர்ந்து அழாமலே கண்ணீர் சொட்டும் அவன் கண்கள்.

புயலின் வலிமைக்கு பொத்துப்போன அந்தக் குடிசையின் கதவு. விடிகின்ற வேளையில் ஒப்பாரி வைக்கும், அக்கதவின் அகலப்பிழந்த வாய். நிலவைக் கூட்டிக் கொண்டு வீட்டுக்கு வரும் கோபாலு. நிலவோடு கண்சிமிட்டிக் காதல் செய்யும் உடுக்கள்.

பாய்ந்து பாய்ந்து மரம் தாவும், குரங்கின் குதூகலம். தான் காயப்படுத்தப்பட்டேன் என்றே நிலத்தில் விழுந்து ஆயுள் இழக்கும் குரங்கின் வாயகன்ற மாங்காய். இது பழமென்று தெரிந்திருந்தால் குரங்கிற்கு முன்னரே குறிவைத்திருக்கலாமே — பள்ளிச் சிறுவனின் கவலை.

உணர்வுகள், உயிர்கள், உண்மைகள் என எல்லாமுமே சேமிக்கக்கூடிய நிமிடங்களைத் தந்துவிடுகிறது. நிம்மதிகளாய் சேர்ந்துவிடுகிறது.

தபாலில் பரிசுப்பொதியொன்று எதிர்பாராததாய் வந்து தரும் பூரிப்பை, இன்று தபாலில் அனுப்பியிருக்கிறேன்.

இப்படி இத்தனையாய்ச் சேமிக்க முடிந்த நிமிடங்கள் எப்போதும் நிலைத்திருப்பதில்லை. உங்களோடு நிமிடங்கள் நிம்மதி தருகையில் சேகரித்துக் கொள்ளுங்கள். வறட்சியிலும் மழை தரும். மாரியிலும் வெயில் தரும்.

“நல்லவைகள் எப்போதும் நிலைப்பதில்லை,” — கோபாலு சொல்கிறான். 2012 உம் அப்படித்தான்.

அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்.

- உதய தாரகை

மறுமொழி சொல்லி ட்விட்டரில் தொடர நான் இங்கே. :)

பதிவில் வடிவமைத்து இணைக்கப்பட்டுள்ள, நிழற்படம் இங்கிருந்து எடுத்தாளப்படுகிறது.

Follow

Get every new post delivered to your Inbox.

Join 630 other followers

%d bloggers like this: